1 Kings · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

1 Kings 21

1இவைகளுக்குப் பின்பு, யெஸ்ரயேலனாகிய நாபோத்திற்கு யெஸ்ரயேலிலே சமாரியாவின் ராஜாவாகிய ஆகாபின் அரண்மனையின் அருகில் ஒரு திராட்சைத்தோட்டம் இருந்தது.

2ஆகாப் நாபோத்தோடு பேசி: உன்னுடைய திராட்சைத்தோட்டம் என்னுடைய வீட்டிற்கு அருகில் இருப்பதால், அதைக் கீரைத்தோட்டமாக்கும்படி எனக்குக் கொடு, அதைவிட நல்ல திராட்சைத்தோட்டத்தை அதற்குப் பதிலாக உனக்குத் தருவேன்; அல்லது உனக்கு வேண்டுமானால், அதின் விலைக்கிரயமான பணத்தைத் தருவேன் என்றான்.

3நாபோத் ஆகாபை நோக்கி: நான் என்னுடைய முன்னோர்களின் சுதந்தரத்தை உமக்குத் தராதபடி யெகோவா என்னைக் காப்பாராக என்றான்.

4இப்படி என்னுடைய முன்னோர்களின் சுதந்திரத்தை உமக்குக் கொடுக்கமாட்டேன் என்று யெஸ்ரயேலனாகிய நாபோத் தன்னோடு சொன்ன வார்த்தைக்காக ஆகாப் சலிப்பும் கோபமுமாகத் தன்னுடைய வீட்டிற்கு வந்து, சாப்பிட்டாமல், தன்னுடைய கட்டிலின்மேல் படுத்து, தன்னுடைய முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தான்.

5அப்பொழுது அவனுடைய மனைவியாகிய யேசபேல் அவனிடம் வந்து: நீர் சாப்பிடாதபடி, உம்முடைய மனம் சோர்வாக இருப்பது என்ன என்று அவனைக் கேட்டதற்கு,

6அவன் அவளைப் பார்த்து: நான் யெஸ்ரயேலனாகிய நாபோத்தோடு பேசி: உன்னுடைய திராட்சைத்தோட்டத்தை எனக்கு விலைக்கிரயமாகக் கொடு; அல்லது உனக்கு பிடித்திருந்தால் அதற்குப் பதிலாக வேறு திராட்சைத்தோட்டத்தை உனக்குத் தருவேன் என்றேன். அதற்கு அவன்: என்னுடைய திராட்சைத்தோட்டத்தை உமக்குக் கொடுக்கமாட்டேன் என்று சொன்னான் என்றான்.

7அப்பொழுது அவனுடைய மனைவியாகிய யேசபேல் அவனை நோக்கி: நீர் இப்போது இஸ்ரவேலின்மேல் அரசாட்சிசெய்கிறவர் அல்லவா? நீர் எழுந்து சாப்பிட்டு மனமகிழ்ச்சியாக இரும்; யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சைத்தோட்டத்தை நான் உமக்குக் கொடுப்பேன் என்று சொன்னாள்.

8அவள் ஆகாபின் பெயரால் கடிதங்களை எழுதி, அவன் முத்திரையை அவைகளுக்குப் போட்டு, அந்த கடிதங்களை நாபோத் இருக்கும் பட்டணத்தில் அவனோடு குடியிருக்கிற மூப்பர்களிடத்திற்கும் பெரியோர்களிடத்திற்கும் அனுப்பினாள்.

9அந்த கடிதங்களில் அவள் எழுதினது என்னவென்றால்: நீங்கள் உபவாசம் என்று தெரியப்படுத்தி, நாபோத்தை மக்களின் முன்பாக நிறுத்தி,

10தேவனையும் ராஜாவையும் தூஷித்தாய் என்று அவன்மேல் சாட்சி சொல்லுகிற வஞ்சகமான இரண்டுபேரை அவனுக்கு எதிராக நிறுத்தி, அவனை வெளியே கொண்டுபோய் அவன் சாகும்படி அவன் மீது கல்லெறியுங்கள் என்று எழுதினாள்.

11அவன் பட்டணத்தில் குடியிருக்கிற மூப்பர்களும் பெரியோர்களுமாகிய அவன் பட்டணத்து மனிதர்கள், யேசபேல் தங்களுக்கு அனுப்பின கடிதங்களில் எழுதிக் கட்டளையிட்டிருந்தபடியே செய்தார்கள்.

12அவர்கள் உபவாசம் என்று தெரியப்படுத்தி நாபோத்தை மக்களின் முன்னே நிறுத்தினார்கள்.

