Judges · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Judges 16

1பின்பு சிம்சோன் காசாவுக்குப் + 16:1 என்னும் பட்டணத்துக்கு போய், அங்கே ஒரு விபச்சாரியை கண்டு, அவளிடம் போனான்.

2அப்பொழுது: சிம்சோன் இங்கே வந்திருக்கிறான் என்று காசா ஊர்க்காரர்களுக்குச் சொல்லப்பட்டது. அவர்கள்: காலையில் வெளிச்சமாகிறபோது அவனைக் கொன்றுபோடுவோம் என்று சொல்லி, அவனை சுற்றிவளைத்து இரவுமுழுவதும் அவனுக்காகப் பட்டணவாசலில் காத்திருந்து இரவு முழுவதும் பேசாமல் இருந்தார்கள்.

3சிம்சோன் நடுஇரவுவரை படுத்திருந்து, நடு இரவில் எழுந்து, பட்டணத்து வாசல் கதவுகளையும் அதின் இரண்டு நிலைகளையும் பிடித்து, தாழ்ப்பாளோடுப் பெயர்த்து, தன்னுடைய தோளின்மேல் வைத்து, எபிரோனுக்கு எதிரேயிருக்கிற மலையின் உச்சிக்குச் சுமந்துகொண்டுபோனான். 1 சிம்சோனும் தெலீலாளும்

4அதற்குப்பின்பு அவன் சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்னும் பெயருள்ள ஒரு பெண்ணோடு அன்பாயிருந்தான்.

5அவளிடத்திற்கு பெலிஸ்தர்களின் அதிபதிகள் போய்: நீ அவனை வசப்படுத்தி, அவனுடைய மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்றும், நாங்கள் அவனைக் கட்டி பலவீனப்படுத்துவதற்கு எதினாலே அவனை மேற்கொள்ளலாம் என்றும் அறிந்துகொள்; அப்பொழுது நாங்கள் ஒவ்வொருவரும் 1,100 வெள்ளிக்காசு + 16:5 60 கிலோ வெள்ளி. உனக்குக் கொடுப்போம் என்றார்கள்.

6அப்படியே தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: உன்னுடைய மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது. உன்னை பலவீனப்படுத்த, உன்னை எதினாலே கட்டலாம் என்று நீ என்னிடம் சொல்லவேண்டும் என்றாள்.

7அதற்குச் சிம்சோன்: உலராத பச்சையான ஏழு வில்நார்க் கயிறுகளினாலே என்னைக் கட்டினால், நான் பலவீனனாகி, மற்ற மனிதனைப்போல் ஆவேன் என்றான்.

8அப்பொழுது பெலிஸ்தர்களின் அதிபதிகள் உலராத பச்சையான ஏழு வில்நார்க் கயிறுகளை அவளிடம் கொண்டுவந்தார்கள்; அவைகளால் அவள் அவனைக் கட்டினாள்.

9மறைந்திருக்கிறவர்கள் உள் அறையிலே காத்திருக்கும்போது, அவள்: சிம்சோனே, பெலிஸ்தர்கள் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அப்பொழுது, சணல்நூலானது நெருப்புப் பட்டவுடனே அறுந்துபோகிறதுபோல, அவன் அந்தக் கயிறுகளை அறுத்துப்போட்டான்; அவனுடைய பலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்று அவர்களால் அறிந்துகொள்ளமுடியவில்லை.

10அப்பொழுது தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதோ, என்னை ஏமாற்றி, எனக்கு பொய் சொன்னாய்; இப்போதும் உன்னை எதினாலே கட்டலாம் என்று என்னிடம் சொல்லவேண்டும் என்றாள்.

11அதற்கு அவன்: இதுவரைக்கும் ஒரு வேலைக்கும் பயன்படுத்தாமலிருக்கிற புதுக்கயிறுகளால் என்னை இறுகக் கட்டினால், நான் பலவீனனாகி, மற்ற மனிதனைப்போல் ஆவேன் என்றான்.

