Leviticus · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Leviticus 4

1பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:

2“நீ இஸ்ரவேல் மக்களிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், ஒருவன் யெகோவாவுடைய கட்டளைகளில் யாதொன்றை அறியாமையினால் மீறி, செய்யத்தகாததைச் செய்து பாவத்திற்கு உட்பட்டால் அறியவேண்டியதாவது:

3அபிஷேகம் பெற்ற ஆசாரியன் + 4:3 பிரதான ஆசாரியன், மக்கள் குற்றத்திற்கு உட்படத்தக்கதாகப் பாவம் செய்தால், தான் செய்த பாவத்திற்காக பழுதற்ற ஒரு இளங்காளையை பாவநிவாரணபலியாகக் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன்.

4அவன் அந்தக் காளையை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து, அதின் தலைமேல் தன் கையை வைத்து, யெகோவாவுடைய சந்நிதியில் அதைக் கொல்லக்கடவன்.

5அப்பொழுது, அபிஷேகம் பெற்ற ஆசாரியன் அந்தக் காளையின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, அதை ஆசரிப்புக்கூடாரத்தில் கொண்டுவந்து,

6தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, பரிசுத்த ஸ்தலத்தின் திரைக்கு எதிரே யெகோவாவுடைய சந்நிதியில் ஏழுமுறை தெளிக்கக்கடவன்.

7பின்பு, ஆசாரியன் அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக்கூடாரத்திலே யெகோவாவுடைய சந்நிதியில் இருக்கும் நறுமண தூபபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, காளையினுடைய மற்ற இரத்தம் முழுவதையும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு முன்பாக இருக்கிற தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,

8பாவநிவாரணபலியான காளையின் எல்லாக் கொழுப்புமாகிய குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகள்மேல் இருக்கிற கொழுப்பு முழுவதையும்,

9இரண்டு சிறுநீரகங்களையும், அவைகள்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், சிறுநீரகங்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும்,

10சமாதானபலியின் காளையிலிருந்து எடுக்கிறதுபோல அதிலிருந்து எடுத்து, அவைகளைத் தகனபலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்.

11காளையின் தோலையும், அதின் மாம்சம் முழுவதையும், அதின் தலையையும், தொடைகளையும், அதின் குடல்களையும், அதின் சாணியையும்,

12காளை முழுவதையும் முகாமிற்கு வெளியே சாம்பல் கொட்டுகிற சுத்தமான இடத்திலே கொண்டுபோய், கட்டைகளின்மேல் போட்டு, நெருப்பிலே சுட்டெரிக்கக்கடவன்; சாம்பல் கொட்டப்பட்டிருக்கிற இடத்திலே அதைச் சுட்டெரிக்கக்கடவன்.

13“கூடி வந்த இஸ்ரவேல் சபையார் எல்லோரும் அறியாமையினால் பாவம்செய்து, அது தங்களுடைய கண்களுக்கு மறைவாக இருக்கிறதினால், யெகோவாவுடைய கட்டளைகளில் யாதொன்றை மீறி, செய்யத்தகாததைச் செய்து, பாவத்திற்குட்பட்டுக் குற்றவாளிகளானால்,

14அவர்கள் செய்த பாவம் தெரியவரும்போது, சபையார் அந்தப் பாவத்திற்காக ஒரு இளங்காளையை ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாக பலியிடக் கொண்டுவரவேண்டும்.

15சபையின் மூப்பர்கள் யெகோவாவுடைய சந்நிதியில் தங்களுடைய கைகளை அதின் தலைமேல் வைக்கக்கடவர்கள்; பின்பு யெகோவாவுடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லவேண்டும்.

