Zephaniah · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Zephaniah 1

1ஆமோனின் மகனாகிய யோசியா என்னும் யூதா ராஜாவின் நாட்களிலே, எசேக்கியாவின் மகனாகிய அமரியாவுக்கு மகனான கெதலியா என்பவனுடைய மகனாகிய கூஷின் மகன் செப்பனியாவுக்கு உண்டான யெகோவாவுடைய வசனம். 1 யெகோவாவுடைய மாபெரும் நாள்

2தேசத்தில் உண்டானதை எல்லாம் முற்றிலும் வாரிக்கொள்ளுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

3மனிதரையும் மிருகஜீவன்களையும் வாரிக்கொள்ளுவேன்; நான் ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மீன்களையும், இடறுகிறதற்கு காரணமானவைகளையும் துன்மார்க்கர்களோடு வாரிக்கொண்டு, தேசத்தில் இருக்கிற மனிதர்களை அழிப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

4நான் யூதாவின்மேலும், எருசலேமிலுள்ள எல்லா மக்களின்மேலும் என் கையை நீட்டி, பாகாலில் மீதியாயிருக்கிறதையும், ஆசாரியர்களோடு கூட கெம்மரீம் என்பவர்களின் பெயரையும்,

5வீடுகளின்மேல் வானசேனையை வணங்குகிறவர்களையும், யெகோவாவின் பெயரில் ஆணையிட்டு, மல்காமின் தெய்வத்தின் பெயரிலும் ஆணையிட்டு வணங்குகிறவர்களையும்,

6யெகோவாவைவிட்டுப் பின்வாங்குகிறவர்களையும், யெகோவாவை தேடாமலும், அவரைக்குறித்து விசாரிக்காமலும் இருக்கிறவர்களையும், இவ்விடத்தில் இராதபடிக்கு அழியச்செய்வேன்.

7யெகோவாகிய ஆண்டவருக்கு முன்பாக மௌனமாயிருங்கள்; யெகோவாவுடைய நியாயத்தீர்ப்பின் நாள் சமீபித்திருக்கிறது; யெகோவா ஒரு பலியை ஆயத்தம்செய்து, அதற்கு விருந்தாளிகளையும் அழைத்திருக்கிறார்.

8யெகோவாவுடைய பலியின் நாளிலே நான் அதிபதிகளையும் இளவரசர்களையும் வேறுதேசத்து ஆடைகளை அணிந்த அனைவரையும் தண்டிப்பேன்.

9வாசற்படியைத் தாண்டி, கொடுமையினாலும் வஞ்சகத்தினாலும் தங்கள் எஜமான்களின் வீடுகளை + 1:9 கோயில்களாலும் விக்கிரங்களினாலும் நிரப்புகிற அனைவரையும் அந்நாளிலே தண்டிப்பேன்.

10அந்நாளிலே மீன்வாசலிலிருந்து கூக்குரலின் சத்தமும், நகரத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து அலறுதலும், மேடுகளிலிருந்து மகா அழிவின் இரைச்சலும் உண்டாகுமென்று யெகோவா சொல்லுகிறார்.

11மக்தேஷின் குடிமக்களே அலறுங்கள்; வியாபாரிகள் எல்லோரும் அழிந்துபோனார்கள்; காசுக்காரர்கள் அனைவரும் வெட்டுண்டுபோனார்கள்.

12அக்காலத்திலே நான் எருசலேமைப் பட்டணத்தை விளக்குக்கொளுத்திச் சோதித்து, வண்டல்போலக் குழம்பியிருக்கிறவர்களும், யெகோவா நன்மை செய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்களுமான மனிதர்களைத் தண்டிப்பேன்.

13அவர்களுடைய சொத்து கொள்ளையாகும்; அவர்களுடைய வீடுகள் பாழாய்ப்போகும்; அவர்கள் வீடுகளைக் கட்டியும், அவைகளில் குடியிருக்கமாட்டார்கள்; அவர்கள் திராட்சைத்தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் பழரசத்தைக் குடிப்பதில்லை.

14யெகோவாவுடைய பெரியநாள் சமீபித்திருக்கிறது; அது மிகவும் நெருங்கி வேகமாக வருகிறது; யெகோவாவுடைய நாள் என்கிற சத்தத்திற்குப் பராக்கிரமசாலி முதலாக அங்கே மனங்கசந்து அலறுவான்.

15அந்த நாள் உக்கிரத்தின் நாள்; அது இக்கட்டும் நெருக்கமுமான நாள்; அது அழிவும் வெறுமையுமான நாள்; அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்.

16அது பாதுகாப்பான நகரங்களுக்கும், உயரமான கோட்டைமதில்களுக்கும் விரோதமாக எக்காளம் ஊதுகிறதும் ஆர்ப்பரிக்கிறதுமான நாள்.

17மனிதர்கள் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்தபடியால், அவர்கள் குருடர்களைப்போல் நடக்கும்படி நான் அவர்களை வருத்தப்படுத்துவேன்; அவர்களுடைய இரத்தம் புழுதியைப்போல் ஊற்றப்படும்; அவர்களுடைய உடல்கள் எருவைப்போல் கிடக்கும்.

18யெகோவாவுடைய கோபத்தின் நாளிலே அவர்களுடைய வெள்ளியும், பொன்னும் அவர்களைத் தப்புவிக்காது; அவருடைய எரிச்சலின் நெருப்பினால் தேசமெல்லாம் அழியும்; தேசத்தின் குடிமக்களையெல்லாம் விரைவாக அழிப்பார்.

← Habakkuk 3Read In The App, Free →Zephaniah 2 →

Study Zephaniah 1

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123