1 Kings · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

1 Kings 22

1சீரியர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் மூன்று வருடங்கள் யுத்தமில்லாமல் இருந்தது.

2மூன்றாம் வருடத்திலே யூதாவின் ராஜாவாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவிடம் போயிருக்கும்போது,

3இஸ்ரவேலின் ராஜா தன்னுடைய வேலைக்காரர்களை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத் நம்முடையதென்று அறியீர்களா? நாம் அதைச் சீரியா ராஜாவின் கையிலிருந்து பிடித்துக்கொள்ளாமல், சும்மாயிருப்பானேன் என்று சொல்லி,

4யோசபாத்தை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்செய்ய என்னோடு கூட வருகிறீரா என்று கேட்டான். யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: நான்தான் நீர், என்னுடைய மக்கள் உம்முடைய மக்கள், என்னுடைய குதிரைகள் உம்முடைய குதிரைகள் என்றான்.

5பின்னும் யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: யெகோவாவுடைய வார்த்தையை இன்றைக்கு விசாரித்து அறியும் என்றான்.

6அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா ஏறக்குறைய நானூறு தீர்க்கதரிசிகளைக் கூடிவரச்செய்து: நான் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்செய்யப்போகலாமா, போக வேண்டாமா என்று அவர்களைக் கேட்டதற்கு; அவர்கள், போம், ஆண்டவர் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.

7பின்பு யோசபாத்: நாம் விசாரித்து அறிவதற்கு இவர்களைத் தவிர யெகோவாவுடைய தீர்க்கதரிசி வேறே யாராவது இங்கே இல்லையா என்று கேட்டான்.

8அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா, யோசபாத்தை நோக்கி: யெகோவாவிடம் விசாரித்து அறிவதற்கு இம்லாவின் மகனாகிய மிகாயா என்னும் இன்னும் ஒருவன் இருக்கிறான்; ஆனாலும் நான் அவனைப் பகைக்கிறேன்; அவன் என்னைக்குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்றான். அதற்கு யோசபாத், ராஜாவே, அப்படிச் சொல்லவேண்டாம் என்றான்.

9அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா அதிகாரிகளில் ஒருவனைக் கூப்பிட்டு: இம்லாவின் மகனாகிய மிகாயாவைச் சீக்கிரமாய் அழைத்துவா என்றான்.

10இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும், சமாரியாவின் வாசலுக்கு முன்பாக இருக்கும் திறந்த வெளியிலே ராஜஉடை அணிந்துகொண்டவர்களாக, அவரவர் தம்தம் சிங்காசனத்தில் உட்கார்ந்திருந்தார்கள்; எல்லாத் தீர்க்கதரிசிகளும் அவர்களுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.

11கேனானாவின் மகனாகிய சிதேக்கியா தனக்கு இரும்புக்கொம்புகளை உண்டாக்கி, இவைகளால் நீர் சீரியர்களைத் தள்ளி அழித்துப்போடுவீர் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.

12எல்லாத் தீர்க்கதரிசிகளும் அதற்கு இசைவாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் நீர் போம், உமக்கு வாய்க்கும்; யெகோவா அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.

13மிகாயாவை அழைக்கப்போன ஆள் அவனுடன் பேசி: இதோ, தீர்க்கதரிசிகளுடைய வார்த்தைகள் எல்லாம் ராஜாவிற்கு நன்மையாக இருக்கிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களில் ஒருவர் வார்த்தையைப்போல இருக்கும்படி நன்மையாகச் சொல்லும் என்றான்.

14அதற்கு மிகாயா: யெகோவா என்னிடம் சொல்வதையே சொல்லுவேன் என்று யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.

15அவன் ராஜாவிடம் வந்தபோது, ராஜா அவனைப் பார்த்து: மிகாயாவே, நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்செய்யப் போகலாமா, போகவேண்டாமா என்று கேட்டான். அதற்கு அவன்: நீர் போம், உமக்கு வாய்க்கும்; யெகோவா அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார்; என்றான்.

16ராஜா அவனைப் பார்த்து: நீ யெகோவாவுடைய நாமத்தில் உண்மையைத்தவிர வேறொன்றையும் என்னிடம் சொல்லாதபடிக்கு, நான் எத்தனைமுறை உன்னை ஆணையிடச் செய்யவேண்டும் என்று சொன்னான்.

17அப்பொழுது மிகாயா: இஸ்ரவேலர்கள் எல்லோரும் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல மலைகளிலே சிதறப்பட்டதைக் கண்டேன்; அப்பொழுது யெகோவா: இவர்களுக்கு எஜமான் இல்லை; அவரவர் தம்தம் வீட்டிற்குச் சமாதானத்தோடு திரும்பக்கடவர்கள் என்றார் என்று சொன்னான்.

18அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: இவன் என்னைக் குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்று நான் உம்மோடு சொல்லவில்லையா என்றான்.

19அப்பொழுது மிகாயா சொன்னது: யெகோவாவுடைய வார்த்தையைக் கேளும்; யெகோவா தம்முடைய சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறதையும், பரமசேனையெல்லாம் அவரிடம் அவரின் வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் நிற்கிறதையும் கண்டேன்.

20அப்பொழுது யெகோவா: ஆகாப் போய், கீலேயாத்திலுள்ள ராமோத்தில் விழும்படி, அவனுக்குப் போதனை செய்கிறவன் யார் என்று கேட்டதற்கு, ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள்.

21அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, யெகோவாவுக்கு முன்பாக நின்று; நான் அவனுக்குப் போதனை செய்வேன் என்றது.

22எதினால் என்று யெகோவா அதைக் கேட்டார். அப்பொழுது அது: நான் போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லோரின் வாயிலும் பொய்யின் ஆவியாக இருப்பேன் என்றது. அதற்கு அவர்: நீ அவனுக்குப் போதனைசெய்து அப்படி நடக்கச்செய்வாய்; போய் அப்படிச் செய் என்றார்.

23ஆதலால் யெகோவா பொய்யின் ஆவியை உம்முடைய தீர்க்கதரிசிகளாகிய இவர்கள் எல்லோருடைய வாயிலும் கட்டளையிட்டார்; யெகோவா உம்மைக் குறித்துத் தீமையாகச் சொன்னார் என்றான்.

24அப்பொழுது கேனானாவின் மகனாகிய சிதேக்கியா அருகில் வந்து, மிகாயாவைக் கன்னத்தில் அடித்து, யெகோவாவுடைய ஆவி எந்த வழியாக என்னைவிட்டு உன்னோடு பேசும்படி வந்தது என்றான்.

25அதற்கு மிகாயா: நீ ஒளிந்துகொள்ள உள் அறையிலே பதுங்கும் அந்த நாளிலே அதைக் காண்பாய் என்றான்.

26அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: மிகாயாவைப் பிடித்து, அவனைப் பட்டணத்தின் தலைவனாகிய ஆமோனிடத்திற்கும், ராஜாவின் மகனாகிய யோவாசிடத்திற்கும் திரும்பக் கொண்டுபோய்,

27இவனைச் சிறைச்சாலையிலே வைத்து, நான் சமாதானத்தோடு வரும்வரை, இவனுக்கு கொஞ்சம் அப்பத்தையும் கொஞ்சம் தண்ணீரையும் சாப்பிடக் கொடுங்கள் என்று ராஜா சொன்னார் என்று சொல்லுங்கள் என்றான்.

28அப்பொழுது மிகாயா: நீர் சமாதானத்தோடு திரும்பி வருகிறது உண்டானால், யெகோவா என்னைக்கொண்டு பேசவில்லை என்று சொல்லி; மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேளுங்கள் என்றான். 1 ராமோத் கீலேயாத்திலே ஆகாப் கொல்லப்படுதல்

29பின்பு இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் போனார்கள்.

30இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: நான் வேஷம்மாறி யுத்தத்தில் நுழைவேன்; நீரோ ராஜஉடை அணிந்திரும் என்று சொல்லி, இஸ்ரவேலின் ராஜா வேஷம்மாறி, யுத்தத்தில் நுழைந்தான்.

31சீரியாவின் ராஜா தனக்கு இருக்கிற இரதங்களின் முப்பத்திரண்டு தலைவர்களையும் நோக்கி: நீங்கள் சிறியவர்களோடும் பெரியவர்களோடும் யுத்தம்செய்யாமல் இஸ்ரவேலின் ராஜா ஒருவனோடுமாத்திரம் யுத்தம் செய்யுங்கள் என்று கட்டளையிட்டிருந்தான்.

32எனவே, இரதங்களின் தலைவர்கள் யோசபாத்தைக் காணும்போது, இவன்தான் இஸ்ரவேலின் ராஜா என்று சொல்லி யுத்தம்செய்ய அவனுக்கு நேராக வந்தார்கள்; அப்பொழுது யோசபாத் கூக்குரலிட்டான்.

33இவன் இஸ்ரவேலின் ராஜா அல்ல என்று இரதங்களின் தலைவர்கள் கண்டு அவனைவிட்டு விலகிப்போனார்கள்.

34ஒருவன் தெரியாமல் வில்லை நாணேற்றி எய்தான்; அது இஸ்ரவேலின் ராஜாவினுடைய கவசத்தின் சந்துகளுக்குள் பட்டது; அப்பொழுது அவன் தன்னுடைய ரத ஓட்டியைப் பார்த்து; நீ திருப்பி என்னை இராணுவத்திற்கு மறுபுறம் கொண்டுபோ; எனக்குக் காயம்பட்டது என்றான்.