16அப்பொழுது, அபிஷேகம் பெற்ற ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக்கூடாரத்தில் கொண்டுவந்து,

17தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, யெகோவாவுடைய சந்நிதியில் திரைக்கு எதிரே ஏழுமுறை தெளித்து,

18ஆசரிப்புக்கூடாரத்தில் யெகோவாவுடைய சந்நிதியில் இருக்கும் பலிபீடத்தின் கொம்புகளின்மேல் அந்த இரத்தத்தில் கொஞ்சம் பூசி, மற்ற இரத்தத்தை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் இருக்கிற தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,

19அதின் கொழுப்பு முழுவதையும் அதிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேல் எரித்து,

20பாவநிவாரணபலியின் காளையைச் செய்ததுபோலவே இந்தக் காளையையும் செய்து, இப்படியே ஆசாரியன் அவர்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவர்களுக்கு மன்னிக்கப்படும்.

21பின்பு காளையை முகாமிற்கு வெளியே கொண்டுபோய், முந்தின காளையைச் சுட்டெரித்ததுபோலச் சுட்டெரிக்கக்கடவன்; இது சபைக்காகச் செய்யப்படும் பாவநிவாரணபலி.

22“ஒரு பிரபு தன் தேவனாகிய யெகோவாவுடைய கட்டளைகளில் யாதொன்றை மீறி, அறியாமையினால் செய்யத்தகாததைச் செய்து, பாவத்திற்குட்பட்டுக் குற்றவாளியானால்,

23தான் செய்தது பாவம் என்று தனக்குத் தெரியவரும்போது, அவன் வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு இளங்கடாவைப் பலியாகக் கொண்டுவந்து,

24அந்தக் கடாவின் தலையின்மேல் தன் கையை வைத்து, யெகோவாவுடைய சந்நிதியில் சர்வாங்கதகனபலி கொல்லப்படும் இடத்தில் அதைக் கொல்வானாக; இது பாவநிவாரணபலி.

25அப்பொழுது ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகனபலிபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தத்தைத் தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,

26அதின் கொழுப்பு முழுவதையும், சமாதானபலியின் கொழுப்பைப்போல, பலிபீடத்தின்மேல் எரித்து, இந்தவிதமாக ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக்குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

27“சாதாரண மக்களில் ஒருவன் அறியாமையினால் யெகோவாவின் கட்டளைகளில் யாதொன்றை மீறி, செய்யத்தகாததைச் செய்து, பாவத்திற்குட்பட்டுக் குற்றவாளியானால்,

28தான் செய்தது பாவம் என்று தனக்குத் தெரியவரும்போது அவன் தான் செய்த பாவத்திற்காக வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு பெண்குட்டியைப் பலியாகக் கொண்டுவந்து,

29பாவநிவாரணபலியின் தலைமேல் தன் கையை வைத்து, சர்வாங்கதகனபலியிடும் இடத்தில் அந்தப் பாவநிவாரணபலியைக் கொல்லக்கடவன்.

30அப்பொழுது ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகனபலிபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தத்தை பலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,

31சமாதானபலியிலிருந்து கொழுப்பை எடுப்பதுபோல, அதின் கொழுப்பு முழுவதையும் எடுத்து, ஆசாரியன் பலிபீடத்தின்மேல் யெகோவாவுக்கு நறுமண வாசனையாக எரித்து, இப்படியே அவனுக்குப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

32“அவன் பாவநிவாரணபலியாக ஒரு ஆட்டுகுட்டியைக் கொண்டுவருவானாகில், பழுதற்ற பெண்குட்டியைக் கொண்டுவந்து,

33அந்தப் பாவநிவாரணபலியின் தலைமேல் தன் கையை வைத்து, சர்வாங்கதகனபலி கொல்லப்படும் இடத்தில் அதைப் பாவநிவாரணபலியாகக் கொல்லக்கடவன்.

34அப்பொழுது ஆசாரியன் அந்தப் பாவநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகனபலிபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தத்தை பலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,

35சமாதானபலியான ஆட்டுக்குட்டியின் கொழுப்பை எடுக்கிறதுபோல அதின் கொழுப்பு முழுவதையும் எடுத்து, யெகோவாவுக்குச் செலுத்தப்படும் தகனபலிகளைப்போல, பலிபீடத்தின்மேல் ஆசாரியன் எரிக்கவேண்டும்; இந்தவிதமாக அவன் செய்த பாவத்திற்கு ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

← Leviticus 3Read In The App, Free →Leviticus 5 →

Study Leviticus 4

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627