Daniel · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Daniel 7

1பாபிலோனின் ராஜாவாகிய பெல்ஷாத்சாரின் முதலாம் வருடத்திலே தானியேல் ஒரு கனவையும் தன் படுக்கையின்மேல் தன் எண்ணத்தில் தோன்றின தரிசனங்களையும் கண்டான். பின்பு அவன் அந்தக் கனவை எழுதி, காரியங்களின் சாராம்சத்தை விவரித்தான்.

2தானியேல் சொன்னது: இரவு நேரத்தில் எனக்கு உண்டான தரிசனத்திலே நான் கண்டது என்னவென்றால்: இதோ, வானத்தின் நான்கு காற்றுகளும் பெரிய சமுத்திரத்தின்மேல் அடித்தது.

3அப்பொழுது வெவ்வேறு தோற்றமுள்ள நான்கு பெரிய மிருகங்கள் சமுத்திரத்திலிருந்து எழும்பின.

4முதலாவது சிங்கத்தைப்போல இருந்தது; அதற்குக் கழுகின் இறக்கைகள் இருந்தது; நான் பார்த்துக்கொண்டிருக்கும்போது, அதின் சிறகுகள் பிடுங்கப்பட்டது; அது தரையிலிருந்து எடுக்கப்பட்டு, மனிதனைப்போல இரண்டு காலின்மேல் நிமிர்ந்துநிற்கும்படி செய்யப்பட்டது; மனித இருதயம் அதற்குக் கொடுக்கப்பட்டது.

5பின்பு, கரடியைப் போல வேறே இரண்டாம் மிருகத்தைக் கண்டேன்; அது ஒரு பக்கமாகச் சாய்ந்து நின்று, தன் வாயின் பற்களுக்குள்ளே மூன்று விலா எலும்புகளைக் கவ்விக்கொண்டிருந்தது; எழும்பி அதிக மாம்சம் சாப்பிடு என்று அதற்குச் சொல்லப்பட்டது.

6அதின்பின்பு, சிவிங்கியைப்போலிருக்கிற வேறொரு மிருகத்தைக் கண்டேன்; அதின் முதுகின்மேல் பறவையின் இறக்கைகளைப்போல நான்கு இறக்கைகள் இருந்தன; அந்த மிருகத்திற்கு நான்கு தலைகளும் இருந்தன; அதற்கு ஆளுகை கொடுக்கப்பட்டது.

7அதற்குப்பின்பு, இரவுநேரத் தரிசனங்களில் நான்காம் மிருகத்தைக் கண்டேன்; அது கொடியதும் பயங்கரமும் மகா பலத்ததுமாயிருந்தது; அதற்குப் பெரிய இரும்புப் பற்கள் இருந்தன; அது நொறுக்கி அழித்து, மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப்போட்டது; அது தனக்கு முன்பிருந்த எல்லா மிருகங்களைப்பார்க்கிலும் வேறுபட்ட உருவமாயிருந்தது, அதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தது.

8அந்தக் கொம்புகளை நான் கவனித்துக்கொண்டிருக்கும்போது, இதோ, அவைகளுக்கு இடையிலே வேறொரு சிறிய கொம்பு எழும்பியது; அதற்கு முன்பாக முந்தின கொம்புகளில் மூன்று பிடுங்கப்பட்டது; இதோ, அந்தக் கொம்பிலே மனித கண்களைப்போன்ற கண்களும் பெருமையானவைகளைப் பேசும் வாயும் இருந்தது.

9நான் பார்த்துக்கொண்டிருக்கும்போது, சிங்காசனங்கள் வைக்கப்பட்டன; நீண்ட ஆயுசுள்ளவர் + 7:9 தேவன் வீற்றிருந்தார்; அவருடைய உடை உறைந்த மழையைப்போலவும், அவருடைய தலைமுடி வெண்மையாகவும், பஞ்சைப்போல தூய்மையாகவும் இருந்தது; அவருடைய சிங்காசனம் நெருப்புத் தழலும், அதின் சக்கரங்கள் எரிகிற நெருப்புமாயிருந்தது.

10அக்கினி நதி அவர் சந்நிதியிலிருந்து புறப்பட்டு ஓடினது; ஆயிரமாயிரம்பேர் அவரைச் சேவித்தார்கள்; கோடானகோடிபேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்; நியாயசங்கம் உட்கார்ந்தது; புத்தகங்கள் திறக்கப்பட்டது.

11அப்பொழுது நான் பார்த்தேன்; நான் பார்த்துக்கொண்டிருக்கும்போது அந்தக் கொம்பு பெருமையான பேச்சுகளைப் பேசினதினால் அந்த மிருகம் கொலைசெய்யப்பட்டது; அதின் உடல் அழிக்கப்பட்டு, எரிகிற நெருப்பிற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது.

12மற்ற மிருகங்களுடைய ஆளுகையோவென்றால், அவைகளை விட்டு நீக்கப்பட்டது; ஆனாலும், அவைகளுக்குக் காலமும் நேரமும் நிறைவேறும்வரை அவைகள் உயிரோடு இருக்கக் கட்டளையிடப்பட்டது.