35அன்றையதினம் யுத்தம் அதிகரித்தது; ராஜாவைச் சீரியர்களுக்கு எதிராக இரதத்தில் நிறுத்திவைத்தார்கள்; சாயங்காலத்திலே அவன் இறந்துபோனான்; காயத்தின் இரத்தம் இரதத்தின் தட்டிலே வடிந்தது.

36பொழுதுபோகும்போது அவரவர் தம்தம் பட்டணத்திற்கும், அவரவர் தம்தம் தேசத்திற்கும் போகலாம் என்று இராணுவத்தில் அறிவிக்கப்பட்டது.

37அப்படியே ராஜா இறந்தபின்பு சமாரியாவுக்குக் கொண்டுவரப்பட்டான்; ராஜாவை சமாரியாவில் அடக்கம்செய்தார்கள்.

38அந்த இரதத்தையும் அவனுடைய கவசத்தையும் சமாரியாவின் குளத்திலே கழுவுகிறபோது யெகோவா சொல்லியிருந்த வார்த்தையின்படியே, நாய்கள் அவனுடைய இரத்தத்தை நக்கினது.

39ஆகாபின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்தவைகளும், அவன் கட்டின அரண்மனையின் வரலாறும், அவன் கட்டின எல்லாப் பட்டணங்களின் வரலாறும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது.

40ஆகாப் மரணமடைந்து முன்னோர்களோடு அடக்கம் செய்யப்பட்டபின்பு, அவனுடைய மகனாகிய அகசியா அவனுடைய இடத்தில் ராஜாவானான். 1 யூதாவின் ராஜாவாகிய யோசபாத்

41ஆசாவின் மகனாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் அரசாட்சி செய்த நான்காம் வருடத்தில் யூதாவின்மேல் ராஜாவானான்.

42யோசபாத் ராஜாவாகிறபோது முப்பத்தைந்து வயதாக இருந்து, இருபத்தைந்து வருடங்கள் எருசலேமில் அரசாட்சிசெய்தான்; சில்கியின் மகளாகிய அவனுடைய தாயின்பெயர் அசுபாள்.

43அவன் தன்னுடைய தகப்பனாகிய ஆசாவின் வழிகளிலெல்லாம் நடந்தான்; அவன் அதைவிட்டு விலகாமல் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் மேடைகள் இடிக்கப்படவில்லை; மக்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபம் காட்டிவந்தார்கள்.

44யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவோடு சமாதானமாக இருந்தான்.

45யோசபாத்தின் மற்ற செயல்பாடுகளும், அவன் காட்டிய வல்லமையும், அவன் செய்த யுத்தமும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது.

46தன்னுடைய தகப்பனாகிய ஆசாவின் நாட்களில் மீதியாக விட்டிருந்த ஆண் விபசாரக்காரர்களையும் அவனுடைய தேசத்திலிருந்து அற்றுப்போகச்செய்தான்.

47அப்பொழுது ஏதோமில் ராஜா இல்லை; பிரதிராஜா ஒருவன் இருந்தான்.

48பொன்னுக்காக ஓப்பீருக்குப் போகும்படி, யோசபாத் தர்ஷீஸ் கப்பல்களைச் செய்தான்; ஆனால் அவைகள் போகவில்லை; அவைகள் எசியோன் கேபேரிலே உடைந்துபோனது.

49அப்பொழுது ஆகாபின் மகனாகிய அகசியா யோசபாத்தை நோக்கி: என்னுடைய வேலைக்காரர்கள் உம்முடைய வேலைக்காரர்களோடு கப்பல்களில் போகட்டும் என்றான்; அதற்கு யோசபாத் சம்மதிக்கவில்லை.

50யோசபாத் மரணமடைந்து, தாவீதின் நகரத்தில் தன்னுடைய முன்னோர்களோடு அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய மகனாகிய யோராம் அவனுடைய இடத்தில் ராஜாவானான். 1 இஸ்ரவேலின் ராஜாவாகிய அகசியா

51ஆகாபின் மகனாகிய அகசியா யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் பதினேழாம் வருடத்திலே சமாரியாவில் ராஜாவாகி, இஸ்ரவேலின்மேல் இரண்டு வருடங்கள் அரசாட்சிசெய்து,

52யெகோவாவின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்து, தன்னுடைய தகப்பன் வழியிலும், தன்னுடைய தாயின் வழியிலும், இஸ்ரவேலைப் பாவம்செய்யச்செய்த நேபாத்தின் மகன் யெரொபெயாமின் வழியிலும் நடந்து,

53பாகாலை வணங்கி, அதைப் பணிந்துகொண்டு, தன்னுடைய தகப்பன் செய்தபடியெல்லாம் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்குக் கோபமூட்டினான்.

← 1 Kings 21Read In The App, Free →2 Kings 1 →

Study 1 Kings 22

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122