Acts · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Acts 27

1நாங்கள் இத்தாலியா தேசத்திற்குக் கப்பல் ஏறிப்போகும்படி தீர்மானிக்கப்பட்டபோது, பவுலையும் காவலில் வைக்கப்பட்டிருந்த வேறுசிலரையும் அகுஸ்து படையைச் சேர்ந்த யூலியு என்னும் பெயர்கொண்ட நூறுபேருக்கு தலைவனிடத்தில் ஒப்புவித்தார்கள்.

2அதிரமித்தியம் ஊர்க்கப்பலில் நாங்கள் ஏறி, ஆசியா நாட்டு வழியைபிடித்துப் போகவேண்டுமென்று நினைத்துப் புறப்பட்டோம். மக்கெதோனியா தேசத்துத் தெசலோனிக்கே பட்டணத்தானாகிய அரிஸ்தர்க்கு எங்களுடனேகூட இருந்தான்.

3மறுநாள் சீதோன் துறைமுகம் வந்துசேர்ந்தோம். யூலியு பவுலை அன்பாக நடப்பித்து, அவன் தன் நண்பர்களிடத்திலே போய் உபசரிக்கப்படும்படிக்கு உத்தரவு கொடுத்தான்.

4அந்த இடத்தைவிட்டு நாங்கள் புறப்பட்டு, எதிர்க்காற்றாயிருந்தபடியினால், சீப்புரு தீவின் ஓரமாகப் பயணம் செய்தோம்

5பின்பு சிலிசியா பம்பிலியா நாடுகளின் கடல்வழியாக பயணித்து, லீசியா நாட்டு மீறாப்பட்டணத்தில் சேர்ந்தோம்.

6இத்தாலியாவிற்குப் போகிற அலெக்சந்திரியா பட்டணத்துக் கப்பலை, நூறுபேருக்கு தலைவன் அங்கே பார்த்து, எங்களை அதில் ஏற்றினான்.

7காற்று எங்களைத் தடுத்தபடியினாலே, நாங்கள் அநேகநாட்கள் மெதுவாய்ச் சென்று, வருத்தத்தோடு கினீது பட்டணத்திற்கு எதிரே வந்து, சல்மோனே ஊருக்கு எதிராய்க் கிரேத்தாதீவின் ஓரமாகப் பயணம் செய்தோம்.

8அதை வருத்தத்தோடு கடந்து, நல்ல துறைமுகம் என்னப்பட்ட ஒரு இடத்திற்கு வந்தோம்; லசேயபட்டணம் அதற்கு அருகில் இருந்தது.

9வெகுகாலம் சென்று, உபவாசநாளும் முடிந்து போனபடியினாலே, இனிக் கப்பல் பயணம் செய்கிறது ஆபத்தாக இருக்குமென்று, பவுல் அவர்களை நோக்கி:

10மனிதர்களே, இந்த பயணத்தினாலே பொருட்களுக்கும், கப்பலுக்கும் மாத்திரமல்ல, நம்முடைய உயிருக்கும் வருத்தமும், மிகுந்த சேதமும் உண்டாயிருக்குமென்று காண்கிறேன் என்று சொல்லி அவர்களை எச்சரித்தான்.

11நூறுபேருக்குத் தலைவன் பவுலினால் சொல்லப்பட்டவைகளைவிட மாலுமியையும் கப்பல் சொந்தக்காரர்களையும் அதிகமாக நம்பினான்.

12அந்தத் துறைமுகம் மழைகாலத்திலே தங்குவதற்கு வசதியாக இல்லாததினால், அந்த இடத்தைவிட்டுத் தென்மேற்கையும் வடமேற்கையும் நோக்கியிருக்கும் கிரேத்தா தீவிலுள்ள துறைமுகமாகிய பேனிக்ஸ் என்னும் இடத்தில் சேரக்கூடுமானால் சேர்ந்து, மழைகாலத்தில் தங்கும்படி அநேகம்பேர் ஆலோசனை சொன்னார்கள். 1 புயல்

13தென்றல் மெதுவாக வீசினபடியால், தாங்கள் வேண்டிக்கொண்டது கைகூடிவந்ததென்று எண்ணி, அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு கிரேத்தா தீவிற்கு அருகில் சென்றார்கள்.

