Acts · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Acts 24

1ஐந்து நாட்களுக்குப்பின்பு பிரதான ஆசாரியனாகிய அனனியா மூப்பர்களோடும் தெர்த்துல்லு என்னும் ஒரு வழக்கறிஞரோடும் கூடப்போனான், அவர்கள் பவுலுக்கு எதிராக தேசாதிபதியினிடத்தில் முறையீடு செய்தார்கள்.

2அவன் அழைக்கப்பட்டபோது, தெர்த்துல்லு குற்றஞ்சாட்டத்தொடங்கி:

3கனம்பொருந்திய பேலிக்ஸே, உம்மாலே நாங்கள் மிகுந்த சமாதான சுகத்தை அநுபவிக்கிறதையும், உம்முடைய பராமரிப்பினாலே இந்த தேசத்தினர்களுக்கு சிறந்த நன்மைகள் நடக்கிறதையும் நாங்கள் எப்பொழுதும் எங்கும் மிகுந்த நன்றியறிதலுடனே ஒப்புக்கொள்ளுகிறோம்.

4உம்மை நான் அதிக சொற்களினாலே வருத்தப்படுத்தாதபடிக்கு, நாங்கள் சுருக்கமாகச் சொல்வதை நீர் பொறுமையாகக் கேட்கவேண்டுமென்று வேண்டுகிறேன்.

5என்னவென்றால், இந்த மனிதன் கொள்ளைநோயாகவும், பூமியிலுள்ள அனைத்து யூதர்கள் நடுவில் கலகம் எழுப்புகிறவனாகவும், நசரேயருடைய மதகுழப்பத்திற்கு தலைவனாகவும் இருக்கிறானென்று கண்டறிந்தோம்.

6இவன் தேவாலயத்தையும் தீட்டுப்படுத்தப்பார்த்தான். நாங்கள் இவனைப்பிடித்து எங்களுடைய வேதபிரமாணத்தின்படியே நியாயம் விசாரிக்க விரும்பியிருந்தோம்.

7அப்பொழுது இராணுவ அதிபதி லீசியா வந்து, மிகவும் துணிகரமாக இவனை எங்களுடைய கைகளிலிருந்து இழுத்துக்கொண்டுபோய்,

8இவன்மேல் குற்றஞ்சுமத்துகிறவர்கள் உம்மிடத்தில் வரும்படி கட்டளையிட்டார். இவனிடத்தில் நீர் விசாரித்தால் நாங்கள் இவன்மேல் சுமத்துகிற குற்றங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ளலாம் என்றான்.

9யூதர்களும் அதற்கு சம்மதித்து, இவைகள் உண்மைதான் என்றார்கள்.

10பவுல் பேச தேசாதிபதி அனுமதித்தபோது, அவன் பதிலாக: நீர் அநேக வருடகாலமாக இந்த நாட்டாருக்கு நீதிபதியாக இருக்கிறீர் என்றறிந்து, நான் என் காரியங்களைக்குறித்து அதிக தைரியத்துடன் பதில் சொல்லுகிறேன்.

11நான் தொழுதுகொள்ளும்படியாக எருசலேமுக்குப் போனதுமுதல் இதுவரைக்கும் பன்னிரண்டு நாட்கள்மட்டும் ஆனதென்று நீர் அறிந்துகொள்ளலாம்.

12தேவாலயத்திலே நான் ஒருவரிடத்திலாவது தர்க்கம் செய்ததையும், நான் ஜெப ஆலயங்களிலாவது பட்டணத்திலாவது மக்களுக்குள்ளே கலகமெழுப்பினதையும், இவர்கள் பார்த்ததில்லை.

13இப்பொழுது என்மேல் சுமத்துகிற குற்றங்களை இவர்கள் உம்மிடத்தில் நிரூபிக்கவும் முடியாது.

