2 Peter · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

2 Peter 3

1பிரியமானவர்களே, இந்த இரண்டாம் கடிதத்தை இப்பொழுது உங்களுக்கு எழுதுகிறேன்.

2பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன்னமே சொல்லப்பட்ட வார்த்தைகளையும், இரட்சகராக இருக்கிற கர்த்தருடைய அப்போஸ்தலர்களாகிய எங்களுடைய கட்டளைகளையும் நீங்கள் நினைத்துப்பார்ப்பதற்காக இந்தக் கடிதங்களினால் உங்களுடைய உண்மையான மனதை ஞாபகப்படுத்தி எழுப்புகிறேன்.

3முதலாவது நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால்: கடைசிநாட்களில் பரிகாசக்காரர்கள் வந்து, தங்களுடைய சுய இச்சைகளின்படி நடந்து,

4அவர் திரும்பவருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? முற்பிதாக்கள் மரித்தபின்பு எல்லாக் காரியங்களும் படைப்பின் ஆரம்பத்தில் இருந்தவிதமாகவே இருக்கிறதே என்று சொல்லுவார்கள்.

5ஆதிகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும் பூமியும் தண்ணீரிலிருந்து தோன்றி தண்ணீரினாலே நிலைகொண்டிருக்கிறது என்பதையும்,

6அப்பொழுது இருந்த உலகம் பெருவெள்ளத்தினாலே அழிந்தது என்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள்.

7இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அதே வார்த்தையினாலே நெருப்புக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தி இல்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரை காக்கப்பட்டிருக்கிறது.

8பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம் வருடங்களைப்போலவும், ஆயிரம் வருடங்கள் ஒருநாளைப்போலவும் இருக்கிறது என்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாமல் இருக்கவேண்டாம்.

9தாமதம் பண்ணுகிறார் என்று சிலர் நினைக்கிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதம்பண்ணாமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லோரும் மனம்திரும்பவேண்டும் என்று விரும்பி, நம்மேல் நீடியபொறுமை உள்ளவராக இருக்கிறார்.

10கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறதுபோல வரும்; அப்பொழுது வானங்கள் பயங்கர சத்தத்தோடு விலகிப்போகும், பஞ்சபூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதில் உள்ள செயல்களும் எரிந்து அழிந்துபோகும்.

11இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாக இருக்கிறதினால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த வாழ்க்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாக இருக்கவேண்டும்!

12தேவன் வருகின்ற நாள் சீக்கிரமாக வருவதற்கு அதிக ஆவலோடு காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பஞ்சபூதங்கள் எரிந்து உருகிப்போகும்.

13அவருடைய வாக்குத்தத்தத்தின்படி நீதி நிலைத்திருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகும் என்று காத்திருக்கிறோம்.

14ஆகவே, பிரியமானவர்களே இவைகள் வருவதற்காகக் காத்திருக்கிற நீங்கள் கறை இல்லாதவர்களும் பிழை இல்லாதவர்களுமாகச் சமாதானத்தோடு அவர் சந்நிதியில் காணப்படுவதற்கு கவனமாக இருங்கள்.

15மேலும் நம்முடைய கர்த்தரின் அதிகப் பொறுமையை இரட்சிப்பு என்று நினைத்துக்கொள்ளுங்கள்; நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்;

16எல்லாக் கடிதங்களிலும் இவைகளைக்குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் புரிந்துகொள்வதற்கு கடினமாக இருக்கிறது; கல்லாதவர்களும் உறுதி இல்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குத் தீமை வரும்படி இவைகளையும் புரட்டுகிறார்கள்.

17ஆகவே, பிரியமானவர்களே, இவைகளை முன்னமே நீங்கள் தெரிந்திருக்கிறதினால், அக்கிரமக்காரர்களுடைய வஞ்சகத்தினாலே நீங்கள் இழுக்கப்பட்டு உங்களுடைய உறுதியில் இருந்து விலகி விழுந்துவிடாதபடி எச்சரிக்கையாக இருந்து,

18நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவருடைய அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

← 2 Peter 2Read In The App, Free →1 John 1 →

Study 2 Peter 3

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeAlbert BarnesJohn WesleyJohn CalvinScofieldWilliam BurkittFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123