John · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

John 9

1அவர் அப்புறம் போகும்போது பிறவிக் குருடனாகிய ஒரு மனிதனைப் பார்த்தார்.

2அப்பொழுது அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: ரபீ, இவன் குருடனாக பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள்.

3இயேசு மறுமொழியாக: அது இவன் செய்த பாவமும் இல்லை, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமும் இல்லை, தேவனுடைய செயல்கள் இவனிடத்தில் வெளிப்படுவதற்கு இப்படிப் பிறந்தான்.

4பகலாக இருக்கும்வரை நான் என்னை அனுப்பினவருடைய செயல்களைச் செய்யவேண்டும்; ஒருவனும் செயல்கள் செய்யக்கூடாத இரவு நேரம் வருகிறது. 1 இயேசு பிறவிக்குருடனைச் சுகப்படுத்துதல்

5நான் உலகத்தில் இருக்கும்போது உலகத்திற்கு ஒளியாக இருக்கிறேன் என்றார்.

6இவைகளைச் சொல்லி, அவர் தரையிலே உமிழ்ந்து, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி:

7நீ போய், சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். சீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தம். அப்படியே அவன்போய்க் கழுவி, பார்வை அடைந்தவனாக திரும்பி வந்தான்.

8அப்பொழுது அருகில் உள்ளவர்களும், அவன் குருடனாக இருக்கும்போது அவனைப் பார்த்திருந்தவர்களும்: இவன் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவன் அல்லவா என்றார்கள்.

9சிலர்: அவன்தான் என்றார்கள். வேறுசிலர்: அவனைப்போல இருக்கிறான் என்றார்கள். அவனோ: நான்தான் அவன் என்றான்.

10அப்பொழுது அவர்கள் அவனைப் பார்த்து: உன் கண்கள் எப்படித் திறக்கப்பட்டது என்றார்கள்.

11அவன் மறுமொழியாக: இயேசு என்னப்பட்ட ஒருவர் சேறுண்டாக்கி, என் கண்களின்மேல் பூசி, நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். அப்படியே நான் போய்க் கழுவி, பார்வை அடைந்தேன் என்றான்.

12அப்பொழுது அவர்கள்: அவர் எங்கே என்றார்கள். அவன்: எனக்குத் தெரியாது என்றான். 1 பரிசேயர்கள் அவனை தேவாலயத்திலிருந்து வெளியேற்றுதல்

13குருடனாக இருந்த அவனைப் பரிசேயர்களிடத்திற்குக் கொண்டுபோனார்கள்.

14இயேசு சேறுண்டாக்கி, அவன் கண்களைத் திறந்த நாள் ஓய்வுநாளாக இருந்தது.

15ஆகவே, பரிசேயர்களும் அவனைப் பார்த்து: நீ எப்படிப் பார்வை அடைந்தாய் என்று மீண்டும் கேட்டார்கள். அதற்கு அவன்: அவர் என் கண்களின்மேல் சேற்றைப் பூசினார், நான் கழுவினேன், பார்க்கிறேன் என்றான்.

16அப்பொழுது பரிசேயர்களில் சிலர்: அந்த மனிதன் ஓய்வுநாளைக் கடைபிடிக்காததினால் அவன் தேவனிடத்தில் இருந்து வந்தவன் இல்லை என்றார்கள். வேறுசிலர்: பாவியாக இருக்கிற மனிதன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படிச் செய்வான் என்றார்கள். இந்தவிதமாக அவர்களுக்குள்ளே பிரிவினை ஏற்பட்டது.

17மீண்டும் அவர்கள் குருடனைப் பார்த்து: உன் கண்களைத் திறந்தானே, அவனைக்குறித்து நீ என்ன சொல்லுகிறாய் என்றார்கள். அதற்கு அவன்: அவர் தீர்க்கதரிசி என்றான்.

18அவன் குருடனாக இருந்து பார்வை அடைந்ததை யூதர்கள் நம்பாமல், பார்வை அடைந்தவனுடைய பெற்றோரை அழைத்து,

19அவர்களைப் பார்த்து: உங்களுடைய மகன் குருடனாகப் பிறந்தான் என்று சொல்லுகிறீர்களே, அவன் இவன்தானா? இவனானால், இப்பொழுது இவன் எப்படிப் பார்வையடைந்தான் என்று கேட்டார்கள்.

20பெற்றோர் மறுமொழியாக; இவன் எங்களுடைய மகன்தான் என்றும், குருடனாகப் பிறந்தான் என்றும் எங்களுக்குத் தெரியும்.

