1 John · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

1 John 2

1என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவம் செய்தால் நீதிபரராக இருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராக இருக்கிறார்.

2நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற பாவநிவாரணபலி அவரே; நம்முடைய பாவங்களைமட்டும் அல்ல, முழு உலகத்தின் பாவங்களையும் நிவர்த்தி செய்கிற பலியாக இருக்கிறார்.

3அவருடைய கட்டளைகளை நாம் கடைபிடிக்கிறவர்களாக இருப்போமானால், அவரை அறிந்திருக்கிறோம் என்பதை அதினால் அறிவோம்.

4அவரை அறிந்திருக்கிறேன் என்று சொல்லியும், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காதவன் பொய்யனாக இருக்கிறான், அவனுக்குள் சத்தியம் இல்லை.

5அவருடைய வசனத்தைக் கடைபிடிக்கிறவனிடத்தில் தேவ அன்பு உண்மையாகவே பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோம் என்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்.

6அவருக்குள் நிலைத்திருக்கிறேன் என்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.

7சகோதரர்களே, நான் உங்களுக்குப் புதிய கட்டளையை அல்ல, ஆரம்பமுதல் நீங்கள் பெற்றிருக்கிற பழைய கட்டளையையே எழுதுகிறேன்; அந்தப் பழைய கட்டளை நீங்கள் ஆரம்பமுதல் கேட்டிருக்கிற வசனம்தானே.

8மேலும், நான் புதிய கட்டளையையும் உங்களுக்கு எழுதுகிறேன், இது அவருக்குள்ளும் உங்களுக்குள்ளும் உண்மையாக இருக்கிறது; ஏனென்றால், இருள் நீங்கிப்போகிறது, உண்மையான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது.

9ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான்.

10தன் சகோதரனிடத்தில் அன்புசெலுத்துகிறவன் ஒளியிலே நிலைத்திருக்கிறான்; அவனிடத்தில் தடுமாற்றம் ஒன்றுமில்லை.

11தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான்; இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் எங்கேயென்று தெரியாமல் இருக்கிறான்.

12பிள்ளைகளே அவருடைய நாமத்தினிமித்தம் உங்களுடைய பாவங்கள் மன்னிக்கப் பட்டிருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன்.

13பிதாக்களே, ஆரம்பமுதல் இருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். வாலிபர்களே, சாத்தானை நீங்கள் ஜெயித்ததினால் உங்களுக்கு எழுதுகிறேன். பிள்ளைகளே, நீங்கள் பிதாவை அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன்.

14பிதாக்களே, ஆரம்பமுதல் இருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதியிருக்கிறேன். வாலிபர்களே, நீங்கள் பலவான்களாக இருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் சாத்தானை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன். 1 உலகத்தை நேசிக்காதீர்கள்

15உலகத்தையும் உலகத்தில் உள்ளவைகளையும் நேசிக்காதீர்கள்; ஒருவன் உலகத்தை நேசித்தால் அவனிடம் பிதாவின் அன்பு இல்லை.

16ஏனென்றால், சரீரத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், வாழ்க்கையின் பெருமையுமாகிய உலகத்தில் உள்ளவைகளெல்லாம் பிதாவினால் உண்டானவைகள் அல்ல, அவைகள் உலகத்தினால் உண்டானவைகள்.

17உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோகும்; தேவனுடைய விருப்பத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். 1 அந்திக்கிறிஸ்துவைக்குறித்த எச்சரிக்கை

18பிள்ளைகளே, இது கடைசி காலமாக இருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்.

19அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்துபோனார்கள், ஆனாலும் அவர்கள் நம்முடையவர்களாக இருக்கவில்லை; நம்முடையவர்களாக இருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே; எல்லோரும் நம்முடையவர்கள் இல்லை என்று வெளிப்படுத்துவதற்காகவே பிரிந்துபோனார்கள்.

20நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்று எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்கள்.

21சத்தியத்தை நீங்கள் அறியாததினால் அல்ல, நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறதினாலும், சத்தியத்தினால் ஒரு பொய்யும் உண்டாகாது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறதினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.

22இயேசுவைக் கிறிஸ்து இல்லை என்று மறுதலிக்கிறவனேதவிர வேறு யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.

23குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவை உடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாக இருக்கிறான்.

24ஆகவே, ஆரம்பமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருக்கட்டும்; ஆரம்பமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருந்தால், நீங்கள் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள்.

25நித்தியஜீவனை கொடுப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.

26உங்களை ஏமாற்றுகிறவர்களைக்குறித்து இவைகளை உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.

27நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டியதில்லை; அந்த அபிஷேகம் எல்லாவற்றையும்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாக இருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக. 1 தேவனுடைய பிள்ளைகள்

28இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் தைரியமுள்ளவர்களாக இருப்பதற்காகவும் அவர் வரும்போது நாம் வெட்கப்பட்டுப்போகாமல் இருக்கவும் அவரில் நிலைத்திருப்போம்.

29அவர் நீதியுள்ளவராக இருக்கிறாரென்று உங்களுக்குத் தெரிந்திருப்பதினால், நீதியைச் செய்கிறவன் எவனும் அவரில் பிறந்தவனென்று அறிந்திருக்கிறீர்கள்.

← 1 John 1Read In The App, Free →1 John 3 →

Study 1 John 2

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeAlbert BarnesJohn WesleyJohn CalvinScofieldWilliam BurkittFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345