14கொஞ்சநேரத்திற்குள்ளே யூரோக்கிலிதோன் என்னும் கடுங்காற்று அதில் மோதிற்று.

15கப்பல் அதில் அகப்பட்டுக்கொண்டு, காற்றுக்கு எதிர்த்துப்போகக்கூடாதபடியினால் காற்றின் போக்கிலே கொண்டுபோகப்பட்டோம்.

16அப்படிக் கிலவுதா என்னப்பட்ட ஒரு சின்ன தீவின் அருகில் போகும்போது வெகுநேரம் போராடி படகை கைப்பற்றினோம்.

17அதை அவர்கள் தூக்கியெடுத்தப்பின்பு, கயிற்றினால் கப்பலைச் சுற்றிக் கட்டி, புதை மணலிலே விழுவோமென்று பயந்து, பாய்களை இறக்கி, இவ்விதமாகக் கொண்டுபோகப்பட்டார்கள்.

18மேலும் பெருங்காற்றுமழையில் நாங்கள் மிகவும் அவதிப்பட்டபடியினால் மறுநாளில் சில பொருட்களை கடலில் எறிந்தார்கள்.

19மூன்றாம்நாளிலே கப்பலின் கருவிகளை எங்களுடைய கைகளினாலே எடுத்து கடலில் வீசினோம்

20அநேகநாளாகச் சூரியனாவது நட்சத்திரங்களாவது காணப்படாமல், மிகுந்த பெருங்காற்றுமழையும் அடித்துக் கொண்டிருந்தபடியினால், இனித் தப்பிப்பிழைப்போமென்னும் நம்பிக்கை முழுமையும் இல்லாமல்போனது.

21அநேகநாட்கள் அவர்கள் சாப்பிடாமல் இருந்தபோது, பவுல் அவர்கள் நடுவிலே நின்று: மனிதர்களே, இந்த வருத்தமும் சேதமும் வராதபடிக்கு என் சொல்லைக்கேட்டு, கிரேத்தாதீவைவிட்டுப்புறப்படாமல் இருக்கவேண்டியதாயிருந்தது.

22ஆனாலும் மனதில் உறுதியுள்ளவர்களாக இருங்களென்று இப்பொழுது உங்களுக்குத் தைரியஞ்சொல்லுகிறேன். கப்பற்சேதமேயல்லாமல் உங்களில் ஒருவனுக்கும் உயிர்சேதம் வராது.

23ஏனென்றால், என்னை ஆட்கொண்டவரும் நான் வணங்குகிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இரவிலே என்னிடத்தில் வந்துநின்று:

24பவுலே, பயப்படாதே, நீ இராயனுக்கு முன்பாக நிற்கவேண்டும், இதோ, உன்னுடனேகூட பயணம் பண்ணுகிற அனைவரையும் தேவன் உனக்கு தயவுபண்ணினார் என்றான்.

25ஆகவே, மனிதர்களே, மனதில் உறுதியுள்ளவர்களாக இருங்கள். எனக்குச் சொல்லப்பட்டபடியே நடக்கும் என்று தேவனிடத்தில் நம்பிக்கையாக இருக்கிறேன்.

26ஆனாலும் நாம் ஒரு தீவிலே விழவேண்டியதாயிருக்கும் என்றான். 1 கப்பல் சேதம்

27பதினான்காம் இராத்திரியானபோது, நாங்கள் ஆதிரியாக் கடலிலே அலைக்கழிக்கப்பட்டுப் போகும்போது, நடு இராத்திரியிலே கப்பலாட்களுக்கு ஒரு கரை நெருங்கிவருகிறதாகத் தோன்றியது.

28உடனே அவர்கள் நங்கூரம்விட்டுப் பார்த்தபோது இருபது அடி ஆழம் என்று கண்டார்கள்; சிறிதுதூரம் போனபொழுது, மறுபடியும் நங்கூரம்விட்டுப் பார்த்தபோது பதினைந்து அடி ஆழம் என்று கண்டார்கள்.