13அப்பொழுது வஞ்சகமான இரண்டுபேர் வந்து, அவனுக்கு எதிராக உட்கார்ந்து: நாபோத் தேவனையும் ராஜாவையும் தூஷித்தான் என்று மக்களுக்கு முன்பாக அவன்மேல் சாட்சி சொன்னார்கள்; அதற்குப்பின்பு அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய், அவன் சாகும்படி அவனைக் கல்லெறிந்து,

14பிறகு யேசபேலுக்கு, நாபோத் கல்லெறியப்பட்டு செத்தான் என்று சொல்லியனுப்பினார்கள்.

15நாபோத் கல்லெறியப்பட்டு செத்ததை யேசபேல் கேட்டபோது, ஆகாபை நோக்கி: நீர் எழுந்து, யெஸ்ரயேலனாகிய நாபோத் உமக்கு விலைக்கிரயமாகக் கொடுக்கமாட்டேன் என்று சொன்ன திராட்சைத்தோட்டத்தைச் சொந்தமாக எடுத்துக்கொள்ளும்; நாபோத் உயிரோடு இல்லை, அவன் செத்துப்போனான் என்றாள்.

16நாபோத் செத்துப்போனதை ஆகாப் கேட்டபோது, அவன் யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சைத்தோட்டத்தைச் சொந்தமாக எடுத்துக்கொள்ளும்படி எழுந்து போனான்.

17யெகோவாவுடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டானது, அவர்:

18நீ எழுந்து, சமாரியாவில் இருக்கிற இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபைச் சந்திக்கும்படி போ; இதோ, அவன் நாபோத்தின் திராட்சைத்தோட்டத்தைச் சொந்தமாக எடுத்துக்கொள்ள அங்கே போயிருக்கிறான்.

19நீ அவனைப் பார்த்து: நீ கொலை செய்ததும் எடுத்துக்கொண்டதும் இல்லையோ என்று யெகோவா சொல்லுகிறார்; நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின இடத்திலே உன்னுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்கும் என்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

20அப்பொழுது ஆகாப் எலியாவை நோக்கி: என்னுடைய பகைவனே, என்னைக் கண்டுபிடித்தாயா என்றான். அதற்கு அவன்: கண்டுபிடித்தேன்; யெகோவாவின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்ய நீ உன்னை விற்றுப்போட்டாய்.

21நான் உன்மேல் தீங்கு வரச்செய்து, உன்னுடைய சந்ததியை அழித்துப் போட்டு, ஆகாபுக்கு சுவரில் நீர்விடும் ஒரு நாயாவது இல்லாதபடி இஸ்ரவேலில் அடைபட்டவனையும் விடுபட்டவனையும் அழித்து,

22நீ எனக்குக் கோபம் உண்டாக்கி, இஸ்ரவேலைப் பாவம் செய்யச்செய்ததால், உன்னுடைய குடும்பத்தை நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் குடும்பத்திற்கும், அகியாவின் மகனாகிய பாஷாவின் குடும்பத்திற்கும் சமமாக்குவேன் என்றார் என்று சொன்னான்.

23யேசேபேலையும் குறித்துக் யெகோவா: நாய்கள் யேசபேலை யெஸ்ரெயேலின் மதில் அருகே தின்னும்.

24ஆகாபின் சந்ததியில் பட்டணத்திலே சாகிறவனை நாய்களும், வெளியிலே சாகிறவனை ஆகாயத்துப் பறவைகளும் சாப்பிடும் என்றார்.

25தன்னுடைய மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே, யெகோவாவின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்ய, தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப்போல ஒருவனுமில்லை.

26யெகோவா இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக துரத்திவிட்ட எமோரியர்கள் செய்தபடியெல்லாம், அவன் அருவருப்பான விக்கிரகங்களைப் பின்பற்றி, மிகவும் அருவருப்பாய் நடந்துகொண்டான்.

27ஆகாப் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன்னுடைய ஆடைகளைக் கிழித்து, தன்னுடைய சரீரத்தின்மேல் சணலாடையைப் போர்த்துக்கொண்டு, உபவாசம்செய்து, சணலாடையில் படுத்துத் தாழ்மையாக நடந்துகொண்டான்.

28அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டாயிற்று, அவர்:

29ஆகாப் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தியதைக் கண்டாயா? அவன் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்துகிறதால், நான் அவனுடைய நாட்களில் அந்த அழிவை வரச்செய்யாமல், அவனுடைய மகனுடைய நாட்களில் அதை அவனுடைய வீட்டின்மேல் வரச்செய்வேன் என்றார்.

← 1 Kings 20Read In The App, Free →1 Kings 22 →

Study 1 Kings 21

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122