Joshua · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Joshua 13

1யோசுவா வயதுமுதிர்ந்தவனானபோது, யெகோவா அவனை நோக்கி: நீ வயதுமுதிர்ந்தவனானாய்; கைப்பற்றிக்கொள்ளவேண்டிய தேசம் இன்னும் மகா விசாலமாக இருக்கிறது.

2மீதியாக இருக்கிற தேசம் எவைகளென்றால், எகிப்திற்கு எதிரான சீகோர் ஆறு துவங்கிக் கானானியர்களைச் சேர்ந்ததாக என்னப்படும் வடக்கே இருக்கிற எக்ரோனின் எல்லைவரையுள்ள பெலிஸ்தர்களின் எல்லா எல்லைகளும், கெசூரிம் முழுவதும்,

3காசா, அஸ்தோத், அஸ்கலோன், காத், எக்ரோன் என்கிற பட்டணங்களில் இருக்கிற பெலிஸ்தர்களுடைய ஐந்து அதிபதிகளின் நாடும், ஆவியர்களின் நாடும்,

4தெற்கே துவங்கி ஆப்பெக்வரை எமோரியர்கள் எல்லைவரை இருக்கிற கானானியர்களின் எல்லா தேசமும், சீதோனியர்களுக்கடுத்த மெயாரா நாடும்,

5கிப்லியர்களின் நாடும், சூரியன் உதயமாகிற திசையில் எர்மோன் மலையடிவாரத்தில் இருக்கிற பாகால்காத் முதல் ஆமாத்துக்குள் நுழையும்வரையுள்ள லீபனோன் முழுவதும்,

6லீபனோன் துவங்கி மிஸ்ரபோத்மாயீம்வரை மலைகளில் குடியிருக்கிற அனைவருடைய நாடும், சீதோனியர்களுடைய எல்லா நாடும்தானே. நான் அவர்களை இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் துரத்துவேன்; நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, நீ இஸ்ரவேலுக்குப் பங்குகளைக் கொடுக்கச் சீட்டுகளைப்போட்டு தேசத்தைப் பங்கிடவேண்டும்.

7ஆதலால் இந்த தேசத்தை ஒன்பது கோத்திரங்களுக்கும், மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்கும் சொந்தமாகும்படிப் பங்கிடு என்றார். 1 யோர்தானுக்குக் கிழக்கேயுள்ள தேசத்தின் பிரிவுகள்

8மனாசேயின் பாதிக்கோத்திரத்தார்களும் ரூபனியர்களும் காத்தியர்களும் தங்களுடைய பங்குகளை அடைந்து தீர்ந்தது; அதைக் யெகோவாவின் ஊழியக்காரனாகிய மோசே யோர்தானுக்கு மறுபுறத்தில் கிழக்கே அவர்களுக்குக் கொடுத்தான்.

9அர்னோன் ஆற்றங்கரையில் இருக்கிற ஆரோவேரும், நதியின் நடுவிலிருக்கிற பட்டணம் துவங்கி தீபோன்வரைக்கும் இருக்கிற மெதெபாவின் சமபூமி அனைத்தையும்,

10எஸ்போனிலிருந்து அம்மோனியர்களின் எல்லைவரை ஆட்சிசெய்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனுக்குரிய எல்லாப் பட்டணங்களையும்,

11கீலேயாத்தையும், கெசூரியர்கள் மாகாத்தியர்களுடைய எல்லையிலுள்ள நாட்டையும், எர்மோன் மலை முழுவதையும்,

12அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் ஆட்சிசெய்து, மோசே முறியடித்துத் துரத்தின இராட்சதர்களில் மீதியாக இருந்த பாசானின் ராஜாவாகிய ஓகுக்குச் சல்காவரையிருந்த பாசான் முழுவதையும் அவர்களுக்குக் கொடுத்தான்.

13இஸ்ரவேல் மக்களோ கெசூரியர்களையும் மாகாத்தியர்களையும் துரத்திவிடவில்லை, கெசூரியர்களும் மாகாத்தியர்களும் இந்தநாள்வரை இஸ்ரவேலின் நடுவில் குடியிருக்கிறார்கள்.

14லேவியர்களின் கோத்திரத்திற்குமட்டும் அவன் பங்கு கொடுக்கவில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா மோசேக்குச் + 13:14 அவர்களுக்கு சொன்னபடியே, அவருடைய தகனபலிகளே அவர்களுடைய பங்கு.

15மோசே ரூபன் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களுக்குத்தக்கதாகப் பங்கு கொடுத்தான்.

