Galatians · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Galatians 5

1ஆனபடியால், நீங்கள் மீண்டும் அடிமைத்தனத்தின் நுகத்திற்குக் கீழாகாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுதந்திர நிலைமையிலே நிலைத்திருங்கள்.

2இதோ, நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொண்டால் கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோஜனமும் இருக்காது, என்று பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

3மேலும், விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளுகிற எந்த மனிதனும் நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றக் கடனாளியாக இருக்கிறான் என்று மீண்டும் அப்படிப்பட்டவனுக்கு உறுதியாக அறிவிக்கிறேன்.

4நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் எல்லோரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையிலிருந்து விழுந்தீர்கள்.

5நாங்களோ நீதிகிடைக்கும் என்று ஆவியைக்கொண்டு விசுவாசத்தினால் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.

6கிறிஸ்து இயேசுவிடம் விருத்தசேதனமும், விருத்தசேதனம் இல்லாததும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் செய்கைகளைச் செய்கிற விசுவாசமே உதவும்.

7நீங்கள் நன்றாக ஓடினீர்களே; சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போக உங்களுக்குத் தடைசெய்தவன் யார்?

8இந்தப் போதனை உங்களை அழைத்தவரால் உண்டானது இல்லை.

9புளிப்பான கொஞ்சம் மாவு பிசைந்த மாவு அனைத்தையும் உப்பப்பண்ணும்.

10நீங்கள் வேறுவிதமாகச் சிந்திக்கமாட்டீர்கள் என்று நான் கர்த்தருக்குள் உங்களைக்குறித்து நம்பிக்கையாக இருக்கிறேன்; உங்களைக் குழப்புகிறவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் தனக்குரிய தண்டனையை அடைவான்.

11சகோதரர்களே, இதுவரைக்கும் நான் விருத்தசேதனத்தைப் பிரசங்கிக்கிறவனாக இருந்தால், இதுவரைக்கும் எதற்காகத் துன்பப்படுகிறேன்? அப்படியென்றால் சிலுவையைப்பற்றி வரும் இடறல் ஒழிந்திருக்குமே.

12உங்களைக் குழப்புகிறவர்கள் உங்களிடமிருந்து துண்டித்துக்கொண்டால் நலமாக இருக்கும்.

13சகோதரர்களே, நீங்கள் சுதந்திரமாக இருப்பதற்காக அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுதந்திரத்தை நீங்கள் சரீரத்திற்கேதுவாக அநுசரிக்காமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் பணிவிடை செய்யுங்கள்.

14உன்னை நீ நேசிக்கிறதுபோல மற்றவனையும் நேசிப்பாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்.

15நீங்கள் ஒருவரையொருவர் கடித்து விழுங்குவீர்கள் என்றால் அழிவீர்கள், அப்படி ஒருவரால் ஒருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள். 1 ஆவியானவராலே ஜீவன்

16பின்னும் நான் சொல்லுகிறது என்னவென்றால், ஆவியானவருக்கு ஏற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது சரீர இச்சையை நிறைவேற்றாமல் இருப்பீர்கள்.

17சரீர இச்சை ஆவியானவருக்கு எதிராக செயல்படுகிறது. ஆவியானவர் சரீர இச்சைக்கு எதிராக செயல்படுகிறார்; நீங்கள் செய்யவேண்டியவைகளைச் செய்யாதபடி, இவைகள் ஒன்றுக்கொன்று எதிராக இருக்கிறது.

18ஆவியானவரால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்கள் இல்லை.

19சரீரத்தின் செய்கைகள் வெளியரங்கமாக இருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,

20விக்கிரக ஆராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்,

21பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைப் பெற்றுக்கொள்வதில்லை என்று முன்னமே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன். 1 ஆவியானவரின் கனிகள்

22ஆவியானவரின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,

23சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு எதிரான பிரமாணம் ஒன்றும் இல்லை.

24கிறிஸ்துவினுடையவர்கள் தங்களுடைய சரீரத்தையும் அதின் ஆசைகளையும் இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.

25நாம் ஆவியானவராலே பிழைத்திருந்தால், அவருக்கேற்றபடி நடப்போம்.

26வீண்புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருப்போம்.

← Galatians 4Read In The App, Free →Galatians 6 →

Study Galatians 5

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeAlbert BarnesJohn WesleyJohn CalvinScofieldWilliam BurkittFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456