2 Samuel · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

2 Samuel 18

1தாவீது தன்னோடு இருந்த மக்களைக் கணக்கிட்டுப்பார்த்து, அவர்கள்மேல் 1,000 பேருக்கு தலைவர்களையும், 100 பேருக்கு தலைவர்களையும் ஏற்படுத்தி,

2பின்பு தாவீது படைகளில் மூன்றில் ஒரு பிரிவை யோவாபின் கையிலும், மூன்றில் ஒரு பிரிவைச் செருயாவின் மகனும் யோவாபின் சகோதரனுமான அபிசாயின் கையிலும், மூன்றில் ஒரு பிரிவைக் கித்தியனான ஈத்தாயின் கையிலுமாக அனுப்பி: நானும் உங்களோடு புறப்பட்டு வருவேன் என்று ராஜா இராணுவங்களுக்குச் சொன்னான்.

3மக்களோ: நீர் புறப்படவேண்டாம்; நாங்கள் ஓடிப்போனாலும், அவர்கள் எங்கள் காரியத்தை ஒரு பொருட்டாக நினைக்கமாட்டார்கள்; எங்களில் பாதிப்பேர் இறந்துபோனாலும், எங்கள் காரியத்தைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள்; நீரோ, எங்களில் பத்தாயிரம்பேருக்கு சமமானவர்; நீர் பட்டணத்தில் இருந்துகொண்டு, எங்களுக்கு உதவி செய்கிறது எங்களுக்கு நலமாக இருக்கும் என்றார்கள்.

4அப்பொழுது ராஜா அவர்களைப் பார்த்து: உங்களுக்கு நலமாகத் தோன்றுகிறதைச் செய்வேன் என்று சொல்லி, ராஜா நகர வாசலின் ஓரத்திலே நின்றான்; மக்கள் எல்லோரும் நூறு நூறாகவும், ஆயிரம் ஆயிரமாகவும் புறப்பட்டார்கள்.

5ராஜா யோவாபையும், அபிசாயையும், ஈத்தாயையும் நோக்கி: வாலிபனான அப்சலோமை எனக்காக மெதுவாக நடத்துங்கள் என்று கட்டளையிட்டான்; இப்படி ராஜா அப்சலோமைக் குறித்து தலைவர்களுக்கெல்லாம் கட்டளையிட்டதை மக்கள் எல்லோரும் கேட்டிருந்தார்கள்.

6மக்கள் வெளியே இஸ்ரவேலர்களுக்கு எதிராகப் புறப்பட்டபின்பு, எப்பிராயீம் காட்டிலே யுத்தம் நடந்தது.

7அங்கே இஸ்ரவேல் மக்கள் தாவீதின் வீரர்களுக்கு முன்பாக தோற்கடிக்கப்பட்டார்கள்; அங்கே அந்த நாளிலே இருபதாயிரம்பேர் சாகத்தக்கதாக பேரழிவு உண்டானது.

8யுத்தம் அந்த தேசம் எங்கும் பரவியது; அந்த நாளில் பட்டயத்தால் இறந்த மக்களைவிட, காடு பட்சித்துப்போட்ட மக்கள் அதிகம்.

9அப்சலோம் தாவீதின் வீரர்களை சந்திக்க நேர்ந்தது; அப்சலோம் கோவேறு கழுதையின்மேல் ஏறிவரும்போது, அந்தக் கோவேறு கழுதை பின்னலான ஒரு பெரிய கர்வாலிமரத்தின்கீழ் வந்ததினால், அவனுடைய தலை கர்வாலி மரத்தில் மாட்டிக்கொண்டு, அவன் வானத்திற்கும் பூமிக்கும் நடுவே தொங்கினான்; அவன் ஏறியிருந்த கோவேறு கழுதை தள்ளிப்போனது.

10அதை ஒருவன் கண்டு, யோவாபுக்கு அறிவித்து: இதோ, அப்சலோமை ஒரு கர்வாலி மரத்திலே தொங்குவதைப் பார்த்தேன் என்றான்.

11அப்பொழுது யோவாப் தனக்கு அதை அறிவித்தவனை நோக்கி: நீ அதைப் பார்த்தாயே; பின்பு ஏன் அவனை அங்கேயே வெட்டி, நிலத்தில் விழும்படி செய்யவில்லை? நான் உனக்குப் பத்து வெள்ளிக்காசையும் ஒரு வாரையும் கொடுக்கக் கடமையுள்ளவனாக இருப்பேனே என்றான்.

