Isaiah · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Isaiah 24

1இதோ, யெகோவா தேசத்தை வெறுமையும் பாழுமாக்கி, அதைக் கவிழ்த்து, அதின் குடிமக்களைச் சிதறடிப்பார்.

2அப்பொழுது, மக்களுக்கு எப்படியோ அப்படியே ஆசாரியனுக்கும் வேலைக்காரனுக்கு எப்படியோ அப்படியே எஜமானுக்கும், வேலைக்காரிக்கு எப்படியோ அப்படியே எஜமானிக்கும், கொண்டவனுக்கு எப்படியோ அப்படியே விற்றவனுக்கும், கடன் கொடுத்தவனுக்கு எப்படியோ அப்படியே கடன்வாங்கினவனுக்கும், வட்டிவாங்கினவனுக்கு எப்படியோ அப்படியே வட்டிகொடுத்தவனுக்கும் எல்லோருக்கும் சரியாக நடக்கும்.

3தேசம் முழுவதும் கொள்ளையாகி, முற்றிலும் வெறுமையாகும்; இது யெகோவா சொன்ன வார்த்தை.

4தேசம் புலம்பி வாடும்; பூமி சத்துவமற்று உலர்ந்துபோகும்; தேசத்து மக்களிலே உயர்ந்தவர்கள் தவிப்பார்கள்.

5தேசம் தன் குடிமக்களின் மூலமாக தீட்டுப்பட்டது; அவர்கள் நியாயப்பிரமாணங்களை மீறி, கட்டளையை மாறுபாடாக்கி, நித்திய உடன்படிக்கையை முறித்தார்கள்.

6இதினிமித்தம் சாபம் தேசத்தை அழித்தது, அதின் குடிமக்கள் தண்டிக்கப்பட்டார்கள்; தேசத்தார் சுட்டெரிக்கப்பட்டார்கள், சிலர்மாத்திரம் மீந்திருக்கிறார்கள்.

7திராட்சைரசம் துக்கங்கொண்டாடும், திராட்சைச்செடி வதங்கும்; மனமகிழ்ச்சியாயிருந்தவர்கள் எல்லோரும் பெருமூச்சுவிடுவார்கள்.

8மேளங்களின் சந்தோஷம் ஓயும், களிகூருகிறவர்களின் நடமாட்டம் ஒழியும், வீணையின் களிப்பு நின்றுபோகும்.

9பாடலோடே திராட்சைரசம் குடிக்கமாட்டார்கள்; மதுபானம் அதைக் குடிக்கிறவர்களுக்குக் கசக்கும்.

10வெறுமையாய்ப்போன நகரம் தகர்ந்து, ஒருவரும் உள்ளே நுழையமுடியாதபடி, வீடுகளெல்லாம் அடைபட்டுக்கிடக்கும்.

11திராட்சைரசத்துக்காக வீதிகளிலே கூக்குரல் உண்டு; அனைத்து சந்தோஷமும் குறைந்து, தேசத்தின் மகிழ்ச்சி இல்லாமல் போகும்.

12நகரத்தில் மீதியாயிருப்பது அழிவே; வாசல்கள் இடிக்கப்பட்டுப் பாழாய்க் கிடக்கும்.

13ஒலிவமரத்தை உலுக்கும்போதும், திராட்சைப்பழங்களை அறுத்துத் முடியும்போதும், பின்பறிப்புக்குக் கொஞ்சம் மீந்திருப்பதுபோல, தேசத்திற்குள்ளும் இந்த மக்களின் நடுவிலும் கொஞ்சம் மீந்திருக்கும்.

14அவர்கள் சத்தமிட்டுக் கெம்பீரிப்பார்கள்; யெகோவாவுடைய மகத்துவத்திற்காக சமுத்திரத்திலிருந்து ஆர்ப்பரிப்பார்கள்.

15ஆகையால் யெகோவாவை, சூரியன் உதிக்கும் திசையிலும், இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவின் நாமத்தைச் சமுத்திரத் தீவுகளிலும் மகிமைப்படுத்துங்கள்.

16நீதிபரனுக்கு மகிமை என்று பாடும் கீதங்களை பூமியின் கடைசிமுனையிலிருந்து கேட்கிறோம்; நானோ, இளைத்துப்போனேன், இளைத்துப்போனேன்; எனக்கு ஐயோ, துரோகிகள் துரோகம் செய்கிறார்கள்; துரோகிகள் மிகுதியாகத் துரோகம்செய்கிறார்கள் என்கிறேன்.

17தேசத்து மக்களே, பயமும், படுகுழியும், கண்ணியும் உங்களுக்கு நேரிடும்.

18அப்பொழுது பயத்தின் சத்தத்திற்கு விலகி ஓடுகிறவன் படுகுழியில் விழுவான்; படுகுழியிலிருந்து ஏறுகிறவன் கண்ணியில் அகப்படுவான்; உயர இருக்கும் மதகுகள் திறக்கப்பட்டு, பூமியின் அஸ்திபாரங்கள் குலுங்கும்.

19தேசம் நொறுங்கவே நொறுங்கும், தேசம் முறியவே முறியும், தேசம் அசையவே அசையும்.

20வெறித்தவனைப்போல தேசம் தள்ளாடி, ஒரு குடிசையைப்போலப் பெயர்த்துப்போடப்படும்; அதின் பாதகம் அதின்மேல் பாரமாயிருப்பதினால், அது விழுந்துபோகும், இனி எழுந்திருக்காது.

21அக்காலத்தில் யெகோவா உன்னதமான சேனையை உன்னதத்திலும், பூமியின் ராஜாக்களைப் பூமியிலும் விசாரிப்பார்.

22அவர்கள் கெபியில் ஏகமாகக் கட்டுண்டவர்களாகச் சேர்ந்து, காவலில் அடைக்கப்பட்டு, அநேகநாட்கள் சென்றபின்பு விசாரிக்கப்படுவார்கள்.

23அப்பொழுது சேனைகளின் யெகோவா சீயோன் மலையிலும் எருசலேமிலும் ஆளுகைசெய்வதால், சந்திரன் கலங்கும், சூரியன் வெட்கப்படும்; அவருடைய மூப்பர்களுக்கு முன்பாக தம்முடைய மகிமை வெளிப்படுத்துவார்.

← Isaiah 23Read In The App, Free →Isaiah 25 →

Study Isaiah 24

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566