John · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

John 8

1இயேசு ஒலிவமலைக்குப் போனார்.

2மறுநாள் காலையில் அவர் திரும்பி தேவாலயத்திற்கு வந்தபோது, மக்கள் எல்லோரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம் செய்தார்.

3அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை வேதபண்டிதர்களும், பரிசேயர்களும் அவரிடத்தில் அழைத்துவந்து, அவளை நடுவே நிறுத்தி:

4போதகரே, இந்த பெண் விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டாள்.

5இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டும் என்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளைக் கொடுத்திருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள்.

6அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாக்குவதற்கு, அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள் இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார்.

7அவர்கள் தொடர்ந்து அவரைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது, அவர் நிமிர்ந்துபார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மீது முதலாவது கல்லெறியட்டும் என்று சொல்லி,

8அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார்.

9அவர்கள் அதைக்கேட்டு, தங்களுடைய மனச்சாட்சியில் உணர்த்தப்பட்டு, பெரியோர் முதல் சிறியோர் வரைக்கும் ஒவ்வொருவராக போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த பெண் நடுவே நின்றாள்.

10இயேசு நிமிர்ந்து அந்த பெண்ணைத்தவிர வேறொருவரையும் காணாமல்: பெண்ணே, உன்மேல் குற்றஞ்சுமத்தினவர்கள் எங்கே? ஒருவன்கூட உன்னைத் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்.

11அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளைப் பார்த்து: நானும் உன்னைத் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவம் செய்யாதே என்றார். 1 உலகத்தின் ஒளி

12மறுபடியும் இயேசு மக்களைப் பார்த்து: நான் உலகத்திற்கு ஒளியாக இருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடக்காமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான் என்றார்.

13அப்பொழுது பரிசேயர்கள் அவரைப் பார்த்து: உன்னைக்குறித்து நீயே சாட்சி கொடுக்கிறாய்; உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல என்றார்கள்.

14இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தாலும், என் சாட்சி உண்மையாக இருக்கிறது; ஏனென்றால், நான் எங்கே இருந்து வந்தேன் என்றும், எங்கே போகிறேன் என்றும் அறிந்திருக்கிறேன்; நீங்களோ நான் எங்கே இருந்து வருகிறேன் என்றும், எங்கே போகிறேன் என்றும் உங்களுக்குத் தெரியாது.

15நீங்கள் மனித வழக்கத்திற்கு ஏற்றபடி நியாயந்தீர்க்கிறீர்கள், நான் ஒருவனையும் நியாயந்தீர்க்கிறதில்லை;

16நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படி இருக்கும்; ஏனென்றால், நான் தனித்திருக்கவில்லை, நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்.

17இரண்டு பேருடைய சாட்சி உண்மை என்று உங்களுடைய நியாயப்பிரமாணத்திலும் எழுதி இருக்கிறதே.

18நான் என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவனாக இருக்கிறேன், என்னை அனுப்பின பிதாவும் என்னைக்குறித்துச் சாட்சிக் கொடுக்கிறார் என்றார்.

19அப்பொழுது அவர்கள்: உம்முடைய பிதா எங்கே என்றார்கள். இயேசு மறுமொழியாக: என்னையும் அறியீர்கள். என் பிதாவையும் அறியீர்கள்; நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள் என்றார்.

20தேவாலயத்திலே இயேசு உபதேசம் செய்கிறபோது, காணிக்கைப்பெட்டி இருக்கும் இடத்தில் இந்த வசனங்களைச் சொன்னார். அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவரைப் பிடிக்கவில்லை.

21இயேசு மறுபடியும் அவர்களைப் பார்த்து: நான் போகிறேன், நீங்கள் என்னைத் தேடி உங்களுடைய பாவங்களிலே மரித்துப்போவீர்கள்; நான் போகிற இடத்திற்கு உங்களால் வர முடியாது என்றார்.

22அப்பொழுது யூதர்கள்: நான் போகிற இடத்திற்கு உங்களால் வர முடியாது என்கிறானே, தன்னைத்தானே கொலைசெய்து கொள்ளுவானோ என்று பேசிக்கொண்டார்கள்.

23அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் கீழேயிருந்து உண்டானவர்கள், நான் மேலேயிருந்து உண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்து உண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்து உண்டானவன் இல்லை.

24ஆகவே, நீங்கள் உங்களுடைய பாவங்களில் மரித்துப்போவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசிக்காவிட்டால் உங்களுடைய பாவங்களிலே மரித்துப்போவீர்கள் என்றார்.

25அதற்கு அவர்கள்: நீர் யார் என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: நான் ஆரம்ப முதலாக உங்களுக்குச் சொல்லியிருக்கிறவர் தான்.

26உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்கள் இருக்கிறது; என்னை அனுப்பினவர் சத்தியமானவர்; நான் அவரிடத்தில் கேட்டவைகளை உலகத்திற்குச் சொல்லுகிறேன் என்றார்.

27பிதாவைக்குறித்துப் பேசினார் என்று அவர்கள் அறியாதிருந்தார்கள்.

28ஆதலால் இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் மனிதகுமாரனை உயர்த்தினபின்பு, நானே அவர் என்றும், நான் என் சொந்தமாக ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்.

29என்னை அனுப்பினவர் என்னுடனே இருக்கிறார், பிதாவிற்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறதினால் அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை என்றார்.

30இவைகளை அவர் சொன்னபோது, அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். 1 ஆபிரகாமின் பிள்ளைகள்

31இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களைப் பார்த்து: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் உண்மையாகவே என் சீடராக இருப்பீர்கள்;

32சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.

