Leviticus · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Leviticus 26

1“நீங்கள் உங்களுக்கு சிலைகளையும் உருவங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலையை நிறுத்தாமலும், சித்திரம்வடித்த கல்லை வணங்குவதற்காக உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.

2என் ஓய்வுநாட்களை அனுசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாக இருப்பீர்களாக; நான் யெகோவா.

3“நீங்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்தால்,

4நான் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழை பெய்யச்செய்வேன்; பூமி தன் பலனையும், வெளியிலுள்ள மரங்கள் தங்கள் பழங்களையும் கொடுக்கும்.

5திராட்சைப்பழம் பறிக்கும் காலம்வரைக்கும் போரடிப்புக் காலம் இருக்கும்; விதைப்புக் காலம்வரைக்கும் திராட்சைப்பழம் பறிக்கும் காலம் இருக்கும்; நீங்கள் உங்கள் அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்டு, உங்கள் தேசத்தில் சுகமாகக் குடியிருப்பீர்கள்.

6தேசத்தில் சமாதானத்தைக் கட்டளையிடுவேன்; தத்தளிக்கச் செய்பவர்கள் இல்லாமல் படுத்துக்கொள்வீர்கள்; கொடிய மிருகங்களைத் தேசத்தில் இல்லாமல் ஒழியச்செய்வேன்; பட்டயம் உங்கள் தேசத்தில் உலாவுவதில்லை.

7உங்கள் எதிரிகளைத் துரத்துவீர்கள்; அவர்கள் உங்களுக்கு முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்.

8உங்களில் ஐந்துபேர் நூறுபேரைத் துரத்துவார்கள்; உங்களில் நூறுபேர் பத்தாயிரம்பேரைத் துரத்துவார்கள்; உங்கள் எதிரிகள் உங்களுக்கு முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்.

9நான் உங்கள்மேல் கண்ணோக்கமாக இருந்து, உங்களைப் பலுகவும் பெருகவும் செய்து, உங்களோடே என் உடன்படிக்கையை உறுதிப்படுத்துவேன்.

10போன வருடத்துப் பழைய தானியத்தைச் சாப்பிட்டு, புதிய தானியத்திற்கு இடமுண்டாக, பழையதை அகற்றுவீர்கள்.

11உங்கள் நடுவில் என் வாசஸ்தலத்தை நிறுவுவேன்; என் ஆத்துமா உங்களை வெறுப்பதில்லை.

12நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாக இருப்பேன், நீங்கள் என்னுடைய மக்களாக இருப்பீர்கள்.

13நீங்கள் எகிப்தியர்களுக்கு அடிமைகளாக இல்லாமல், நான் அவர்களுடைய தேசத்திலிருந்து உங்களைப் புறப்படச்செய்து, உங்கள் நுகத்தடிகளை முறித்து, உங்களை நிமிர்ந்து நடக்கச்செய்த உங்கள் தேவனாகிய யெகோவா.

14“நீங்கள் எனக்குச் செவிகொடுக்காமலும், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படி செய்யாமலும்,

15என் கட்டளைகளை வெறுத்து, உங்கள் ஆத்துமா என் நியாயங்களை வெறுத்து, என் கற்பனைகள் எல்லாவற்றின்படியும் செய்யாதபடிக்கு, என் உடன்படிக்கையை நீங்கள் மீறுவீர்களென்றால்:

16நான் உங்களுக்குச் செய்வது என்னவென்றால், கண்களைப் பார்வையிழக்கச் செய்கிறதற்கும், இருதயத்தைத் துயரப்படுத்துகிறதற்கும், திகிலையும், நோயையும், காய்ச்சலையும் உங்களுக்கு வரச்செய்வேன்; நீங்கள் விதைக்கும் விதை வீணாயிருக்கும்; உங்கள் எதிரிகள் அதின் பலனைச் சாப்பிடுவார்கள்.

17நான் உங்களுக்கு விரோதமாக என் முகத்தைத் திருப்புவேன்; உங்கள் எதிரிகளுக்கு முன்பாக தோற்கடிக்கப்படுவீர்கள்; உங்கள் பகைவர்கள் உங்களை ஆளுவார்கள்; துரத்துவார் இல்லாதிருந்தும் ஓடுவீர்கள்.

