Nahum · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Nahum 3

1இரத்தப்பழிகளின் நகரத்திற்கு ஐயோ, அது வஞ்சகத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது; கொள்ளை ஓயாமல் நடக்கிறது.

2சாட்டைகளின் ஓசையும், உருளைகளின் அதிர்ச்சியும், குதிரைகளின் பாய்ச்சலும், இரதங்கள் கடகடவென்று ஓடுகிற சத்தமும்,

3வீரர்கள் குதிரை ஏறுகிறதும், பட்டயங்கள் பிரகாசிக்கிறதும், ஈட்டிகள் மின்னுகிறதும், வெட்டுண்டவர்களின் குவியலும், பிரேதங்களின் மிகுதியும் அங்கே உண்டாயிருக்கும்; பிணங்களுக்கு கணக்கில்லை; அவர்கள் பிணங்களில் தடுக்கிவிழுகிறார்கள்.

4தன் வேசித்தனங்களினால் தேசங்களையும், தன் சூனியங்களினால் மக்களையும் விற்கிற மகா சூனியக்காரியும் ரூபவதியுமாயிருக்கிற வேசியினுடைய மிகுதியான வேசித்தனங்களினிமித்தம்,

5இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து உன் ஆடையின் ஓரங்களை உன் முகம்வரை தூக்கியெடுத்து, தேசங்களுக்கு உன் நிர்வாணத்தையும், இராஜ்யங்களுக்கு உன் மானத்தையும் வெளிப்படுத்தி,

6உன்மேல் தீட்டானவைகளை எறிந்து, உன்னைக் கனவீனப்படுத்தி, உன்னை வேடிக்கையாக்கிப்போடுவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

7அப்பொழுது உன்னைக் காண்கிறவனெல்லாம் நினிவே பாழாய்ப்போயிற்று, அதற்காகப் புலம்புகிறவர்கள் யார்? ஆறுதல் சொல்லுகிறவர்களை உனக்கு எங்கே தேடுவேனென்று சொல்லி, உன்னைவிட்டு ஓடிப் போவான்.

8நதிகள் மத்தியிலிருந்த நோ அம்மோனைப் + 3:8 எகிப்தின் தலைநகரம்பார்க்கிலும் நீ சிறப்பானவனோ? அதைச் சுற்றிலும் தண்ணீர் இருந்தது; சமுத்திரம் அதின் பாதுகாப்பும், சமுத்திரத்தில் இணையும் ஆறுகள் அதின் மதிலுமாயிருந்தன.

9எத்தியோப்பியாவும் எகிப்தும் எண்ணமுடியாத படையால் அதற்குப் பெலனாக இருந்தது; பூத்தும் லிபியாவும் அதற்கு உதவியாயிருந்தது.

10ஆயினும் அவள் குடியிருக்கக் கூடாதென்று சிறையிருப்பிலே கொண்டுபோகப்பட்டாள்; அவளுடைய குழந்தைகள் எல்லா வீதிகளின் முனைகளிலும் மோதியடிக்கப்பட்டார்கள்; அவளுடைய கனவான்கள் பெயரில் சீட்டுப்போட்டார்கள்; அவளுடைய பெரியவர்கள் எல்லோரும் சங்கிலிகளால் கட்டப்பட்டார்கள்.

11நீயும் வெறிகொண்டு ஒளித்துக்கொள்வாய்; நீயும் உன் எதிரிக்குத் தப்ப பாதுகாப்பான கோட்டையைத் தேடுவாய்.

12உன் அரண்களெல்லாம் முதல் பழுக்கும் பழங்களுள்ள அத்திமரங்களைப்போல் இருக்கும்; அவைகள் குலுக்கப்பட்டால் அவைகளின் பழம், சாப்பிடுகிறவன் வாயிலே விழும்.

13இதோ, உன் நடுவில் இருக்கிற மக்கள் பயந்தவர்கள்; உன் தேசத்தின் வாசல்கள் உன் எதிரிக்குமுன் திறக்கப்பட்டுப்போகும்; நெருப்பு உன் தாழ்ப்பாள்களைச் சுட்டெரிக்கும்.

14முற்றுகைக்குத் தண்ணீர் கொண்டுவந்து வை. உன் பாதுகாப்புகளைப் பலப்படுத்து; சேற்றிலே போய்க் களிமண்ணை மிதி, சூளையை உறுதிப்படுத்து.

15அங்கே நெருப்பு உன்னைச் சுட்டெரிக்கும், பட்டயம் உன்னை அழிக்கும்; அது பச்சைக்கிளிகளைப்போல் உன்னை அழித்துவிடும்; உன்னைப் பச்சைக்கிளிகளைப்போல் அதிகமாக்கிக்கொள், உன்னை வெட்டுக்கிளிகளைப்போல் அதிகமாக்கிக்கொள்.

16உன் வியாபாரிகளை வானத்தின் நட்சத்திரங்களைவிட அதிகமாக்கினாய்; இந்தப் பச்சைக்கிளிகள் பரவிப்பறந்துபோகும்.

17உன் சிறந்த தலைவர்கள் வெட்டுக்கிளிகளுக்கும், உன் தளபதிகள் பெருங்கிளிகளுக்கும் சமமாயிருக்கிறார்கள்; அவைகள் குளிர்ச்சியான நாளில் வேலிகளில் முகாமிட்டு, சூரியன் உதித்த உடனேயே பறந்துபோகும்; பின்பு அவைகள் இருக்கும் இடம் இன்னதென்று தெரியாது.

18அசீரியா ராஜாவே, உன் மேய்ப்பர்கள் உறங்குவார்கள்; உன் பிரபலமானவர்கள் படுத்திருப்பார்கள்; உன் மக்கள் மலைகளின்மேல் சிதறியிருக்கிறார்கள், அவைகளைக் கூட்டிச் சேர்ப்பவன் இல்லை.

19உன் நொறுங்குதலுக்குப் பரிகாரம் இல்லை; உன் காயம் கொடியது; உன் செய்தியைக் கேட்பவர்கள் யாவரும் உன்பேரில் கைகொட்டுவார்கள்; உன் பொல்லாப்பு எந்நேரமும் யார் மேலேதான் பாயாமற்போனது?

← Nahum 2Read In The App, Free →Habakkuk 1 →

Study Nahum 3

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123