14உம்மிடத்தில் ஒன்றை ஏற்றுக்கொள்ளுகிறேன்; அது என்னவென்றால், இவர்கள் மதபேதம் என்று சொல்லுகிற வழியின்படியே எங்களுடைய முன்னோர்களின் தேவனுக்கு ஆராதனைசெய்து நியாயப்பிரமாணத்திலேயும் தீர்க்கதரிசிகள் புத்தகங்களிலேயும் எழுதியிருக்கிற எல்லாவற்றையும் நான் நம்பி,

15நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று இவர்கள் தேவனிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறதுபோல, நானும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

16இதனால் நான் தேவனுக்கும் மனிதர்களுக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாக இருக்க முயற்சிக்கிறேன்.

17பல வருடங்களுக்குப்பின்பு நான் என் மக்களுக்கு நன்கொடைப் பணத்தைக் கொடுக்கவும், காணிக்கைகளைச் செலுத்தவும் வந்தேன்.

18அப்பொழுது கூட்டமில்லாமலும் ஆர்ப்பாட்டமில்லாமலும் தேவாலயத்திலே சுத்திகரிப்பு செய்துகொண்டவனாக இருந்தபோது, ஆசியா நாட்டாரான சில யூதர்கள் என்னைப் பார்த்தார்கள்.

19அவர்களுக்கு என்பேரில் விரோதமான காரியம் ஏதாவது இருந்தால், அவர்களே இங்கே வந்து, உமக்கு முன்பாகக் குற்றஞ்சுமத்தவேண்டும்.

20நான் ஆலோசனைச் சங்கத்தினர்களுக்கு முன்பாக நின்றபோது அவர்கள் ஏதாவது அநியாயத்தை என்னிடத்தில் கண்டிருந்தால் இவர்களே அதைச் சொல்லட்டும்.

21நான் அவர்கள் நடுவில் நின்றபோது மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பதைக்குறித்து, இன்று உங்களாலே நியாயந்தீர்க்கப்படுகிறேன் என்று நான் சொன்ன ஒரு சொல்லினிமித்தமேயன்றி வேறொன்றினிமித்தமும் குற்றம் காணப்படவில்லை என்றான்.

22இந்த மார்க்கத்தின் விஷயங்களை தெளிவாக அறிந்திருந்த பேலிக்ஸ் இவைகளைக் கேட்டபொழுது: இராணுவ அதிபதி லீசியா வரும்போது உங்களுடைய காரியங்களைக் கண்டிப்பாய் விசாரிப்பேன் என்று சொல்லி;

23பவுலைக் காவலில் வைக்கவும், கண்டிப்பில்லாமல் நடத்தவும், அவனுக்கு சேவைசெய்கிறதற்கும் அவனைக் கவனித்துக்கொள்ளுகிறதற்கும் வருகிற அவனுடைய மனிதர்களில் ஒருவரையும் தடைசெய்யாதிருக்கவும் நூறுபேருக்கு அதிபதியானவனுக்கு ஆணையிட்டு, அவர்களைக் காத்திருக்கும்படி செய்தான்.

24சில நாட்களுக்குப்பின்பு பேலிக்ஸ் யூதப் பெண்ணாகிய தன் மனைவி துருசில்லாளுடனே வந்து, பவுலை அழைத்து வரச்செய்து, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தைக்குறித்து அவன் சொல்லக்கேட்டான்.

25அவன், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பைக்குறித்துப் பேசும்போது, பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்கு நேரம் கிடைக்கும்போது உன்னை வரவழைப்பேன் என்றான்.

26மேலும், அவன் பவுலை விடுதலைசெய்யும்படி தனக்கு அவன் பணங்கொடுப்பானென்று நம்பிக்கையுள்ளவனாக இருந்தான்; அதினாலே அவன் அநேகமுறை அவனை அழைத்து, அவனுடனே பேசினான்.

27இரண்டு வருடங்கள் சென்றபின்பு பேலிக்ஸ் என்பவனுக்குப் பதிலாக பொர்க்கியுபெஸ்து தேசாதிபதியாக வந்தான்; அப்பொழுது பேலிக்ஸ் யூதர்களுக்கு நன்மைசெய்ய விரும்பி பவுலைக் காவலில் வைத்துவிட்டுப்போனான்.

← Acts 23Read In The App, Free →Acts 25 →

Study Acts 24

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeAlbert BarnesJohn WesleyJohn CalvinScofieldWilliam BurkittFamily Bible NotesJohn LightfootGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122232425262728