18இந்தவிதமாக நான் உங்களுக்குச் செய்தும், இன்னும் நீங்கள் எனக்குச் செவிகொடுக்காமலிருந்தால், உங்கள் பாவங்களின் காரணமாக மேலும் ஏழுமடங்காக உங்களைத் தண்டித்து,

19உங்கள் வல்லமையின் பெருமையை முறித்து, உங்கள் வானத்தை இரும்பைப் போலவும், பூமியை வெண்கலத்தைப்போலவும் ஆக்குவேன்.

20உங்கள் பெலன் வீணாகச் செலவழியும், உங்கள் தேசம் தன் பலனையும், தேசத்தின் மரங்கள் தங்கள் பழங்களையும் கொடுக்காது.

21“நீங்கள் எனக்குச் செவிகொடுக்க மனதில்லாமல், எனக்கு எதிர்த்து நடப்பீர்களானால், நான் உங்கள் பாவங்களுக்குத்தக்கதாக இன்னும் ஏழுமடங்கு வாதையை உங்கள்மேல் வரச்செய்து,

22உங்களுக்குள்ளே வெளியின் கொடிய மிருகங்களை வரவிடுவேன்; அவைகள் உங்களைப் பிள்ளைகள் இல்லாதவர்களாக்கி, உங்கள் மிருகஜீவன்களை அழித்து, உங்களைக் குறைந்துபோகச்செய்யும்; உங்கள் வழிகள் பாழாய்க் கிடக்கும்.

23“நான் கொடுக்கும் தண்டனையினால் நீங்கள் குணப்படாமல், எனக்கு எதிர்த்து நடந்தால்,

24நான் உங்களுக்கு எதிர்த்து நடந்து, உங்கள் பாவங்களின் காரணமாக ஏழுமடங்காக வாதித்து,

25என் உடன்படிக்கையை மீறினதற்குப் பழிவாங்கும் பட்டயத்தை உங்கள்மேல் வரச்செய்து, நீங்கள் உங்கள் பட்டணங்களில் சேர்ந்தபின், கொள்ளைநோயை உங்கள் நடுவிலே அனுப்புவேன்; எதிரியின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள்.

26உங்கள் அப்பம் என்னும் ஆதரவு கோலை நான் முறித்துப்போடும்போது, பத்துப் பெண்கள் ஒரே அடுப்பில் உங்கள் அப்பத்தைச் சுட்டு, அதைத் திரும்ப உங்களுக்கு நிறுத்துக்கொடுப்பார்கள்; நீங்கள் சாப்பிட்டும் திருப்தியடையமாட்டீர்கள்.

27“இன்னும் இவைகளெல்லாவற்றாலும் நீங்கள் எனக்குச் செவிகொடுக்காமல், எனக்கு எதிர்த்து நடந்தால்,

28நானும் உக்கிரத்தோடே உங்களுக்கு எதிர்த்து நடந்து, நானே உங்கள் பாவங்களுக்காக உங்களை ஏழுமடங்காகத் தண்டிப்பேன்.

29உங்கள் மகன்களின் மாம்சத்தையும் உங்கள் மகள்களின் மாம்சத்தையும் சாப்பிடுவீர்கள்.

30நான் உங்கள் மேடைகளை அழித்து, உங்கள் விக்கிரகச் சிலைகளை உடைத்து, உங்கள் உடல்களை உங்கள் நரகலான தேவர்களுடைய உடல்கள்மேல் எறிவேன்; என் ஆத்துமா உங்களை வெறுக்கும்.

31நான் உங்கள் பட்டணங்களை வெறுமையும், உங்கள் பரிசுத்த ஸ்தலங்களைப் பாழாக்கி, உங்கள் நறுமண வாசனையை முகராமலிருப்பேன்.

32நான் தேசத்தைப் பாழாக்குவேன்; அதிலே குடியிருக்கிற உங்கள் எதிரிகள் பிரமிப்பார்கள்.

33தேசங்களுக்குள்ளே உங்களைச் சிதறடித்து, உங்களுக்குப் பின்னே பட்டயத்தை உருவுவேன்; உங்கள் தேசம் பாழும், உங்கள் பட்டணங்கள் வனாந்திரமுமாகும்.

34“நீங்கள் உங்கள் எதிரிகளின் தேசத்தில் இருக்கும்போது, தேசமானது பாழாய்க்கிடக்கிற நாட்களெல்லாம் தன் ஓய்வுநாட்களை மகிழ்ச்சியாக அனுபவிக்கும்; அப்பொழுது தேசம் ஓய்வடைந்து, தன் ஓய்வுநாட்களை மகிழ்ச்சியாக அனுபவிக்கும்.

