Acts · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Acts 20

1கலகம் முடிந்தபின்பு, பவுல் சீடர்களைத் தன்னிடத்திற்கு வரவழைத்து, உற்சாகப்படுத்தி, மக்கெதோனியாவிற்குப் புறப்பட்டுப்போனான்

2அவன் அந்த பகுதிகளுக்குச் சென்று சீடர்களுக்குப் புத்திச்சொல்லி, உற்சாகப்படுத்தி கிரேக்கு தேசத்திற்குச் சென்றான்.

3அங்கே அவன் மூன்று மாதங்கள் வசித்தபின்பு, அவன் கப்பல் ஏறி, சீரியா தேசத்திற்குப்போக நினைத்தபோது, யூதர்கள் அவனைக் கொலைசெய்யும்படி இரகசியமாக யோசனை செய்துகொண்டிருந்தபடியால், மக்கெதோனியா தேசத்தின்வழியாகத் திரும்பிப்போகத் தீர்மானம்பண்ணினான்.

4பெரோயா ஊரானாகிய சோபத்தரும், தெசலோனிக்கேயரில் அரிஸ்தர்க்கும், செக்குந்தும், தெர்பையானாகிய காயுவும், தீமோத்தேயும், ஆசியா நாட்டைச்சேர்ந்த தீகிக்கும் துரோப்பீமும், ஆசியா நாடுவரைக்கும் துணைக்கு வந்தார்கள்.

5இவர்கள் எங்களுக்கு முன்னால் சென்று, துரோவா பட்டணத்திலே எங்களுக்காகக் காத்திருந்தார்கள்.

6புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களுக்குப்பின்பு, நாங்கள் பிலிப்பி பட்டணத்திலிருந்து கப்பல் ஏறி ஐந்துநாட்கள் பயணத்திற்குப்பின்பு துரோவா பட்டணத்திற்கு வந்து அவர்களோடு ஏழுநாட்கள் தங்கியிருந்தோம். 1 ஐத்திகு உயிரோடு எழுந்திருத்தல்

7வாரத்தின் முதல்நாளில், அப்பம் புசிக்கும்படி சீடர்கள் கூடி வந்திருக்கும்பொழுது, பவுல் அடுத்தநாள் புறப்படவேண்டும் என்பதால், அவர்களோடு பேசி, நடுராத்திரிவரைக்கும் பிரசங்கித்தான்.

8அவர்கள் கூடியிருந்த மேல்வீட்டில் அநேக விளக்குகள் வைக்கப்பட்டிருந்தது.

9அப்பொழுது ஐத்திகு என்னும் பெயருடைய ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்திருந்தான். பவுல் தொடர்ந்து பிரசங்கம்பண்ணிக்கொண்டியிருந்ததால், அவன்‌ தூக்க மயக்கத்தினால் சாய்ந்து மூன்றாம் மாடியிலிருந்து கீழே விழுந்து, தூக்கியெடுத்தபோது மரித்திருந்தான்‌.

10உடனே பவுல் இறங்கிப்போய், அவனை எடுத்து, அணைத்துக்கொண்டு: கலங்காதிருங்கள், இவன் உயிரோடு இருக்கிறான் என்றான்.

11பின்பு மேலே ஏறிப்போய், அப்பம்பிட்டு புசித்து, விடியற்காலைவரை பேசிக்கொண்டிருந்து, பின்பு புறப்பட்டான்.

12அந்த வாலிபனை அவர்கள் உயிருள்ளவனாகக் கூட்டிக்கொண்டு வந்ததைப் பார்த்து மிகுந்த ஆறுதலடைந்தார்கள். 1 எபேசுவின் மூப்பர்களை வரவழைத்தல்

13பவுல் ஆசோ பட்டணம்வரைக்கும் தரைவழியாகப் போகத் திட்டமிட்டிருந்தான். நாங்கள் கப்பல் ஏறி, பவுலுக்கு முன்னதாகவே ஆசோ பட்டணத்திற்குச் சென்றோம். அங்கிருந்து தம்மைக் கப்பலில் ஏற்றிச்செல்லவேண்டுமென்று அவன்‌ திட்டம் செய்திருந்தார்.

14அவன் ஆசோ பட்டணத்திலே எங்களைப் பார்த்தபொழுது நாங்கள் அவனைக் கூட்டிக்கொண்டு மித்திலேனே பட்டணத்திற்கு வந்தோம்.

