1 Chronicles · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

1 Chronicles 15

1அவன் தனக்கு தாவீதின் நகரத்தில் வீடுகளைக் கட்டி, தேவனுடைய பெட்டிக்கு ஒரு இடத்தை ஆயத்தப்படுத்தி, அதற்கு ஒரு கூடாரத்தைப் போட்டான்.

2பிறகு தாவீது: லேவியர்கள் தவிர வேறொருவரும் தேவனுடைய பெட்டியை எடுக்கக் கூடாது; தேவனுடைய பெட்டியை எடுக்கவும், என்றைக்கும் அவருக்குப் பணிவிடைசெய்யவும், அவர்களையே யெகோவா தெரிந்துகொண்டார் என்றான்.

3அப்படியே யெகோவாவுடைய பெட்டிக்குத் தான் ஆயத்தப்படுத்தின அதின் இடத்திற்கு அதைக் கொண்டுவரும்படி, தாவீது இஸ்ரவேலையெல்லாம் எருசலேமிலே கூடிவரச்செய்தான்.

4ஆரோனின் சந்ததிகளையும்,

5லேவியர்களாகிய கோகாத் சந்ததியில் பிரபுவாகிய ஊரியேலையும், அவனுடைய சகோதரர்களாகிய நூற்றிருபதுபேரையும்,

6மெராரியின் சந்ததியில் பிரபுவாகிய அசாயாவையும், அவனுடைய சகோதரர்களாகிய இருநூற்றிருபதுபேரையும்,

7கெர்சோன் மகன்களில் பிரபுவாகிய யோவேலையும், அவனுடைய சகோதரர்களாகிய நூற்றுமுப்பதுபேரையும்,

8எலிசாபான் மகன்களில் பிரபுவாகிய செமாயாவையும், அவனுடைய சகோதரர்களாகிய இருநூறுபேரையும்,

9எப்ரோன் சந்ததியில் பிரபுவாகிய ஏலியேலையும், அவனுடைய சகோதரர்களாகிய எண்பதுபேரையும்,

10ஊசியேல் சந்ததியில் பிரபுவாகிய அம்மினதாபையும், அவனுடைய சகோதரர்களாகிய நூற்றுப்பன்னிரெண்டு பேரையும் தாவீது கூடிவரச்செய்தான்.

11பின்பு தாவீது ஆசாரியர்களாகிய சாதோக்கையும், அபியத்தாரையும், லேவியர்களாகிய ஊரியேல், அசாயா, யோவேல், செமாயா, ஏலியேல், அம்மினதாப் என்பவர்களையும் அழைத்து,

12அவர்களை நோக்கி: லேவியர்களில் நீங்கள் பிதாக்களுடைய சந்ததிகளின் தலைவர்கள், நீங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவின் பெட்டியை அதற்கு நான் ஆயத்தம்செய்த இடத்திற்குக் கொண்டுவரும்படி, உங்களையும் உங்களுடைய சகோதரர்களையும் பரிசுத்தம்செய்துகொள்ளுங்கள்.

13முதலில் நீங்கள் அதை சுமக்காததாலும், நாம் நம்முடைய தேவனாகிய யெகோவாவை நியாயமானபடி தேடாமற்போனதாலும், அவர் நமக்குள்ளே அடிவிழச்செய்தார் என்றான்.

14ஆசாரியர்களும் லேவியர்களும் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவின் பெட்டியைக் கொண்டுவரத் தங்களைச் சுத்தம்செய்துகொண்டார்கள்.

15பின்பு லேவியர்கள் யெகோவாவுடைய வார்த்தையின்படியே, மோசே கற்பித்தபடி தேவனுடைய பெட்டியை அதின் தண்டுகளினால் தங்கள் தோள்மேல் எடுத்துக்கொண்டுவந்தார்கள்.