13இரவுநேரத் தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கும்போது, இதோ, மனிதனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுள் உள்ளவரின் அருகில் கொண்டுவரப்பட்டார்.

14சகல மக்களும் தேசத்தார்களும், பல மொழிகளைப் பேசுகிறவர்களும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும், மகிமையும், அரசாட்சியும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும், அவருடைய ஆளுகை அழியாததுமாயிருக்கும். 1 கனவின் அர்த்தம்

15தானியேலாகிய நான் என் உடலுக்குள் என் ஆவியிலே சஞ்சலப்படமாட்டேன்; என் மனதில் தோன்றின தரிசனங்கள் என்னைக் கலங்கச்செய்தது.

16சிங்காசனத்தின் அருகில் நிற்கிறவர்களில் ஒருவனிடத்தில் நான் போய், இதன் அர்த்தம் எல்லாவற்றையும் எனக்குச் சொல்லும்படி அவனை வேண்டிக்கொண்டேன்; அவன் அந்தக் காரியங்களின் அர்த்தத்தை எனக்கு அறிவித்துச் சொன்னது என்னவென்றால்:

17அந்த நான்கு பெரிய மிருகங்களும் பூமியிலிருந்து எழும்புகிற நான்கு ராஜாக்கள்.

18ஆனாலும் உன்னதமான தேவனுடைய பரிசுத்தவான்கள் அரசாட்சியைப்பெற்று, என்றென்றைக்குமுள்ள சதா காலங்களிலும் ராஜ்ஜியத்தைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள் என்றான்.

19அப்பொழுது மற்றவைகளைப்பார்க்கிலும் வேறுபட்ட உருவம் கொடியதும், இரும்புப் பற்களும், வெண்கல நகங்களுமுடையதாக நொறுக்கி அழித்தது. மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப் போட்டதுமாயிருந்த நான்காம் மிருகத்தைக்குறித்தும்,

20அதின் தலைமேலுள்ள பத்துக்கொம்புகளைக்குறித்தும், தனக்கு முன்பாக மூன்று கொம்புகள் விழுந்துபோக எழும்பினதுமாக, கண்களையும் பெருமையானவைகளைப் பேசும் வாயை உடையதுமாக, மற்றவைகளைப்பார்க்கிலும் பருமனாகத் தோன்றினதுமாயிருந்த அந்த வேறே கொம்பைக்குறித்தும், அவற்றின் அர்த்தத்தை அறிய மனதாயிருந்தேன்.

21நீண்ட ஆயுசுள்ளவராகிய தேவன் வரும்வரைக்கும், நியாயவிசாரிப்பு, உன்னதமான தேவனுடைய பரிசுத்தவான்களுக்குக் கொடுக்கப்பட்டு, பரிசுத்தவான்கள் ராஜ்ஜியத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளும் காலம் வரும்வரைக்கும்,

22இந்தக் கொம்பு பரிசுத்தவான்களுடன் போரிட்டு, அவர்களை மேற்கொண்டது என்று கண்டேன்.

23அவன் சொன்னது: நான்காம் மிருகம் பூமியிலே உண்டாகும் நான்காம் ராஜ்ஜியமாகும்; அது எல்லா ராஜ்ஜியங்களைப்பார்க்கிலும் வேறுபட்டதாக இருந்து, பூமியை எல்லாம் அழித்து, அதை மிதித்து, அதை நொறுக்கிப்போடும்.

24அந்தப் பத்துக்கொம்புகள் என்னவென்றால், அந்த ராஜ்ஜியத்திலே எழும்பும் பத்து ராஜாக்களாகும்; அவர்களுக்குப்பின்பு வேறொருவன் எழும்புவான்; அவன் முந்தினவர்களைப்பார்க்கிலும் வேறுபட்டதாக இருந்து, மூன்று ராஜாக்களைத் தாழ்த்திப்போட்டு,

25உன்னதமான தேவனுக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமான தேவனுடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான்; அவர்கள் ஒரு காலமும். காலங்களும், அரைக்காலமும் + 7:25 3. 6 வருடங்கள் செல்லும்வரை அவனுடைய கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.

26ஆனாலும் நியாயசங்கம் உட்காரும்; அப்பொழுது முடிவுவரை அவனை முற்றிலும் அழிக்கும்படியாக அவனுடைய ஆளுகையை நீக்கிப்போடுவார்கள்.

27வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்ஜியங்களின் ராஜரிகமும் ஆளுகையும் மகத்துவமும் உன்னதமான தேவனுடைய பரிசுத்தவான்களாகிய மக்களுக்குக் கொடுக்கப்படும்; அவருடைய ராஜ்ஜியம் நித்திய ராஜ்ஜியம்; சகல கர்த்தத்துவங்களும் அவரைச் சேவித்து, அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும் என்றான்.

28அவன் சொன்ன வார்த்தை இத்துடன் முடிந்தது. தானியேலாகிய நான் என் நினைவுகளால் மிகவும் கலங்கினேன்; என் முகம் வேறுபட்டது; இந்தக் காரியத்தை என் மனதிலே வைத்துக்கொண்டேன்.

← Daniel 6Read In The App, Free →Daniel 8 →

Study Daniel 7

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112