15அடுத்தநாளில் கீயு தீவிற்கு எதிரே உள்ள பகுதிக்கு வந்து,

16பவுல் பெந்தெகொஸ்தே பண்டிகைநாளிலே எருசலேமில் இருக்கவேண்டுமென்று விரும்பியதால், தான் ஆசியாவிலே காலத்தை வீணாக்காமல், எபேசு பட்டணத்திலிருந்து கடந்துபோகவேண்டுமென்று அவசரப்படுத்தி, மறுநாளிலே சாமு தீவை அடைந்து, துரோகில்லியோன் ஊர்த்துறையிலே தங்கி, மறுநாள் மிலேத்து பட்டணத்திற்கு வந்தோம்.

17மிலேத்துவிலிருந்து அவன் எபேசுவிற்கு ஆள் அனுப்பி, சபையின் மூப்பர்களை வரவழைத்தான்.

18அவர்கள் தன்னிடத்தில் வந்தபொழுது, அவன் அவர்களை நோக்கி: நான் ஆசியா நாட்டிலிருந்து வந்த முதல்நாள் தொடங்கி எல்லாக் காலங்களிலும் உங்களோடு நான் எப்படி இருந்தேன் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.

19நான் மிகுந்த தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும், யூதர்களுடைய தீமையான யோசனையால் எனக்கு வந்த சோதனைகளோடும் கர்த்தருக்குப் பணி செய்தேன்.

20பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்துவைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்குப் பிரசங்கித்து, உபதேசம்பண்ணி,

21தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக்குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதைக்குறித்தும், நான் யூதர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் சாட்சியாக அறிவித்தேன்.

22இப்பொழுதும் நான் பரிசுத்த ஆவியானவரிலே கட்டுண்டவனாக எருசலேமுக்குப் போகிறேன்; அங்கே எனக்கு என்ன நடக்கும் என்று தெரியாது.

23தொடர்ச்சியான கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு உள்ளது என்று பரிசுத்த ஆவியானவர் பட்டணங்களெல்லாம் தெரிவிக்கிறதைமட்டும் அறிந்திருக்கிறேன்.

24ஆனாலும் எதைக்குறித்தும் நான் கவலைப்படமாட்டேன். என் உயிரையும் பெரிதாக நினைக்கமாட்டேன்; என் ஓட்டத்தை சந்தோஷத்தோடு முடிக்கவும், தேவனுடைய கிருபையின் நற்செய்தியைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.

25இதோ, நான் உங்களோடு வசித்து, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்து பிரசங்கம்பண்ணினதைக் கேட்டவர்களாகிய நீங்கள் எல்லோரும் இனி என் முகத்தைப் பார்க்கமாட்டீர்கள் என்று அறிந்திருக்கிறேன்.

26தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்துவைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியால்,

27எல்லோருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாக இருக்கிறேன் என்பதற்கு உங்களை இன்று சாட்சிகளாக வைக்கிறேன்.

28ஆகவே, உங்களைக்குறித்தும் தேவன், தம்முடைய சொந்த இரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவியானவர் உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை எல்லாவற்றையும்குறித்தும், எச்சரிக்கையாக இருங்கள்.

29நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிய ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும்.

30உங்களிலும் சிலர் எழும்பி, சீடர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி தவறானவைகளைப் போதிப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன்.

31எனவே, நான் மூன்று வருடங்கள் இரவும் பகலும் கண்ணீரோடு இடைவிடாமல் உங்கள் அனைவருக்கும் புத்திச் சொன்னதை நினைத்து விழித்திருங்கள்.

32இப்பொழுதும் சகோதரர்களே, உங்களுடைய பக்தி பெருகவும், பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்கு உரிமைப்பங்கைக் கொடுக்கவும் வல்லவராக இருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்திற்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்.

33ஒருவனுடைய வெள்ளியையோ பொன்னையோ ஆடையையோ நான் இச்சிக்கவில்லை.

34நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனே கூடி இருந்த மக்களுக்காகவும் இந்தக் கைகளே வேலைசெய்தது.

35இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைவிட கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லாவிதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான்.

36இவைகளைச் சொன்னபின்பு, அவன் முழங்கால்படியிட்டு, அவர்கள் எல்லோரோடும் சேர்ந்து ஜெபம்பண்ணினான்.

37அவர்கள் எல்லோரும் மிகவும் அழுது, என் முகத்தை நீங்கள் இனிப் பார்க்கமாட்டீர்கள் என்று அவன் சொன்ன வார்த்தையினால் அதிகமாகத் துக்கப்பட்டு,

38பவுலைக் கட்டித்தழுவி, அவனை முத்தம் செய்து, கப்பல்வரைக்கும் அவனோடுகூடச் சென்றார்கள்.

← Acts 19Read In The App, Free →Acts 21 →

Study Acts 20

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeAlbert BarnesJohn WesleyJohn CalvinScofieldWilliam BurkittFamily Bible NotesJohn LightfootGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122232425262728