12அப்பொழுது தெலீலாள், புதுக்கயிறுகளை வாங்கி, அவைகளால் அவனைக்கட்டி: சிம்சோனே, பெலிஸ்தர்கள் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்: மறைந்திருக்கிறவர்கள் உள் அறையில் இருந்தார்கள்; ஆனாலும் அவன் தன்னுடைய புயங்களில் இருந்த கயிறுகளை ஒரு நூலைப்போல அறுத்துப்போட்டான்.

13பின்பு தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதுவரைக்கும் என்னை ஏமாற்றி, எனக்குப் பொய்சொன்னாய்; உன்னை எதினால் கட்டலாம் என்று நீ என்னிடம் சொல்லவேண்டும் என்றாள்; அதற்கு அவன்: நீ என்னுடைய தலைமுடியின் ஏழு ஜடைகளை நெசவுநூல் தறியோடு பின்னிவிட்டால் மற்ற மனிதர்களைப்போல் ஆவேன் என்றான்.

14அப்படியே அவள் செய்து, அவைகளை ஆணியடித்து மாட்டி: சிம்சோனே, பெலிஸ்தர்கள் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் தூக்கத்தைவிட்டு எழுந்து, நெசவு ஆணியையும் தறியையும் பிடுங்கிக்கொண்டு போனான்.

15அப்பொழுது அவள் அவனைப் பார்த்து: உன்னுடைய இருதயம் என்னோடு இல்லாமலிருக்க, உன்னை நேசிக்கிறேன் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நீ இந்த மூன்றுமுறைகளும் என்னைப் பரியாசம் செய்தாய் அல்லவா, உன்னுடைய மகாபலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்று என்னிடம் சொல்லாமல் போனாயே என்று சொல்லி,

16இப்படி அவனைத் தினம்தினம் தன்னுடைய வார்த்தைகளினாலே நெருக்கி தொந்தரவுசெய்தபடியால், சாகத்தக்கதாக அவனுடைய ஆத்துமா துக்கப்பட்டு,

17தன்னுடைய இருதயத்தில் உள்ளதையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி: சவரகன் கத்தி என்னுடைய தலையின்மேல் படவில்லை; நான் என்னுடைய தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன்; என்னுடைய தலை சிரைக்கப்பட்டால், என்னுடைய பலம் என்னை விட்டுப்போகும்; அதினாலே நான் பலவீனனாகி, மற்ற எல்லா மனிதர்களைப்போல ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான்.

18அவன் தன்னுடைய இருதயத்தில் உள்ளதையெல்லாம் தனக்கு வெளிப்படுத்தினதை தெலீலாள் கேட்டபோது, அவள் பெலிஸ்தர்களின் அதிபதிகளுக்கு ஆள் அனுப்பி: இந்த ஒருமுறை வாருங்கள், அவன் தன்னுடைய இருதயத்தில் உள்ளதையெல்லாம் என்னிடத்தில் வெளிப்படுத்தினான் என்று சொல்லச்சொன்னாள்; அப்பொழுது பெலிஸ்தர்களின் அதிபதிகள் வெள்ளிக்காசுகளைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு அவளிடம் வந்தார்கள்.

19அவள் அவனைத் தன்னுடைய மடியிலே தூங்கவைத்து, ஒருவனை அழைத்து, அவன் தலைமயிரின் ஏழு ஜடைகளையும் சிரைத்து, அவனை பலவீனப்படுத்தத் தொடங்கினாள்; அவன் பலம் அவனைவிட்டு நீங்கியது.

20அப்பொழுது அவள்: சிம்சோனே, பெலிஸ்தர்கள் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் தூக்கத்தைவிட்டு விழித்து, யெகோவா தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும்போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான்.

21பெலிஸ்தர்கள் அவனைப் பிடித்து, அவனுடைய கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைக்க வைத்தார்கள்.