12அந்த மனிதன் யோவாபை நோக்கி: என்னுடைய கைகளில் ஆயிரம் வெள்ளிக்காசு நிறுத்துக் கொடுக்கப்பட்டாலும், நான் ராஜாவுடைய மகன்மேல் என்னுடைய கையை நீட்டமாட்டேன்; வாலிபனான அப்சலோமை நீங்களே காப்பாற்றுங்கள் என்று ராஜா உமக்கும் அபிசாய்க்கும் ஈத்தாய்க்கும் எங்கள் காதுகள் கேட்கக் கட்டளையிட்டாரே.

13ராஜாவுக்கு ஒரு காரியமும் மறைவானது இல்லை; ஆதலால், நான் அதைச்செய்தால், என்னுடைய உயிருக்கே எதிராக செய்பவனாவேன், நீரும் எனக்கு எதிராக இருப்பீர் என்றான்.

14பின்பு யோவாப்: நான் இப்படி உன்னோடு பேசி, தாமதிக்கமாட்டேன் என்று சொல்லி, தன்னுடைய கையிலே மூன்று ஈட்டிகளை எடுத்துக்கொண்டு, அப்சலோம் இன்னும் கர்வாலி மரத்தின் நடுவிலே உயிரோடு தொங்கிக்கொண்டிருக்கும்போது, அவனுடைய மார்பிலே குத்தினான்.

15அப்பொழுது யோவாபின் ஆயுதம் ஏந்தினவர்களான பத்து வீரர்கள் அப்சலோமைச் சூழ்ந்து அவனை அடித்துக் கொன்று போட்டார்கள்.

16அப்பொழுது யோவாப் எக்காளம் ஊதி இராணுவத்தை நிறுத்தியதால், இராணுவம் இஸ்ரவேலர்களைப் பின்தொடர்வதைவிட்டுத் திரும்பினார்கள்.

17அவர்கள் அப்சலோமை எடுத்து, அவனைக் காட்டிலுள்ள ஒரு பெரிய குழியிலே போட்டு, அவன்மேல் மிகப் பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவரவர் தங்கள் வீடுகளுக்கு ஓடிப்போனார்கள்.

18அப்சலோம் உயிரோடு இருக்கும்போது: என்னுடைய பெயரை நினைக்கச்செய்யும்படியாக எனக்கு மகன் இல்லை என்று சொல்லி, ராஜாவின் பள்ளத்தாக்கிலே தனக்கென்று ஒரு தூணை நிறுத்தி, அந்தத் தூணுக்குத் தன்னுடைய பெயரை சூட்டினான்; அது இந்த நாள்வரைக்கும் அப்சலோமின் அடையாளம் என்று சொல்லப்படும். 1 தாவீதின் புலம்பல்

19சாதோக்கின் மகனான அகிமாஸ்: யெகோவா ராஜாவை அவர்களுடைய எதிரிகளின் கைக்கு விலக்கி நியாயம் செய்தார் என்னும் செய்தியை அவருக்குக் கொண்டுபோக, நான் வேகமாக ஓடட்டும் என்றான்.

20யோவாப் அவனை நோக்கி: இன்றையதினம் நீ செய்தியைக் கொண்டுபோகக்கூடாது; இன்னொரு நாளிலே நீ செய்தியைக் கொண்டுபோகலாம்; ராஜாவின் மகன் இறந்ததால், இன்றைக்கு நீ செய்தியைக் கொண்டுபோகவேண்டாம் என்று சொல்லி,

21யோவாப் கூஷியை நோக்கி: நீ போய், பார்த்ததை ராஜாவுக்கு அறிவிப்பாயாக என்றான்; கூஷி யோவாபை வணங்கி ஓடினான்.

22சாதோக்கின் மகனான அகிமாஸ் இன்னும் யோவாபை நோக்கி: எப்படியானாலும் கூஷியின் பின்பாக நானும் ஓடுகிறேன் என்று திரும்பக் கேட்டதற்கு, யோவாப்: என் மகனே, சொல்லும்படி உனக்கு நல்ல செய்தி இல்லாதிருக்கும்போது, நீ ஓடவேண்டியது என்ன என்றான்.

