Numbers · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Numbers 15

1யெகோவா மோசேயை நோக்கி:

2“நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் குடியிருக்கும்படி நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்தபின்பு,

3விசேஷித்த பொருத்தனையையோ, உற்சாக பலியையோ, உங்களுடைய பண்டிகைகளில் செலுத்தும் பலியையோ, யெகோவாவுக்கு மாடுகளிலாவது ஆடுகளிலாவது சர்வாங்கதகனபலியையாவது மற்ற ஏதாவது ஒரு பலியையாவது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனமாகப் பலியிடும்போது,

4தன்னுடைய படைப்பைக் யெகோவாவுக்குச் செலுத்துகிறவன் சர்வாங்கதகனபலிக்காவது மற்றப் பலிக்காவது ஒரு ஆட்டுக்குட்டியுடனே, ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கும் காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியைச் செலுத்தவேண்டும்.

5பானபலியாக காற்படி திராட்சைரசத்தையும் படைக்கவேண்டும்.

6ஆட்டுக்கடாவாக இருந்ததென்றால், பத்தில் இரண்டு பங்கானதும், ஒரு படியில் மூன்றில் ஒரு பங்காகிய எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லியமாவின் போஜனபலியையும்,

7பானபலியாக ஒரு படியில் மூன்றில் ஒரு பங்கு திராட்சைரசத்தையும் யெகோவாவுடைய நறுமண வாசனையான படைப்பாகப் படைக்கவேண்டும்.

8நீ சர்வாங்கதகனபலிக்காவது, விசேஷித்த பொருத்தனைபலிக்காவது, சமாதானபலிக்காவது, ஒரு காளையைக் யெகோவாவுக்குச் செலுத்த ஆயத்தப்படுத்தும்போது,

9அதனோடு பத்தில் மூன்றுபங்கானதும், அரைப்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியையும்,

10பானபலியாக அரைப்படி திராட்சைரசத்தையும், யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலியாகப் படைக்கவேண்டும்.

11“இந்தவிதமாகவே ஒவ்வொரு மாட்டுக்கும், ஆட்டுக்கடாவுக்கும், செம்மறியாட்டுக் குட்டிக்கும், வெள்ளாட்டுக் குட்டிக்கும் செய்து படைக்கவேண்டும்.

12நீங்கள் படைக்கிறவைகளின் எண்ணிக்கைக்குத்தகுந்தபடி, ஒவ்வொன்றிற்காகவும் இந்த முறையில் செய்யவேண்டும்.

13சொந்ததேசத்தில் பிறந்தவர்கள் யாவரும் யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலியைச் செலுத்தும்போது இந்த விதமாகவே செய்யவேண்டும்.

14“உங்களிடத்திலே தங்கியிருக்கிற அந்நியனாவது, உங்கள் நடுவிலே உங்களுடைய தலைமுறைதோறும் குடியிருக்கிறவனோ, யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி செலுத்தவேண்டுமானால், நீங்கள் செய்கிறபடியே அவனும் செய்யவேண்டும்.

15சபையாராகிய உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணம் இருக்கவேண்டும் என்பது உங்களுடைய தலைமுறைகளில் நிரந்தர கட்டளையாக இருக்கவேண்டும்; யெகோவாவுக்கு முன்பாக அந்நியனும் உங்களைப்போலவே இருக்கவேண்டும்.

16உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணமும் ஒரே கட்டளையும் இருக்கவேண்டும் என்று சொல்” என்றார்.

17பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:

18நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: “நான் உங்களை அழைத்துக்கொண்டுபோகிற தேசத்தில் நீங்கள் சேர்ந்து,

19தேசத்தின் ஆகாரத்தை சாப்பிடும்போது, யெகோவாவுக்கு ஏறெடுத்துப் படைக்கும் காணிக்கையைச் செலுத்தவேண்டும்.

20நீங்கள் பிசைந்த மாவினால் செய்த முதற்பலனாகிய அதிரசத்தை ஏறெடுத்துப் படைக்கவேண்டும்; போரடிக்கிற களத்தின் படைப்பை படைக்கிறதுபோல அதையும் ஏறெடுத்துப் படைக்கவேண்டும்.

21இப்படி உங்களுடைய தலைமுறைதோறும் உங்களுடைய பிசைந்த மாவின் முதற்பலனிலே யெகோவாவுக்குப் படைப்பை ஏறெடுத்துப் படைக்கவேண்டும். 1 அறியாமல் செய்த பாவத்திற்கான பலி

22“யெகோவா மோசேயினிடத்தில் சொன்ன இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படியும்,

23யெகோவா மோசேயைக்கொண்டு கட்டளைகொடுத்த நாள்முதற்கொண்டு அவர் உங்களுக்கும் உங்களுடைய சந்ததிகளுக்கும் நியமித்த எல்லாவற்றின்படியேயும் நீங்கள் செய்யாமல்,

24அறியாமல் தவறி நடந்தாலும், சபையாருக்குத் தெரியாமல் யாதொரு தப்பிதம் செய்தாலும், சபையார் எல்லோரும் யெகோவாவுக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு காளையையும், கட்டளையின்படி அதற்கேற்ற உணவுபலியையும், பானபலியையும், பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.