16தாவீது லேவியர்களின் பிரபுக்களை நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரர்களாகிய பாடகர்களைத் தம்புரு சுரமண்டலம் கைத்தாளம் முதலிய கீதவாத்தியங்கள் முழங்க, தங்கள் சத்தத்தை உயர்த்தி, சந்தோஷம் உண்டாகப் பாடும்படி நிறுத்தவேண்டும் என்று சொன்னான்.

17அப்படியே லேவியர்கள் யோவேலின் மகனாகிய ஏமானையும், அவனுடைய சகோதரர்களில் பெரகியாவின் மகனாகிய ஆசாப்பையும், மெராரியின் சந்ததியான தங்களுடைய சகோதரர்களில் குஷாயாவின் மகனாகிய ஏத்தானையும்,

18இவர்களோடு இரண்டாவது வரிசையாகத் தங்களுடைய சகோதரர்களாகிய சகரியா, பேன், யாசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், பெனாயா, மாசெயா, மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத்ஏதோம், ஏயெல் என்னும் வாசல் காவலாளர்களையும் நிறுத்தினார்கள்.

19பாடகர்களாகிய ஏமானும், ஆசாப்பும், ஏத்தானும், வெண்கல தொனியுள்ள கைத்தாளங்களை ஒலிக்கச்செய்து பாடினார்கள்.

20சகரியா, ஆசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், மாசெயா, பெனாயா என்பவர்கள் அல்மோத் என்னும் இசையில் பாடி, தம்புருக்களை வாசித்தார்கள்.

21மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத்ஏதோம், ஏயெல், அசசியா என்பவர்கள் செமனீத் என்னும் இசையில் பாடி, சுரமண்டலங்களை நேர்த்தியாக வாசித்தார்கள்.

22லேவியர்களுக்குள்ளே கெனானியா என்பவன் சங்கீதத்தலைவனாக இருந்தான்; அவன் நிபுணனானபடியால், கீதவித்தையை நடத்தினான்.

23பெரகியாவும் எல்க்கானாவும் பெட்டிக்கு முன்பாகக் காவல்காத்துவந்தார்கள்.

24செபனியா, யோசபாத், நெதனெயேல், அமாசாயி, சகரியா, பெனாயா, எலியேசர் என்னும் ஆசாரியர்கள் தேவனுடைய பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகளை ஊதினார்கள்; ஓபேத்ஏதோமும், எகியாவும் பெட்டிக்கு வாசல் காவலாளிகளாக இருந்தார்கள்.

25இப்படி தாவீதும், இஸ்ரவேலின் மூப்பர்களும், ஆயிரம்பேர்களின் தலைவர்கள் யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து மகிழ்ச்சியோடு கொண்டுவரச்செய்தார்கள்.

26யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவியர்களுக்கு தேவன் தயவு செய்ததால், அவர்கள் ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டார்கள்.

27தாவீதும், பெட்டியை சுமக்கிற எல்லா லேவியர்களும், பாடகர்களும், பாடகர்களின் வேலையை விசாரிக்கிற தலைவனாகிய கெனானியாவும், மெல்லிய புடவையான சால்வைகளை அணிந்திருந்தார்கள்; தாவீது சணல்நூல் ஏபோத்தை அணிந்திருந்தான்.

28அப்படியே இஸ்ரவேலனைத்தும் யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கெம்பீரத்தோடும், எக்காளங்கள் பூரிகைகள் கைத்தாளங்களின் சத்தத்தோடும், தம்புருக்களையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற சத்தத்தோடும் கொண்டுவந்தார்கள்.

29யெகோவாவுடைய உடன்படிக்கைப்பெட்டி, தாவீதின் நகரம்வரை வந்தபோது, சவுலின் மகளாகிய மீகாள் பலகணி வழியாகப் பார்த்து, தாவீது ராஜா ஆடிப்பாடி வருகிறதைக் கண்டு, அவனைத் தன்னுடைய இருதயத்தில் அவமதித்தாள்.

← 1 Chronicles 14Read In The App, Free →1 Chronicles 16 →

Study 1 Chronicles 15

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

1234567891011121314151617181920212223242526272829