Amos · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Amos 8

1பின்பு யெகோவாகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்தது என்னவென்றால்: இதோ, பழுத்த பழங்களுள்ள + 8:1 அத்திபழம் ஒரு கூடை இருந்தது.

2அவர்: ஆமோஸே, நீ எதைக் காண்கிறாய் என்று கேட்டார்? பழுத்த பழங்களுள்ள ஒரு கூடையைக் காண்கிறேன் என்றேன். அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு முடிவுகாலம் வந்தது; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன்.

3அந்த நாளிலே தேவாலயப் பாடல்கள் அலறுதலாக மாறும்; எல்லா இடத்திலும் திரளான பிரேதங்கள் புலம்பல் இல்லாமல் எறிந்துவிடப்படும் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

4தேசத்தில் சிறுமைப்பட்டவர்களை ஒழியச்செய்ய, எளியவர்களை விழுங்கி:

5நாங்கள் மரக்காலைக் குறைத்து, சேக்கல் நிறையை அதிகமாக்கி, கள்ளத்தராசினால் வஞ்சித்து, தரித்திரர்களைப் பணத்திற்கும், எளியவர்களை ஒரு ஜோடி காலணிகளுக்கும் வாங்கும்படியும், தானியத்தின் பதரை விற்கும்படியும்,

6நாங்கள் கேட்ட கோதுமையை விற்கத்தக்கதாக மாதப்பிறப்பும், நாங்கள் தானியத்தின் சேமிப்புக்கிடங்குகளை திறக்கத்தக்கதாக ஓய்வு நாளும் எப்போது முடியும் என்று சொல்லுகிறவர்களே, இதைக் கேளுங்கள்.

7அவர்கள் செய்கைகளையெல்லாம் நான் ஒருபோதும் மறப்பதில்லையென்று யெகோவா யாக்கோபுடைய மகிமையின்பேரில் ஆணையிட்டார்.

8இதனால் தேசம் அதிரவும் அதில் குடியிருக்கிறவர்கள் எல்லோரும் துக்கிக்கவும், எங்கும் நதிகளாகப் புரண்டோடவும், எகிப்தின் ஆற்றுவெள்ளத்தைப்போல் அடித்து, பெருவெள்ளமாகவும் வேண்டாமோ?

9அந்த நாளிலே நான் மத்தியானத்திலே சூரியனை மறையச்செய்து, பட்டப்பகலிலே தேசத்தை இருளாக்கி,

10உங்களுடைய பண்டிகைகளைத் துக்கிப்பாகவும், உங்களுடைய பாடல்களையெல்லாம் புலம்பலாகவும் மாறச்செய்து, எல்லா இடுப்புகளிலும் சணல் ஆடையும், எல்லாத் தலைகளிலும் மொட்டையையும் வருவித்து, அவர்களுடைய துக்கிப்பை ஒரே பிள்ளைக்காகத் துக்கிக்கிற துக்கிப்புக்குச் சமமாக்கி, அவர்களுடைய முடிவைக் கசப்பான நாளாக்குவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

11இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக்குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, தண்ணீர்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, யெகோவாவுடைய வசனம் கேட்கக் கிடைக்காத பஞ்சத்தை அனுப்புவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

12அப்பொழுது அவர்கள் யெகோவாவுடைய வசனத்தைத் தேட ஒரு சமுத்திரம் துவங்கி மறு சமுத்திரம்வரை, வடக்குதிசை துவங்கிக் கிழக்குத்திசைவரை அலைந்து திரிந்தும் அதைக் கண்டடையாமல்போவார்கள்.

13அந்த நாளிலே அழகுள்ள கன்னிகளும் வாலிபர்களும் தாகத்தினால் சோர்ந்துபோவார்கள்.

14தாணே! உன்னுடைய தேவனுடைய ஜீவனைக்கொண்டும், பெயெர்செபா மார்க்கத்தின் + 8:14 விக்கிர ஆராதனை தேவனுடைய ஜீவனைக்கொண்டும் என்று சொல்லி, சமாரியாவின் பாவத்தின்மேல் ஆணையிடுகிறவர்கள் விழுவார்கள்; இனி ஒருபோதும் எழுந்திருக்கமாட்டார்கள் என்றார்.

← Amos 7Read In The App, Free →Amos 9 →

Study Amos 8

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789