Genesis · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Genesis 30

1ராகேல் தான் யாக்கோபுக்குப் பிள்ளைகளைப் பெறாததைக்கண்டு, தன் சகோதரியின்மேல் பொறாமைப்பட்டு, யாக்கோபை நோக்கி: “எனக்குப் பிள்ளைகொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன்” என்றாள்.

2அப்பொழுது யாக்கோபு ராகேலின்மேல் கோபமடைந்து: “தேவனல்லவோ உன் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார், நான் தேவனா?” என்றான்.

3அப்பொழுது அவள்: “இதோ, என் வேலைக்காரியாகிய பில்காள் இருக்கிறாளே; நான் வளர்க்க அவள் பிள்ளைகளைப் பெறவும், அவள் மூலமாவது என் வீடு கட்டப்படவும் அவளிடத்தில் சேரும்” என்று சொல்லி,

4அவனுக்குத் தன் வேலைக்காரியாகிய பில்காளை மனைவியாகக் கொடுத்தாள்; அப்படியே யாக்கோபு அவளைச் சேர்ந்தான்.

5பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.

6அப்பொழுது ராகேல்: “தேவன் என் வழக்கைத் தீர்த்து, என் சத்தத்தையும் கேட்டு, எனக்கு ஒரு மகனைக் கொடுத்தார்” என்று சொல்லி, அவனுக்குத் தாண் என்று பெயரிட்டாள்.

7மறுபடியும் ராகேலின் வேலைக்காரியாகிய பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு இரண்டாம் மகனைப் பெற்றெடுத்தாள்.

8அப்பொழுது ராகேல்: “நான் மகா போராட்டமாக என் சகோதரியோடு போராடி மேற்கொண்டேன்” என்று சொல்லி, அவனுக்கு நப்தலி என்று பெயரிட்டாள்.

9லேயாள் தனது பிள்ளைபேறு நின்றுபோனதைக் கண்டு, தன் வேலைக்காரியாகிய சில்பாளை அழைத்து, அவளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள்.

10லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.

11அப்பொழுது லேயாள்: “ஏராளமாகிறதென்று” சொல்லி, அவனுக்குக் காத் என்று பெயரிட்டாள்.

12பின்பு லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு இரண்டாம் மகனைப் பெற்றெடுத்தாள்.

13அப்பொழுது லேயாள்: “நான் பாக்கியவதி, பெண்கள் என்னைப் பாக்கியவதி என்பார்கள்” என்று சொல்லி, அவனுக்கு ஆசேர் என்று பெயரிட்டாள்.

14கோதுமை அறுப்பு நாட்களில் ரூபன் வயல்வெளிக்குப் போய், தூதாயீம் + 30:14 வாசனை உள்ளது/ கர்ப்பம் தரிக்ககூடியது பழங்களைக் கண்டெடுத்து, அவைகளைக் கொண்டுவந்து தன் தாயாகிய லேயாளிடத்தில் கொடுத்தான். அப்பொழுது ராகேல் லேயாளை நோக்கி: “உன் மகனுடைய தூதாயீம் பழத்தில் எனக்குக் கொஞ்சம் தா” என்றாள்.

15அதற்கு அவள்: “நீ என் கணவனை எடுத்துக்கொண்டது சாதாரணகாரியமா? என் மகனுடைய தூதாயீம் பழங்களையும் எடுத்துக்கொள்ளவேண்டுமோ என்றாள்;” அதற்கு ராகேல்: “உன் மகனுடைய தூதாயீம் பழங்களுக்கு ஈடாக இன்று இரவு அவர் உன்னோடு உறவுகொள்ளட்டும்” என்றாள்.