22அவனுடைய தலைமுடி சிரைக்கப்பட்டப்பின்பு, திரும்பவும் முளைக்கத் தொடங்கியது. 1 சிம்சோனின் மரணம்

23பெலிஸ்தர்களின் பிரபுக்கள்: நம்முடைய எதிரியாகிய சிம்சோனை நம்முடைய தேவன் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, தங்களுடைய தெய்வமாகிய தாகோனுக்கு ஒரு பெரிய பலிசெலுத்தவும், சந்தோஷம் கொண்டாடவும் கூடிவந்தார்கள்.

24மக்கள் அவனைப் பார்த்தவுடனே: நம்முடைய தேசத்தைப் பாழாக்கி, நம்மில் அநேகரைக் கொன்றுபோட்ட நம்முடைய எதிரியை நம்முடைய தேவன் நமது கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, தங்களுடைய தேவனைப் புகழ்ந்தார்கள்.

25இப்படி அவர்கள் மனமகிழ்ச்சியாக இருக்கும்போது: நமக்கு முன்பாக வேடிக்கை காட்டுவதற்கு, சிம்சோனை அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றார்கள்; அப்பொழுது சிம்சோனைச் சிறைச்சாலையிலிருந்து அழைத்துக்கொண்டு வந்தார்கள், அவர்களுக்கு முன்பாக வேடிக்கைக் காட்டினான்; அவனைத் தூண்களுக்கு நடுவே நிறுத்தினார்கள்.

26சிம்சோன் தன்னுடைய கையைப் பிடித்து நடத்துகிற சிறுவனோடு, வீட்டைத் தாங்குகிற தூண்களிலே நான் சாய்ந்துகொண்டிருக்கும்படி அவைகளை நான் தடவிப் பார்க்கவேண்டும் என்றான்.

27அந்த வீடு ஆண்களாலும், பெண்களாலும் நிறைந்திருந்தது; அங்கே பெலிஸ்தர்களின் எல்லா பிரபுக்களும், வீட்டின்மேல் ஆண்களும் பெண்களுமாக ஏறக்குறைய மூவாயிரம் 3,000 பேர், சிம்சோன் வேடிக்கை காட்டுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

28அப்பொழுது சிம்சோன் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு: யெகோவாவாகிய ஆண்டவரே, நான் என்னுடைய இரண்டு கண்களுக்காக ஒரே முடிவாகப் பெலிஸ்தர்கள் கையிலே பழிவாங்கும்படி, இந்த ஒருமுறைமட்டும் என்னை நினைத்தருளும், தேவனே பெலப்படுத்தும் என்று சொல்லி,

29சிம்சோன் அந்த வீட்டைத் தாங்கி நிற்கிற இரண்டு நடுத்தூண்களில், ஒன்றைத் தன்னுடைய வலதுகையினாலும், மற்றொன்றைத் தன்னுடைய இடதுகையினாலும் பிடித்துக்கொண்டு,

30என்னுடைய ஜீவன் பெலிஸ்தர்களோடு மடியக்கடவது என்று சொல்லி, பலமாய்ச் சாய்க்க, அந்த வீடு அதில் இருந்த பிரபுக்கள்மேலும் எல்லா மக்கள்மேலும் விழுந்தது; இப்படி அவன் உயிரோடிருக்கும்போது அவனால் கொல்லப்பட்டவர்களைவிட, அவன் சாகும்போது அவனால் கொல்லப்பட்டவர்கள் அதிகமாக இருந்தார்கள்.

31பின்பு அவன் சகோதரர்களும், அவன் தகப்பனுடைய வீட்டார் அனைவரும் போய், அவனை எடுத்துக்கொண்டுவந்து, சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவே அவனுடைய தகப்பனான மனோவாவின் கல்லறையில் அடக்கம்செய்தார்கள். அவன் இஸ்ரவேலை 20 வருடங்கள் நியாயம் விசாரித்தான்.

← Judges 15Read In The App, Free →Judges 17 →

Study Judges 16

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021