1 Corinthians · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

1 Corinthians 9

1நான் அப்போஸ்தலன் அல்லவா? நான் சுதந்திரவாளி அல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நான் தரிசிக்கவில்லையா? கர்த்தருக்குள் நீங்கள் என் செயல்களாக இருக்கிறீர்களல்லவா?

2நான் மற்றவர்களுக்கு அப்போஸ்தலனாக இல்லாமற்போனாலும், உங்களுக்கல்லவோ அப்போஸ்தலனாக இருக்கிறேன்; கர்த்தருக்குள் நீங்கள் என் அப்போஸ்தல ஊழியத்திற்கு அடையாளமாக இருக்கிறீர்களே.

3என்னை நியாயம் விசாரிக்கிறவர்களுக்கு நான் சொல்லுகிற மறுமொழி என்னவென்றால்:

4புசிக்கவும் குடிக்கவும் எங்களுக்கு உரிமை இல்லையா?

5மற்ற அப்போஸ்தலர்களும், கர்த்தருடைய சகோதரர்களும், கேபாவும் செய்கிறதுபோல, விசுவாசியாகிய ஒரு மனைவியை கூட்டிக்கொண்டுபோக எங்களுக்கு உரிமை இல்லையா?

6அல்லது, கைத்தொழில் செய்யாமலிருக்க எனக்கும் பர்னபாவிற்கும்மட்டும்தானா உரிமை இல்லை?

7எவன் தன் சொந்தப்பணத்தைச் செலவழித்து, இராணுவத்திலே சேவை செய்வான்? எவன் திராட்சைத்தோட்டத்தை உண்டாக்கி, அதின் கனியை சாப்பிடாமல் இருப்பான்? எவன் மந்தையை மேய்த்து, அதின் பாலைக் குடிக்காமல் இருப்பான்?

8இவைகளை மனிதர்கள் வழக்கத்தின்படி சொல்லுகிறேனோ? நியாயப்பிரமாணமும் இவைகளைச் சொல்லுகிறதில்லையா?

9போரடிக்கிற மாட்டின் வாயைக் கட்டாதே என்று மோசேயின் பிரமாணத்திலே எழுதியிருக்கிறதே. தேவன் மாடுகளுக்காகவே கவலையாக இருக்கிறாரோ?

10நமக்காகத்தான் இதைச் சொல்லுகிறாரோ? உழுகிறவன் நம்பிக்கையோடு உழவும், போரடிக்கிறவன் தான் நம்புகிறதில் பங்கடைவேன் என்கிற நம்பிக்கையோடு போரடிக்கவும் வேண்டும். ஆகவே, அது நமக்காகவே எழுதியிருக்கிறது.

11நாங்கள் உங்களுக்கு ஆவியானவருக்குரிய நன்மைகளை விதைத்திருக்க, உங்களுடைய சரீர நன்மைகளை அறுத்தால் அது பெரிய காரியமா?

12மற்றவர்கள் உங்களிடத்திலே இந்த அதிகாரத்தைச் செலுத்தினால், அவர்களைவிட நாங்கள் அதிகமாகச் செலுத்தலாமல்லவா? அப்படியிருந்தும், கிறிஸ்துவின் நற்செய்திக்கு எந்தவொரு தடையும் உண்டாகாதபடிக்கு, நாங்கள் இந்த அதிகாரத்தைச் செலுத்தாமல் எல்லாப் பாடுகளும் படுகிறோம்.

13ஆசாரிய ஊழியம் செய்கிறவர்கள் தேவாலயத்தில் இருக்கிறவைகளிலிருந்து சாப்பிடுகிறார்கள் என்றும், பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்கு பலிபீடத்தில் உள்ளவைகளில் பங்கு உண்டென்றும் உங்களுக்குத் தெரியாதா?

14அந்தப்படியே நற்செய்தியை அறிவிக்கிறவர்களுக்கு நற்செய்தியினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்.

15அப்படியிருந்தும், நான் இவைகளில் ஒன்றையும் அனுபவிக்கவில்லை; இப்படி எனக்கு நடக்கவேண்டுமென்று இவைகளை நான் எழுதுகிறதுமில்லை. என் மேன்மைபாராட்டுதலை ஒருவன் மனவேதனையாக்குகிறதைவிட நான் சாகிறது எனக்கு நலமாக இருக்கும்.

16நற்செய்தியை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைப்பாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாக இருக்கிறது; நற்செய்தியை நான் பிரசங்கிக்காமல் இருந்தால், எனக்கு ஐயோ.

17நான் உற்சாகமாக அப்படிச் செய்தால் எனக்குப் பலன் உண்டு; உற்சாகம் இல்லாதவனாகச் செய்தாலும், மேற்பார்வையாளர் பதவி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறதே.

18ஆதலால் எனக்குப் பலன் என்ன? நான் நற்செய்தியை பிரசங்கிக்கும்போது அதைப்பற்றி எனக்கு உண்டாயிருக்கிற அதிகாரத்தை முற்றிலும் செலுத்தாமல், கிறிஸ்துவின் நற்செய்தியைச் செலவில்லாமல் பிரசங்கிப்பதே எனக்குப் பலன்.

19நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாக இருந்தும், நான் அதிக மக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லோருக்கும் அடிமையாக்கினேன்.

20யூதர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, யூதர்களுக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவனைப்போலவும் ஆனேன்.

21நியாயப்பிரமாணம் இல்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப்போலவும் ஆனேன். அப்படியிருந்தும், நான் தேவனுக்குமுன்பாக நியாயப்பிரமாணம் இல்லாதவனாக இல்லாமல், கிறிஸ்துவின் பிரமாணத்திற்கு உட்பட்டவனாக இருக்கிறேன்.

22பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாவது சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லோருக்கும் எல்லாமானேன்.

23நற்செய்தியின் ஆசீர்வாதங்களில் நான் உடன்பங்காளியாகும்படிக்கு, அதினிமித்தமே இப்படிச்செய்கிறேன்.

24பந்தயப் பாதையில் ஓடுகிறவர்களெல்லோரும் ஓடுவார்கள்; ஆனாலும், ஒருவனே வெற்றியை பெறுவானென்று உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.

25பந்தயத்திற்குப் போராடுகிற அனைவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாக இருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்.

26ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடமாட்டேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம் பண்ணமாட்டேன்.

27மற்றவர்களுக்குப் பிரசங்கம் செய்கிற நான்தானே ஆகாதவனாகப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கி அடக்குகிறேன்.

← 1 Corinthians 8Read In The App, Free →1 Corinthians 10 →

Study 1 Corinthians 9

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeAlbert BarnesJohn WesleyJohn CalvinScofieldWilliam BurkittFamily Bible NotesJohn LightfootGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516