16மாலையில் யாக்கோபு வெளியிலிருந்து வரும்போது லேயாள் புறப்பட்டு அவனுக்கு எதிர்கொண்டுபோய்: “என் மகனுடைய தூதாயீம் பழங்களால் உம்மை வாங்கினேன்; ஆகையால், நீர் என்னிடத்தில் வரவேண்டும்” என்றாள்; அவன் அன்று இரவு அவளோடு உறவுகொண்டான்.

17தேவன் லேயாளுக்குச் செவிகொடுத்தார். அவள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஐந்தாம் மகனைப் பெற்றெடுத்தாள்.

18அப்பொழுது லேயாள்: “நான் என் வேலைக்காரியை என் கணவனுக்குக் கொடுத்த பலனைத் தேவன் எனக்குத் தந்தார்” என்று சொல்லி, அவனுக்கு இசக்கார் என்று பெயரிட்டாள்.

19மேலும் லேயாள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஆறாம் மகனைப் பெற்றெடுத்தாள்.

20அப்பொழுது லேயாள்: “தேவன் எனக்கு நல்ல வெகுமதியைத் தந்தார்; என் கணவனுக்கு நான் ஆறு மகன்களைப் பெற்றதால், இப்பொழுது அவர் என்னுடனே தங்கியிருப்பார்” என்று சொல்லி, அவனுக்குச் செபுலோன் + 30:20 கணம் என்று பெயரிட்டாள்.

21பின்பு அவள் ஒரு மகளையும் பெற்று, அவளுக்குத் தீனாள் என்று பெயரிட்டாள்.

22தேவன் ராகேலை நினைத்தருளினார்; அவளுக்குத் தேவன் செவிகொடுத்து, அவள் கர்ப்பமடையச் செய்தார்.

23அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று: “தேவன் என் நிந்தையை நீக்கிவிட்டார் என்றும்,

24இன்னும் ஒரு மகனைக் யெகோவா எனக்குத் தருவார்” என்றும் சொல்லி, அவனுக்கு யோசேப்பு என்று பெயரிட்டாள். 1 யாக்கோபின் மந்தை பெருகுதல்

25ராகேல் யோசேப்பைப் பெற்றபின், யாக்கோபு லாபானை நோக்கி: “நான் என் வீட்டிற்கும் என் தேசத்திற்கும் போக என்னை அனுப்பிவிடும்.

26நான் உமக்கு வேலைசெய்து சம்பாதித்த என் மனைவிகளையும் என் பிள்ளைகளையும் எனக்குத் தாரும்; நான் போவேன், நான் உம்மிடத்தில் வேலை செய்த விதத்தை நீர் அறிந்திருக்கிறீர்” என்றான்.

27அப்பொழுது லாபான்: “உன் கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால் நீ இரு; உன்னால் யெகோவா என்னை ஆசீர்வதித்தார் என்று அனுபவத்தில் அறிந்தேன்.

28உன் சம்பளம் எவ்வளவென்று எனக்குச் சொல், நான் அதைத் தருவேன்” என்றான்.

29அதற்கு அவன்: “நான் உமக்கு வேலை செய்தவிதத்தையும், உம்முடைய மந்தை என்னிடத்தில் இருந்த விதத்தையும் அறிந்திருக்கிறீர்.

30நான் வருமுன்னே உமக்கு இருந்தது கொஞ்சம்; நான் வந்தபின் யெகோவா உம்மை ஆசீர்வதித்ததால் அது மிகவும் பெருகியிருக்கிறது; இனி நான் என் குடும்பத்திற்குச் சம்பாதிப்பது எப்பொழுது” என்றான்.

31அதற்கு அவன்: “நான் உனக்கு என்ன தரவேண்டும் என்றான்; யாக்கோபு: “நீர் எனக்கு ஒன்றும் தரவேண்டியதில்லை; நான் சொல்லுகிறபடி நீர் எனக்குச் செய்தால், உம்முடைய மந்தையைத் திரும்ப மேய்ப்பேன்.

