Deuteronomy · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Deuteronomy 12

1“உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவா, நீங்கள் சொந்தமாக்கிக்கொள்வதற்காக உங்களுக்கு கொடுக்கிற தேசத்திலே, நீங்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் கைக்கொண்டு நடக்கவேண்டிய கட்டளைகளும் நியமங்களுமாவன:

2நீங்கள் துரத்திவிடும் மக்கள் தங்கள் தெய்வங்களை வணங்கிய உயர்ந்த மலைகளின்மேலும், மேடுகளின்மேலும், பச்சையான சகல மரங்களின் கீழுமுள்ள இடங்களையெல்லாம் முற்றிலும் அழித்து,

3அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, சிலைகளைத் தகர்த்து, தோப்புகளை அக்கினியால் சுட்டெரித்து, தெய்வங்களின் சிலைகளை நொறுக்கி, அவைகளின் பெயரும் அவ்விடத்தில் இராமல் அழியும்படி செய்யக்கடவீர்கள்.

4உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு நீங்கள் அப்படிச் செய்யாமல்,

5உங்கள் தேவனாகிய யெகோவா தம்முடைய நாமம் விளங்கும்படி, உங்கள் சகல கோத்திரங்களிலும் தெரிந்துகொள்ளும் இடமாகிய அவருடைய வாசஸ்தலத்தையே நாடி, அங்கே போய்,

6அங்கே உங்களுடைய சர்வாங்க தகனங்களையும், பலிகளையும், தசமபாகங்களையும், உங்களுடைய கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், பொருத்தனைகளையும், உற்சாகபலிகளையும், ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் கொண்டுவந்து,

7அங்கே உங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியிலே சாப்பிட்டு, நீங்கள் கையிட்டுச் செய்ததும், உங்கள் தேவனாகிய யெகோவா உங்களை ஆசீர்வதித்ததுமான எல்லாவற்றிக்காகவும் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சந்தோஷப்படுவீர்களாக.

8இங்கே இந்நாளில் நாம் அவனவன் தன்தன் பார்வைக்குச் சரியானதையெல்லாம் செய்கிறதுபோல நீங்கள் செய்யாதிருப்பீர்களாக.

9உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் இளைப்பாறுதலிலும், தேசத்திலும் நீங்கள் இன்னும் நுழையவில்லையே.

10நீங்கள் யோர்தான் நதியைக் கடந்துபோய், உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குச் சொந்தமாகக் கொடுக்கும் தேசத்தில் குடியேறும்போதும், சுற்றிலும் இருக்கிற உங்களுடைய எதிரிகளையெல்லாம் அவர் விலக்கி, உங்களை இளைப்பாறச்செய்கிறதினால் நீங்கள் சுகமாக வாழ்ந்திருக்கும்போதும்,

11உங்கள் தேவனாகிய யெகோவா தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஓர் இடம் உண்டாயிருக்கும்; அங்கே நீங்கள் நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் உங்களுடைய சர்வாங்க தகனங்களையும், பலிகளையும், தசமபாகங்களையும், உங்களுடைய கை ஏறெடுத்துப்படைக்கும் படைப்புகளையும், நீங்கள் யெகோவாவுக்கு நேர்ந்துகொள்ளும் விசேஷித்த எல்லாப் பொருத்தனைகளையும் கொண்டுவந்து,

12உங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் நீங்களும், உங்களுடைய மகன்களும், மகள்களும், வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும், உங்களுடன் பங்கும் சொத்தும் இல்லாமல் உங்களுடைய வாசல்களில் இருக்கிற லேவியனும் சந்தோஷப்படுவீர்களாக.

13நீ நினைத்த இடமெல்லாம் நீ உன் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தாதபடி எச்சரிக்கையாயிரு.

14உன் கோத்திரங்களின் ஒன்றில் யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்தில் மாத்திரம் நீ உன் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி, நான் உனக்குக் கற்பிக்கிற யாவையும் அங்கே செய்வாயாக.

15“ஆனாலும் உன் தேவனாகிய யெகோவா உனக்கு அருளும் ஆசீர்வாதத்திற்குத்தக்கதாக, நீ உன் வாசல்களிலெங்கும் உன் விருப்பப்படியே மிருகஜீவன்களை அடித்து சாப்பிடலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும், அவைகளை, வெளிமானையும் கலைமானையும் சாப்பிடுவதுபோல சாப்பிடலாம்.

16இரத்தத்தை மாத்திரம் சாப்பிடவேண்டாம்; அதைத் தண்ணீரைப்போல் தரையிலே ஊற்றிவிடவேண்டும்.