25அதினால் ஆசாரியன் இஸ்ரவேல் மக்களின் சபையனைத்திற்காகவும் பாவநிவிர்த்தி செய்யவேண்டும்; அது அறியாமையினால் செய்யப்பட்டதாலும், அதற்காக அவர்கள் யெகோவாவுக்குத் தகனபலியையும் பாவநிவாரணபலியையும் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்ததினாலும், அது அவர்களுக்கு மன்னிக்கப்படும்.

26அது அறியாமையினாலே மக்கள் யாவருக்கும் வந்தபடியால், அது இஸ்ரவேல் மக்களின் சபையனைத்திற்கும் அவர்களுக்குள்ளே தங்குகிற அந்நியனுக்கும் மன்னிக்கப்படும்.

27“ஒருவன் அறியாமையினால் பாவஞ்செய்தால், ஒருவயதுடைய வெள்ளாட்டைப் பாவநிவாரணபலியாகச் செலுத்தவேண்டும்.

28அப்பொழுது அறியாமையினால் பாவம்செய்தவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யும்படி யெகோவாவுடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யவேண்டும்; அப்பொழுது அவனுக்கு மன்னிக்கப்படும்.

29இஸ்ரவேல் மக்களாகிய உங்களில் பிறந்தவனுக்கும் உங்களுக்குள்ளே தங்கும் அந்நியனுக்கும், அறியாமையினால் பாவம்செய்தவனுக்கும், ஒரே பிரமாணம் இருக்கவேண்டும்.

30“அன்றியும் தேசத்திலே பிறந்தவர்களிலோ அந்நியர்களிலோ எவனாவது துணிகரமாக ஏதாவது ஒன்றைச்செய்தால், அவன் யெகோவாவை நிந்திக்கிறான்; அந்த ஆத்துமா தன்னுடைய மக்களில் இல்லாதபடி துண்டிக்கப்படவேண்டும்.

31அவன் யெகோவாவின் வார்த்தையை அசட்டைசெய்து, அவர் கற்பனையை மீறினபடியால், அந்த ஆத்துமா துண்டிக்கப்பட வேண்டும்; அவனுடைய அக்கிரமம் அவன்மேல் இருக்கும் என்று சொல்” என்றார். 1 ஓய்வு நாள் சட்டத்தை மீறியவனின் மரண தண்டனை

32இஸ்ரவேல் மக்கள் வனாந்திரத்தில் இருக்கும்போது, ஓய்வுநாளில் விறகுகளைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்கள்.

33விறகுகளைப் பொறுக்கின அந்த மனிதனைக் கண்டுபிடித்தவர்கள், அவனை மோசே ஆரோன் என்பவர்களிடத்திற்கும் சபையார் அனைவரிடத்திற்கும் கொண்டுவந்தார்கள்.

34அவனுக்குச் செய்யவேண்டியது இன்னதென்று சரியான தீர்ப்பு இல்லாதபடியால், அவனைக் காவலில் வைத்தார்கள்.

35“யெகோவா மோசேயை நோக்கி: அந்த மனிதன் நிச்சயமாகக் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லோரும் அவனை முகாமிற்குப் புறம்பே கல்லெறியவேண்டும் என்றார்.

36அப்பொழுது சபையார் எல்லோரும் யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவனை முகாமிற்குப் புறம்பே கொண்டுபோய்க் கல்லெறிந்தார்கள்; அவன் செத்தான். 1 ஆடையில் தொங்கல்கள்

37பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:

38“நீ இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் பேசி, அவர்கள் தங்களுடைய தலைமுறைதோறும் தங்களுடைய ஆடைகளின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி, ஓரத்தின் தொங்கலிலே இளநீல நாடாவைக் கட்டவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்.

39நீங்கள் பின்பற்றிச் சோரம்போகிற உங்களுடைய இருதயத்திற்கும் உங்களுடைய கண்களுக்கும் ஏற்க நடவாமல், அதைப் பார்த்து, யெகோவாவின் கற்பனைகளையெல்லாம் நினைத்து அவைகளின்படியே செய்யும்படி, அது உங்களுக்குத் தொங்கலாக இருக்கவேண்டும்.

40நீங்கள் என்னுடைய கற்பனைகளையெல்லாம் நினைத்து, அவைகளின்படியே செய்து, உங்களுடைய தேவனுக்குப் பரிசுத்தராக இருக்கும்படி அதைப் பார்க்கவேண்டும்.

41நான் உங்களுக்கு தேவனாக இருக்கும்படி, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த உங்களுடைய தேவனாகிய யெகோவா; நானே உங்களுடைய தேவனாகிய யெகோவா என்று சொல்” என்றார்.

← Numbers 14Read In The App, Free →Numbers 16 →

Study Numbers 15

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536