Isaiah · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Isaiah 65

1என்னைக்குறித்து விசாரித்துக் கேளாதிருந்தவர்களாலே தேடப்பட்டேன்; என்னைத் தேடாதிருந்தவர்களாலே கண்டறியப்பட்டேன்; என்னுடைய பெயரை அறியாதிருந்த தேசத்தை நோக்கி: இதோ, இங்கே இருக்கிறேன் என்றேன்.

2நலமல்லாத வழியிலே தங்கள் எண்ணங்களின்படி நடக்கிற முரட்டாட்டமான மக்களைநோக்கி நாள் முழுவதும் என் கைகளை நீட்டினேன்.

3அந்த மக்கள் என் சந்நிதியிலே எப்பொழுதும் எனக்குக் கோபமுண்டாக்கி, தோட்டங்களிலே பலியிட்டு, செங்கற்களின்மேல் தூபங்காட்டி,

4பிரேதக்குழிகளுக்கு அருகில் உட்கார்ந்து, பாழான இடங்களில் இரவுதங்கி, பன்றியிறைச்சியை சாப்பிட்டு, தங்கள் பாத்திரங்களில் அருவருப்பானவைகளின் குழம்பை வைத்திருந்து:

5நீ அங்கேயே இரு, என் அருகில் வராதே, உன்னைகாட்டிலும் நான் பரிசுத்தன் என்று சொல்கிறார்கள்; இவர்கள் என் கோபத்தாலாகிய புகையும், நாள்முழுவதும் எரிகிற நெருப்புமாயிருப்பார்கள்.

6இதோ, அது எனக்கு முன்பாக எழுதியிருக்கிறது; நான் மவுனமாயிராமல் தண்டிப்பேன்.

7உங்கள் அக்கிரமங்களுக்கும் மலைகளில் தூபங்காட்டி, மேடைகளின்மேல் என்னை நிந்தித்த உங்களுடைய முன்னோர்களுடைய அக்கிரமங்களுக்கும் ஏற்றவிதத்தில் அவர்கள் மடியிலே தண்டிப்பேன்; நான் அவர்கள் முந்தின செய்கையின் பலனை அவர்கள் மடியிலே போடுவேனென்று யெகோவா சொல்கிறார்.

8யெகோவா சொல்கிறது என்னவென்றால்: ஒரு திராட்சைக்குலையில் இரசம் காணப்படும்போது: அதை அழிக்காதே, அதிலே ஆசீர்வாதம் உண்டென்று சொல்கிறபடி, நான் என் ஊழியக்காரருக்காக அனைத்தையும் அழிக்கவிடாமல் செய்வேன்.

9யாக்கோபிலிருந்து ஒரு வித்தையும், யூதாவிலிருந்து என் மலைகளைச் சொந்தமாக்குபவரையும் எழும்பச்செய்வேன்; நான் தெரிந்துகொண்டவர்கள் அதைச் சொந்தமாக்கிக்கொண்டு, என் ஊழியக்காரர்கள் அங்கே குடியிருப்பார்கள்.

10என்னைத் தேடுகிற என் மக்களுக்கு சாரோன் ஆட்டுத்தொழுவமாகவும், ஆகோர் பள்ளத்தாக்கு மாட்டுமந்தைகள் தங்குமிடமாகவும் இருக்கும்.

11ஆனாலும் யெகோவாவை விட்டு, என் பரிசுத்த மலையை மறந்து, காத் என்னும் தெய்வத்திற்குப் பந்தியை ஆயத்தம்செய்து, மேனி என்னும் தெய்வத்திற்குப் பானபலியை நிறைய ஊற்றுகிறவர்களே,

12உங்களை நான் பட்டயத்திற்கு எண்ணிக்கொடுப்பேன்; நீங்கள் அனைவரும் கொலைசெய்யப்படக் குனிவீர்கள்; நான் கூப்பிட்டும் நீங்கள் மறுமொழி கொடுக்கவில்லை; நான் பேசியும் நீங்கள் கேட்கவில்லை; என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, எனக்குப் பிரியமல்லாததைத் தெரிந்துகொண்டீர்கள்.

13ஆதலால் யெகோவாவாகிய ஆண்டவர் சொல்கிறார்: இதோ, என் ஊழியக்காரர்கள் சாப்பிடுவார்கள், நீங்களோ பசியாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர்கள் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர்கள் சந்தோஷப்படுவார்கள், நீங்களோ வெட்கப்படுவீர்கள்.

14இதோ, என் ஊழியக்காரர்கள் மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள், நீங்களோ மனவியாதியினாலே அலறி, ஆவியின் முறிவினாலே புலம்புவீர்கள்.

15நான் தெரிந்து கொண்டவர்களுக்கு நீங்கள் உங்கள் பெயரை சாபவார்த்தையாகப் பின்வைத்துப் போவீர்கள்; யெகோவாவாகிய ஆண்டவர் உன்னைக் கொன்றுபோட்டு, தம்முடைய ஊழியக்காரருக்கு வேறு பெயரைச் சூட்டுவார்.

16அதினாலே பூமியிலே தன்னை ஆசீர்வதிக்கிறவன் சத்திய தேவனுக்குள் தன்னை ஆசீர்வதிப்பான்; பூமியிலே வாக்குக்கொடுக்கிறவன் சத்திய தேவன் பெயரில் வக்குக்கொடுப்பான்; முந்தின துன்பங்கள் மறக்கப்பட்டு, அவைகள் என் கண்களுக்கு மறைந்துபோனது. 1 புதிய வானமும் புதிய பூமியும்

17இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் படைக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.

18நான் படைக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; இதோ, எருசலேமைக் களிகூருதலாகவும், அதின் மக்களை மகிழ்ச்சியாகவும் படைக்கிறேன்.

19நான் எருசலேமின்மேல் களிகூர்ந்து, என் மக்களின்மேல் மகிழ்ச்சியாயிருப்பேன்; அழுகையின் சத்தமும், கூக்குரலின் சத்தமும் அதில் இனிக் கேட்கப்படுவதில்லை.

20அங்கே இனி குறைந்த ஆயுள் உள்ள சிறுவனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் இருக்கமாட்டார்கள்; நூறு வயதுசென்று மரணமடைகிறவனும் வாலிபனென்று கருதப்படுவான், நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்.

21வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சைத்தோட்டங்களை ஏற்படுத்தி, அவைகளின் பழங்களைச் சாப்பிடுவார்கள்.

22அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் பழங்களைச் சாப்பிடுகிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் மரத்தின் நாட்களைப்போல என் மக்களின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நீண்டநாட்கள் அனுபவிப்பார்கள்.

23அவர்கள் வீணாக உழைப்பதில்லை; அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெற்றெடுப்பதுமில்லை; அவர்களும், அவர்களுடன்கூட அவர்களுடைய வாரிசும் யெகோவாவாலே ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள்.

24அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுமொழி கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்.

25ஓனாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும்; புழுதி பாம்பிற்கு இரையாகும்; என் பரிசுத்த மலையெங்கும் அவைகள் தீங்குசெய்வதுமில்லை, கேடு உண்டாக்குவதுமில்லையென்று யெகோவா சொல்கிறார்.

← Isaiah 64Read In The App, Free →Isaiah 66 →

Study Isaiah 65

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566