23அதற்கு அவன்: எப்படியானாலும் நான் ஓடுவேன் என்றான்; அப்பொழுது யோவாப்: ஓடு என்றான்; அப்படியே அகிமாஸ் சமவெளி நிலத்தின் வழியாக ஓடி கூஷிக்கு முந்திப்போனான்.

24தாவீது உள் மற்றும் வெளி வாசலின் நடுவாக உட்கார்ந்திருந்தான்; இரவு காவலன் மதில் வாசலின் மேற்கூரையின்மேல் நடந்து, தன்னுடைய கண்களை உயர்த்தி, இதோ, ஒரு மனிதன் தனியே ஓடிவருகிறதைப் பார்த்து,

25கூப்பிட்டு ராஜாவுக்கு அறிவித்தான். அப்பொழுது ராஜா: அவன் ஒருவனாக வந்தால், அவனுடைய வாயிலே நல்ல செய்தி இருக்கும் என்றான்; அவன் அருகே ஓடிவரும்போது,

26இரவு காவலன், வேறொருவன் ஓடிவருகிறதைப் பார்த்து: அதோ இன்னொரு மனிதன் தனியே ஓடிவருகிறான் என்று வாயிற்காவலனைக் கூப்பிட்டுச் சொன்னான்; அப்பொழுது ராஜா: அவனும் நல்ல செய்தி கொண்டுவருகிறவன் என்றான்.

27மேலும் இரவு காவலன்; முந்தினவனுடைய ஓட்டம் சாதோக்கின் மகன் அகிமாசுடைய ஓட்டம்போலிருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது என்றான்; அப்பொழுது ராஜா: அவன் நல்ல மனிதன்; அவன் நல்ல செய்தி சொல்ல வருகிறான் என்றான்.

28அகிமாஸ் வந்து ராஜாவை நோக்கி: சமாதானம் என்று சொல்லி, முகங்குப்புற விழுந்து, ராஜாவை வணங்கி, ராஜாவான என்னுடைய ஆண்டவனுக்கு எதிராகத் தங்கள் கைகளை எடுத்த மனிதர்களை ஒப்புக்கொடுத்திருக்கிற உம்முடைய தேவனான யெகோவாவுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்றான்.

29அப்பொழுது ராஜா: வாலிபனான அப்சலோம் சுகமாக இருக்கிறானா என்று கேட்டதற்கு, அகிமாஸ் யோவாப் ராஜாவின் வேலைக்காரனையும் உம்முடைய அடியானையும் அனுப்புகிறபோது, ஒரு பெரிய குழப்பம் இருந்தது; ஆனாலும் அது இன்னதென்று தெரியாது என்றான்.

30அப்பொழுது ராஜா: நீ அங்கே போய் நில் என்றான்; அவன் ஒரு பக்கத்தில் போய் நின்றான்.

31இதோ, கூஷி வந்து: ராஜாவான என்னுடைய ஆண்டவனே, நற்செய்தி, இன்று யெகோவா உமக்கு எதிராக எழும்பின எல்லோடைய கைக்கும் உம்மை விலக்கி நியாயம் செய்தார் என்றான்.

32அப்பொழுது ராஜா கூஷியைப் பார்த்து: வாலிபனான அப்சலோம் சுகமாக இருக்கிறானா என்று கேட்டதற்கு, கூஷி என்பவன்: அந்த வாலிபனுக்கு நடந்ததுபோல, ராஜாவான என் ஆண்டவனுடைய எதிரிகளுக்கும், தீங்கு செய்ய உமக்கு விரோதமாக எழும்புகிற யாவருக்கும் நடக்கட்டும் என்றான்.

33அப்பொழுது ராஜா மிகவும் கலங்கி, நகர வாசலின் மேல்வீட்டிற்குள் ஏறிப்போய் அழுதான்; அவன் ஏறிப்போகும்போது: என் மகனான அப்சலோமே, என் மகனே, என் மகனான அப்சலோமே, நான் உனக்குப் பதிலாக இறந்துபோனால் நலமாயிருக்கும்; அப்சலோமே, என் மகனே, என் மகனே, என்று சொல்லி அழுதான்.

← 2 Samuel 17Read In The App, Free →2 Samuel 19 →

Study 2 Samuel 18

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324