35நீங்கள் அதிலே குடியிருக்கும்போது, அது உங்கள் ஓய்வு வருடங்களில் ஓய்வடையாததினாலே, அது பாழாய்க்கிடக்கும் நாட்களெல்லாம் ஓய்வடைந்திருக்கும்.

36உங்களில் உயிரோடு மீதியாக இருப்பவர்களின் இருதயங்கள் தங்கள் எதிரிகளின் தேசங்களில் மனம் சோர்வடையச் செய்வேன்; அசைகிற இலையின் சத்தமும் அவர்களை விரட்டும்; அவர்கள் பட்டயத்திற்குத் தப்பி ஓடுகிறதுபோல ஓடி, துரத்துவார் இல்லாமல் விழுவார்கள்.

37துரத்துவார் இல்லாமல், பட்டயத்திற்கு முன் விழுவதுபோல, ஒருவர்மேல் ஒருவர் இடறிவிழுவார்கள்; உங்கள் எதிரிகளுக்குமுன் நிற்க உங்களுக்குப் பெலன் இருக்காது.

38அன்னியர்களுக்குள்ளே அழிந்துபோவீர்கள்; உங்கள் எதிரிகளின் தேசம் உங்களை அழிக்கும்.

39உங்களில் தப்பினவர்கள் தங்கள் அக்கிரமங்களினாலேயும், தங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினாலேயும், உங்கள் எதிரிகளின் தேசங்களில் சோர்ந்துபோவார்கள்.

40“அவர்கள் எனக்கு விரோதமாகத் துரோகம் செய்து நடப்பித்த தங்கள் அக்கிரமத்தையும், தங்கள் முன்னோர்களின் அக்கிரமத்தையும் அறிக்கையிடுகிறதுமல்லாமல்,

41அவர்கள் எனக்கு எதிர்த்து நடந்ததினால், நானும் அவர்களுக்கு எதிர்த்து நடந்து, அவர்களுடைய எதிரிகளின் தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய் விட்டதையும் அறிக்கையிட்டு, விருத்தசேதனமில்லாத தங்கள் இருதயத்தைத் தாழ்த்தி, தங்கள் அக்கிரமத்திற்குக் கிடைத்த தண்டனையை நியாயம் என்று ஒத்துக்கொண்டால்,

42நான் யாக்கோபோடே செய்த என் உடன்படிக்கையையும், ஈசாக்குடன் செய்த என் உடன்படிக்கையையும், ஆபிரகாமுடன் செய்த என் உடன்படிக்கையையும் நினைப்பேன்; தேசத்தையும் நினைப்பேன்.

43தேசம் அவர்களாலே கைவிடப்பட்டு, பாழாய்க்கிடக்கிறதினாலே தன் ஓய்வுநாட்களை மகிழ்ச்சியாக அனுபவிக்கும்; அவர்கள் என் நியாயங்களை அவமதித்து, அவர்களுடைய ஆத்துமா என் கட்டளைகளை வெறுத்ததினால் அடைந்த தங்களுடைய அக்கிரமத்தின் தண்டனையை நியாயம் என்று ஒத்துக்கொள்ளுவார்கள்.

44அவர்கள் தங்கள் எதிரிகளின் தேசத்திலிருந்தாலும், நான் அவர்களை நிர்மூலமாக்குவதற்கோ, நான் அவர்களோடே செய்த என் உடன்படிக்கையை நிராகரிப்பதற்கோ, நான் அவர்களைக் கைவிடவும் வெறுக்கவும் மாட்டேன்; நான் அவர்களுடைய தேவனாகிய யெகோவா.

45அவர்களுடைய தேவனாக இருக்கும்படிக்கு, நான் அன்னிய மக்களின் கண்களுக்கு முன்பாக எகிப்துதேசத்திலிருந்து அவர்களைப் புறப்படச்செய்து, அவர்களுடைய முன்னோர்களுடன் நான் செய்த உடன்படிக்கையை அவர்களுக்காக நினைவுகூருவேன்; நான் யெகோவா என்று சொல் என்றார்.

46யெகோவா தமக்கும் இஸ்ரவேல் சந்ததியாருக்கும் நடுவே இருக்கும்படி மோசேயைக்கொண்டு, சீனாய்மலையின்மேல் கொடுத்த கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே.

← Leviticus 25Read In The App, Free →Leviticus 27 →

Study Leviticus 26

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627