16அர்னோன் ஆற்றங்கரையில் இருக்கிற ஆரோவேரும், ஆற்றின் நடுவிலிருக்கிற பட்டணம் துவங்கி மெதெபாவரையுள்ள சமபூமி முழுவதும்,

17சமபூமியில் இருக்கிற எஸ்போனும், அதின் எல்லாப் பட்டணங்களுமாகிய தீபோன், பாமோத்பாகால், பெத்பாகால் மெயோன்,

18யாகசா, கெதெமோத், மெபாகாத்,

19கீரியாத்தாயீம், சீப்மா, பள்ளத்தாக்கின் மலையிலுள்ள செரேத்சகார்,

20பெத்பேயோர், அஸ்தோத்பிஸ்கா, பெத்யெசிமோத் முதலான

21சமபூமியிலுள்ள எல்லாப் பட்டணங்களும், எஸ்போனில் ஆட்சிசெய்த சீகோன் என்னும் எமோரியர்களுடைய ராஜாவின் ராஜ்யம் முழுவதும் அவர்கள் எல்லைக்குள்ளானது; அந்தச் சீகோனையும், தேசத்திலே குடியிருந்து சீகோனின் அதிபதியாக இருந்த ஏவி, ரேக்கேம், சூர், ஊர், ரேபா என்னும் மீதியானின் பிரபுக்களையும் மோசே வெட்டிப்போட்டான்.

22இஸ்ரவேல் மக்கள் வெட்டின மற்றவர்களோடும், பேயோரின் மகனாகிய பிலேயாம் என்னும் குறிசொல்லுகிறவனையும் பட்டயத்தினால் வெட்டிப்போட்டார்கள்.

23அப்படியே யோர்தானும் அதற்கடுத்த பகுதியும் ரூபன் கோத்திரத்தின் எல்லையானது; இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் ரூபன் கோத்திரத்தார்களுக்கு, அவர்கள் வம்சங்களின்படி வந்த பங்கு.

24காத் கோத்திரத்திற்கு மோசே அவர்கள் வம்சங்களுக்குத் தகுந்தபடிக் கொடுத்தது என்னவென்றால்:

25யாசேரும், கீலேயாத்தின் எல்லாப் பட்டணங்களும், ரப்பாவுக்கு எதிரே இருக்கிற ஆரோவேர்வரையுள்ள அம்மோனியர்களின் பாதித் தேசமும்,

26எஸ்போன் துவங்கி ராமாத்மிஸ்பே வரை பெத்தொனீம் வரைக்கும் இருக்கிறதும், மகனாயீம் துவங்கி தெபீரின் எல்லைவரை இருக்கிறதும்,

27எஸ்போனின் ராஜாவாகிய சீகோனுடைய ராஜ்யத்தின் மற்றப் பகுதிகளாகிய பள்ளத்தாக்கில் இருக்கிற பெத்தாராமும், பெத்நிம்ராவும், சுக்கோத்தும் சாப்போனும், யோர்தான்வரை இருக்கிறதும், கிழக்கே யோர்தானின் கரையோரமாக கின்னரேத் கடலின் கடைசிவரைக்கும் இருக்கிறதும், அவர்கள் எல்லைக்குள்ளானது.

28இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் காத் கோத்திரத்தார்களுக்கு, அவர்களுடைய வம்சங்களின்படி வந்த பங்கு.

29மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்கும், மோசே அவர்களுடைய வம்சத்திற்குத் தகுந்தபடிக் கொடுத்தான்.

30மகனாயீம் துவங்கி, பாசானின் ராஜாவாகிய ஓகின் முழு ராஜ்யமாக இருக்கிற பாசான் முழுவதும், பாசானிலுள்ள யாவீரின் எல்லா ஊர்களுமான அறுபது பட்டணங்கள் அவர்களுடைய எல்லைக்குள்ளானது.

31பாதிக் கீலேயாத்தையும், பாசானிலே அஸ்தரோத், எத்ரேயி என்னும் ஓகு ராஜ்யத்தின் பட்டணங்களையும், மனாசேயின் மகனாகிய மாகீரின் மக்கள் பாதிப்பேருக்கு அவர்களுடைய வம்சங்களின்படியே கொடுத்தான்.

32மோசே கிழக்கே எரிகோவின் அருகே யோர்தானுக்கு அக்கரையில் இருக்கிற மோவாபின் சமவெளிகளில் பங்குகளாகக் கொடுத்தவைகள் இவைகளே.

33லேவி கோத்திரத்திற்கு மோசே பங்கு கொடுக்கவில்லை, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா அவர்களுக்குச் சொல்லியிருந்தபடி, அவரே அவர்களுடைய பங்கு.

← Joshua 12Read In The App, Free →Joshua 14 →

Study Joshua 13

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324