29பாறையிடங்களில் விழுவோமென்று பயந்து, பின் பகுதியிலிருந்து நாலு நங்கூரங்களைப்போட்டு, எப்போது பொழுதுவிடியுமோ என்றிருந்தார்கள்.

30அப்பொழுது கப்பலாட்கள் கப்பலைவிட்டு ஓடிப்போக வகைதேடி, முன்பகுதியிலிருந்து நங்கூரங்களைப் போடப்போகிறதுபோல படகை கடலில் இறக்கும்போது,

31பவுல் நூறுபேருக்கு தலைவனையும், போர்வீரர்களையும் நோக்கி: இவர்கள் கப்பலில் இல்லாவிட்டால் நீங்கள் தப்பிப் பிழைக்கமாட்டீர்கள் என்றான்.

32அப்பொழுது, போர்வீரர்கள் படகின் கயிறுகளை அறுத்து, அதைக் கீழே விழவிட்டார்கள்.

33பொழுதுவிடியும்போது எல்லோரும் சாப்பிடும்படி பவுல் அவர்களுக்குத் தைரியஞ்சொல்லி: நீங்கள் இன்று பதினாலுநாட்களாக ஒன்றும் சாப்பிடாமல் பட்டினியாக இருக்கிறீர்கள்.

34ஆகவே, சாப்பிடும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், நீங்கள் தப்பிப் பிழைப்பதற்கு அது உதவியாக இருக்கும்; உங்களுடைய தலையிலிருந்து ஒரு முடியும் விழாது என்றான்.

35இப்படிச் சொல்லி. அப்பத்தை எடுத்து, தேவனை ஸ்தோத்தரித்து, அதைப் பிட்டுச் சாப்பிடத் தொடங்கினான்.

36அப்பொழுது எல்லோரும் தைரியப்பட்டு சாப்பிட்டார்கள்.

37கப்பலில் இருநூற்று எழுபத்தாறுபேர் இருந்தோம்.

38திருப்தியாக சாப்பிட்டபின்பு அவர்கள் கோதுமையைக் கடலிலே போட்டு, கப்பலின் பாரத்தைக் குறைத்தார்கள்.

39பொழுதுவிடிந்தபின்பு, எந்த இடம் என்று அறியாதிருந்தார்கள். அப்பொழுது சமமான கரையுள்ள ஒரு துறைமுகத்தை அவர்கள் பார்த்து; கூடுமானால் அதற்குள் கப்பலையோட்ட யோசனையாக இருந்து,

40நங்கூரங்களை அறுத்துக் கடலிலே விட்டுவிட்டு, சுக்கான்களுடைய கட்டுகளைத் தளரவிட்டு, பெரும்பாயைக் காற்று முகமாக விரித்து, கரைக்கு நேராகப்போய்,

41இருபுறமும் கடல் மோதிய ஒரு இடத்திலே கப்பலை நிறுத்தினார்கள்; முன்பகுதி ஊன்றி அசையாமலிருந்தது, பின் பாகங்கள் அலைகளுடைய பலத்தினால் உடைந்துபோனது.

42அப்பொழுது காவல் பண்ணப்பட்டவர்களில் ஒருவனும் நீந்தி ஓடிப்போகாதபடிக்கு அவர்களைக் கொன்றுபோடவேண்டுமென்று போர்வீரர்கள் யோசனையாக இருந்தார்கள்.

43நூறுபேருக்குத் தலைவன் பவுலைக் காப்பாற்ற மனதாயிருந்து, அவர்களுடைய யோசனையைத் தடுத்து, நீந்தத்தக்கவர்கள் முந்திக் கடலில் விழுந்து கரையேறவும்,

44மற்றவர்களில் சிலர் பலகைகள்மேலும், சிலர் கப்பலின் உடைந்த துண்டுகள்மேல் உட்கார்ந்து கரையேறவும் கட்டளையிட்டான்; இவ்விதமாக எல்லோரும் தப்பிக் கரைசேர்ந்தார்கள்.

← Acts 26Read In The App, Free →Acts 28 →

Study Acts 27

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeAlbert BarnesJohn WesleyJohn CalvinScofieldWilliam BurkittFamily Bible NotesJohn LightfootGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122232425262728