17உன்னுடைய தானியத்திலும், திராட்சைரசத்திலும், எண்ணெயிலும், தசமபாகத்தையும், உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும், நீ நேர்ந்துகொள்ளும் உன்னுடைய சகல பொருத்தனைகளையும், உன் உற்சாகக் காணிக்கைகளையும், உன் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், நீ உன் வாசல்களில் சாப்பிடவேண்டாம்.

18உன் தேவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்தில் நீயும் உன் மகனும், மகளும், வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் அதைச் சாப்பிட்டு, நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியத்திலும் உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் சந்தோஷப்படுவாயாக.

19நீ உன் தேசத்திலிருக்கும் நாட்களெல்லாம் லேவியனைக் கைவிடாதபடி எச்சரிக்கையாயிரு.

20“உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொன்னபடி, அவர் உன் எல்லையை விரிவாக்கும்போது, நீ இறைச்சியைச் சாப்பிட ஆசைகொண்டு, இறைச்சி சாப்பிடுவேன் என்பாயானால், நீ உன் விருப்பப்படி இறைச்சி சாப்பிடலாம்.

21உன் தேவனாகிய யெகோவா தமது நாமம் விளங்கும்படித் தெரிந்துகொள்ளும் இடம் உனக்குத் தூரமானால், யெகோவா உனக்குக் கொடுத்த உன் ஆடுமாடுகளில் எதையாகிலும் நான் உனக்குக் கட்டளையிட்டபடி நீ அடித்து, உன் விருப்பப்படி உன் வாசல்களிலே சாப்பிடலாம்.

22வெளிமானையும் கலைமானையும் சாப்பிடுவதுபோல நீ அதைச் சாப்பிடலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும் அதைச் சாப்பிடலாம்.

23இரத்தத்தை மாத்திரம் சாப்பிடாதபடி எச்சரிக்கையாயிரு; இரத்தமே உயிர்; மாம்சத்தோடே இரத்தத்தையும் சாப்பிடவேண்டாம்.

24அதை நீ சாப்பிடாமல் தண்ணீரைப்போல் தரையிலே ஊற்றிவிடவேண்டும்.

25நீ யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்வதினால், நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் நன்றாயிருக்கும்படி நீ அதைச் சாப்பிடக்கூடாது.

26உனக்குரிய பரிசுத்த பொருட்களையும், உன் பொருத்தனைகளையும் யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்திற்கு நீ கொண்டுவந்து,

27உன் தேவனாகிய யெகோவாவுடைய பலிபீடத்தின்மேல் உன் சர்வாங்க தகனபலிகளை மாம்சத்தோடும் இரத்தத்தோடும் பலியிடக்கடவாய்; நீ செலுத்தும் மற்ற பலிகளின் இரத்தமும் உன் தேவனாகிய யெகோவாவுடைய பலிபீடத்தின்மேல் ஊற்றப்படுவதாக; மாம்சத்தையோ நீ சாப்பிடலாம்.

28நீ உன் தேவனாகிய யெகோவாவின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்வதினால், நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருப்பதற்கு, நான் உனக்குக் கற்பிக்கிற இந்த எல்லா வார்த்தைகளையும் நீ கவனித்துக் கேள்.

29“நீ சொந்தமாக்கப்போகிற தேசத்தின் மக்களை உன் தேவனாகிய யெகோவா உனக்கு முன்பாக அகற்றும்போதும், நீ அவர்களுடைய தேசத்தைச் சொந்தமாக்கி அதிலே குடியிருக்கும்போதும்,

30அவர்கள் உனக்கு முன்பாக அழிக்கப்பட்டபின்பு, நீ அவர்களைப் பின்பற்றிச் சிக்கிக்கொள்ளாதபடிக்கும், இந்த மக்கள் தங்கள் தெய்வங்களை வணங்கியதுபோல நானும் வணங்குவேன் என்று சொல்லி அவர்களுடைய தெய்வங்களைக்குறித்துக் கேட்டு விசாரிக்காதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.

31உன் தேவனாகிய யெகோவாவுக்கு அப்படிச் செய்யாமலிருப்பாயாக; யெகோவா வெறுக்கிற அருவருப்பான யாவையும் அவர்கள் தங்கள் தெய்வங்களுக்குச் செய்து தங்கள் மகன்களையும், மகள்களையும் தங்கள் தெய்வங்களுக்கு அக்கினியிலே சுட்டெரித்தார்களே.

32“நான் உனக்குக் கொடுக்கிற யாவையும் செய்யும்படி கவனமாயிரு; நீ அதனுடன் ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.

← Deuteronomy 11Read In The App, Free →Deuteronomy 13 →

Study Deuteronomy 12

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122232425262728293031323334