32நான் இன்றைக்குப்போய், உம்முடைய மந்தைகளையெல்லாம் பார்வையிட்டு, அவைகளில் புள்ளியும் வரியும் கறுப்புமுள்ள செம்மறியாடுகளையும், வரியும் புள்ளியுமுள்ள வெள்ளாடுகளையும் பிரித்துவிடுகிறேன்; அப்படிப்பட்டவை இனி எனக்குச் சம்பளமாயிருக்கட்டும்.

33அப்படியே இனிமேல் என் சம்பளமாகிய இவற்றை நீர் பார்வையிடும்போது, என் நீதி விளங்கும்; புள்ளியும் வரியுமில்லாத வெள்ளாடுகளும், கறுப்பான செம்மறியாடுகளும் என்னிடத்தில் இருந்தால், அவையெல்லாம் என்னால் திருடப்பட்டவைகளாக எண்ணப்படட்டும்” என்றான்.

34அதற்கு லாபான்: “நீ சொன்னபடியே ஆகட்டும்” என்று சொல்லி,

35அந்த நாளிலே கலப்பு நிறமும் வரியுமுள்ள வெள்ளாட்டுக் கடாக்களையும், புள்ளியும் வரியுமுள்ள வெள்ளாடுகள் அனைத்தையும், சற்று வெண்மையும் கருமையுமுள்ள செம்மறியாடுகள் அனைத்தையும் பிரித்து, தன் மகன்களிடத்தில் ஒப்புவித்து,

36தனக்கும் யாக்கோபுக்கும் இடையிலே மூன்றுநாட்கள் பயணதூரத்தில் இருக்கும்படி வைத்தான். லாபானுடைய மற்ற ஆடுகளை யாக்கோபு மேய்த்தான்.

37பின்பு யாக்கோபு பச்சையாயிருக்கிற புன்னை, வாதுமை, அர்மோன் என்னும் மரங்களின் கிளைகளை வெட்டி, இடையிடையே வெண்மை தோன்றும்படி பட்டையை உரித்து,

38தான் உரித்த கிளைகளை ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும் கால்வாய்களிலும் தொட்டிகளிலும் ஆடுகளுக்கு முன்பாகப் போட்டுவைப்பான்; ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும்போது சினையாவதுண்டு.

39ஆடுகள் அந்தக் கிளைகளுக்கு முன்பாகச் சினைப்பட்டதால், அவைகள் கலப்பு நிறமுள்ளதும் புள்ளியுள்ளதும் வரியுள்ளதுமான குட்டிகளைப் போட்டது.

40அந்த ஆட்டுக்குட்டிகளை யாக்கோபு பிரித்துக்கொண்டு, ஆடுகளை லாபானுடைய மந்தையிலிருக்கும் கலப்பு நிறமானவைகளுக்கும் கறுப்பானவைகளெல்லாவற்றிற்கும் முன்பாக நிறுத்தி, தன் ஆடுகளை லாபானுடைய மந்தையுடன் சேர்க்காமல், தனியாக வைத்துக்கொள்வான்.

41பலத்த ஆடுகள் சினையாகும்போது, அந்தக் கிளைகளுக்கு முன்பாக சினையாகும்படி யாக்கோபு அவைகளை அந்த ஆடுகளின் கண்களுக்கு முன்பாகக் கால்வாய்களிலே போட்டுவைப்பான்.

42பலவீனமான ஆடுகள் சினைப்படும்போது, அவைகளைப் போடாமலிருப்பான்; இதனால் பலவீனமானவைகள் லாபானையும், பலமுள்ளவைகள் யாக்கோபையும் சேர்ந்தன.

43இந்த விதமாக அந்த மனிதன் மிகவும் விருத்தியடைந்து, ஏராளமான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும், ஒட்டகங்களும், கழுதைகளும் உடையவனானான்.

← Genesis 29Read In The App, Free →Genesis 31 →

Study Genesis 30

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

1234567891011121314151617181920212223242526272829303132333435363738394041424344454647484950