21இப்பொழுது இவன் பார்வை அடைந்தது எப்படி என்று எங்களுக்குத் தெரியாது; இவனுடைய கண்களைத் திறந்தவன் யார் என்பதும் எங்களுக்குத் தெரியாது; இவன் வாலிபனாக இருக்கிறான், இவனையே கேளுங்கள், இவனே சொல்லுவான் என்றார்கள்.

22அவனுடைய பெற்றோர்கள் யூதர்களுக்குப் பயந்ததினால் இப்படிச் சொன்னார்கள். ஏனென்றால், இயேசுவைக் கிறிஸ்து என்று யாராவது அறிக்கை செய்தால் அவனை ஜெப ஆலயத்திற்குப் வெளியாக்க வேண்டும் என்று யூதர்கள் அதற்கு ஏற்கனவே முடிவு செய்திருந்தார்கள்.

23அதினிமித்தம்: இவன் வாலிபனாக இருக்கிறான், இவனையே கேளுங்கள் என்று அவனுடைய பெற்றோர்கள் சொன்னார்கள்.

24ஆதலால் அவர்கள் குருடனாக இருந்த மனிதனை இரண்டாம்முறை அழைத்து: நீ தேவனை மகிமைப்படுத்து; இந்த மனிதன் பாவி என்று நாங்கள் அறிந்திருக்கிறோம் என்றார்கள்.

25அவன் மறுமொழியாக: அவர் பாவியா இல்லையா என்று எனக்குத் தெரியாது; நான் குருடனாக இருந்தேன், இப்பொழுது பார்க்கிறேன்; இது ஒன்றுதான் எனக்குத் தெரியும் என்றான்.

26அவர்கள் மறுபடியும் அவனைப் பார்த்து: உனக்கு என்ன செய்தான், உன் கண்களை எப்படித் திறந்தான் என்றார்கள்.

27அவன் மறுமொழியாக: ஏற்கனவே உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் கேட்காமல் போனீர்கள்; மறுபடியும் ஏன் கேட்கிறீர்கள்? அவருக்குச் சீடராக உங்களுக்கும் விருப்பம் இருக்கிறதா என்றான்.

28அப்பொழுது அவர்கள் அவனைத் திட்டி: நீ அவனுடைய சீடன், நாங்கள் மோசேயினுடைய சீடர்.

29மோசேயுடனே தேவன் பேசினார் என்று தெரியும், இவன் எங்கே இருந்து வந்தவன் என்று எங்களுக்குத் தெரியாது என்றார்கள்.

30அதற்கு அந்த மனிதன்: அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கிருந்து வந்தவர் என்று நீங்கள் தெரியாமல் இருப்பது ஆச்சரியமான காரியம்.

31பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறது இல்லை என்று தெரிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தி உள்ளவனாக இருந்து அவருக்கு பிரியமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.

32பிறவிக் குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தான் என்று உலகம் உண்டானதுமுதல் கேள்விப்பட்டது இல்லையே.

33அவர் தேவனிடத்தில் இருந்து வராமல் இருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான்.

34அவர்கள் அவனுக்கு மறுமொழியாக: முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ என்று சொல்லி, அவனைப் வெளியே தள்ளிவிட்டார்கள். 1 ஆவிக்குரிய பார்வையின்மை

35அவனை அவர்கள் வெளியே தள்ளிவிட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவனைப் பார்த்தபோது: நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறாயா என்றார்.

36அதற்கு அவன்: ஆண்டவரே, அவரிடத்தில் நான் விசுவாசமாக இருக்கும்படிக்கு அவர் யார் என்றான்.

37இயேசு அவனைப் பார்த்து: நீ அவரைப் பார்த்திருக்கிறாய், உன்னுடனே பேசுகிறவர் அவர்தான் என்றார்.

38உடனே அவன்: ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான்.

39அப்பொழுது இயேசு: பார்க்காதவர்கள் பார்க்கும்படியாகவும், பார்க்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்றார்.

40அவரோடு இருந்த பரிசேயர்களில் சிலர் இவைகளைக் கேட்டபொழுது: நாங்களும் குருடரோ என்றார்கள்.

41இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் குருடராக இருந்தால் உங்களுக்குப் பாவம் இருக்காது; நீங்கள் பார்க்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்களுடைய பாவம் நிலைநிற்கிறது என்றார்.

← John 8Read In The App, Free →John 10 →

Study John 9

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeAlbert BarnesJohn WesleyJohn CalvinScofieldWilliam BurkittFamily Bible NotesThe Fourfold GospelJohn LightfootGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021