33அவர்கள் அவருக்கு மறுமொழியாக: நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாக இருக்கிறோம், நாங்கள் ஒருபோதும் ஒருவனுக்கும் அடிமைகளாக இருக்கவில்லை; விடுதலையாவீர்கள் என்று நீர் எப்படிச் சொல்லுகிறீர் என்றார்கள்.

34இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: பாவம் செய்கிறவன் எவனும் பாவத்திற்கு அடிமையாக இருக்கிறான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

35அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார்.

36ஆகவே, குமாரன் உங்களை விடுதலை ஆக்கினால் உண்மையாகவே விடுதலை ஆவீர்கள்.

37நீங்கள் ஆபிரகாமின் சந்ததியார் என்று அறிவேன்; ஆனாலும் உங்களுக்குள்ளே என் உபதேசம் இடம் பெறாததினால், என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள்.

38நான் என் பிதாவினிடத்தில் பார்த்ததைச் சொல்லுகிறேன், நீங்களும் உங்களுடைய பிதாவினிடத்தில் பார்த்ததைச் செய்கிறீர்கள் என்றார்.

39அதற்கு அவர்கள்: ஆபிரகாமே எங்களுடைய பிதா என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாக இருந்தால் ஆபிரகாமின் செயல்களைச் செய்வீர்களே.

40தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனிதனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே.

41நீங்கள் உங்களுடைய பிதாவின் செயல்களைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்கள் இல்லை; ஒரே பிதா எங்களுக்கு இருக்கிறார், அவர் தேவன் என்றார்கள். 1 பிசாசின் பிள்ளைகள்

42இயேசு அவர்களைப் பார்த்து: தேவன் உங்களுடைய பிதாவாக இருந்தால் என்னிடத்தில் அன்பாக இருப்பீர்கள். ஏனென்றால், நான் தேவனிடத்தில் இருந்து வந்திருக்கிறேன்; நான் நானாக வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்.

43என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமல் இருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாமல் இருக்கிறதினால் அல்லவா?

44நீங்கள் உங்களுடைய தகப்பனாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்களுடைய தகப்பனின் ஆசைகளின்படி செய்ய விருப்பமாக இருக்கிறீர்கள்; அவன் ஆரம்ப முதற்கொண்டு மனித கொலைபாதகனாக இருக்கிறான்; சத்தியம் அவனிடத்தில் இல்லாததினால் அவன் சத்தியத்திலே நிலை நிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் தகப்பனுமாக இருக்கிறதினால் அவன் பொய் பேசும்போது தன்னுடைய சுபாவத்தின்படி அப்படிப் பேசுகிறான்.

45நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறதினால் நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை.

46என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தமுடியும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருந்தும், நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கவில்லை.

47தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் தேவனால் உண்டாகாததினால் செவிகொடுக்காமல் இருக்கிறீர்கள் என்றார். 1 இயேசு தன்னைக்குறித்துச் சொல்லுதல்

48அப்பொழுது யூதர்கள் அவருக்கு மறுமொழியாக: உன்னைச் சமாரியன் என்றும், பிசாசு பிடித்தவன் என்றும் நாங்கள் சொல்லுகிறது சரிதானே என்றார்கள்.

49அதற்கு இயேசு: நான் பிசாசு பிடித்தவன் இல்லை, நான் என் பிதாவை மதிக்கிறேன், நீங்கள் என்னை மதிக்காமலிருக்கிறீர்கள்.

50நான் எனக்கு மகிமையைத் தேடுகிறதில்லை; அதைத் தேடி, நியாயந்தீர்க்கிறவர் ஒருவர் இருக்கிறார்.

51ஒருவன் என் வார்த்தையைக் கடைபிடித்தால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைப் பார்ப்பதில்லை என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

52அப்பொழுது யூதர்கள் அவரைப் பார்த்து: நீ பிசாசு பிடித்தவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறோம்; ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள். நீயோ: ஒருவன், என் வார்த்தையைக் கடைபிடித்தால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்கிறாய்.

53எங்களுடைய பிதாவாகிய ஆபிரகாமிலும் நீ பெரியவனோ? அவர் மரித்தார், தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள்; உன்னை நீ யார் என்று நினைக்கிறாய் என்றார்கள்.

54இயேசு மறுமொழியாக: என்னை நானே மகிமைப்படுத்தினால் அந்த மகிமை வீணாயிருக்கும், என் பிதா என்னை மகிமைப்படுத்துகிறவர், அவரை உங்களுடைய தேவன் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.

55ஆனாலும் நீங்கள் அவரை அறியவில்லை, நான் அவரை அறிந்திருக்கிறேன்; அவரை அறியேன் என்று சொன்னால் உங்களைப்போல நானும் பொய்யனாக இருப்பேன்; அவரை நான் அறிந்து, அவருடைய வார்த்தையைக் கடைபிடிக்கிறேன்.

56உங்களுடைய தகப்பனாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாக இருந்தான்; பார்த்து மகிழ்ந்தான் என்றார்.

57அப்பொழுது யூதர்கள் அவரைப் பார்த்து: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைப் பார்த்தாயோ என்றார்கள்.

58அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாவதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

59அப்பொழுது அவர்மேல் எறியும்படி கற்களை எடுத்துக்கொண்டார்கள். இயேசு மறைந்து, அவர்கள் நடுவே கடந்து, தேவாலயத்தைவிட்டுப்போனார்.

← John 7Read In The App, Free →John 9 →

Study John 8

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeAlbert BarnesJohn WesleyJohn CalvinScofieldWilliam BurkittFamily Bible NotesThe Fourfold GospelJohn LightfootGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021