Numbers · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Numbers 18

1பின்பு யெகோவா ஆரோனை நோக்கி: “நீயும் உன்னுடன் உன்னுடைய மகன்களும் உன்னுடைய தகப்பன் வம்சத்தாரும் பரிசுத்த ஸ்தலத்தைப்பற்றிய அக்கிரமத்தைச் சுமக்கவேண்டும்; நீயும் உன்னுடன் உன்னுடைய மகன்களும் உங்கள் ஆசாரிய ஊழியத்தைப்பற்றிய அக்கிரமத்தைச் சுமக்க வேண்டும்.

2உன்னுடைய தகப்பனாகிய லேவியின் கோத்திரத்தாரான உன்னுடைய சகோதரர்களையும் உன்னோடே கூடியிருக்கவும் உன்னிடத்திலே சேவிக்கவும் அவர்களைச் சேர்த்துக்கொள்; நீயும் உன்னுடைய மகன்களுமோ சாட்சியின் கூடாரத்திற்குமுன்பு ஊழியம் செய்யவேண்டும்.

3அவர்கள் உன்னுடைய காவலையும் கூடாரம் அனைத்தின் காவலையும் காக்கவேண்டும்; ஆனாலும் அவர்களும் நீங்களும் சாகாதபடி, அவர்கள் பரிசுத்த ஸ்தலத்தின் பணிப்பொருட்களின் அருகிலும் பலிபீடத்தின் அருகிலும் சேராமல்,

4உன்னோடே கூடிக்கொண்டு, கூடாரத்தின் எல்லா வேலையையும் செய்ய, ஆசரிப்புக்கூடாரத்தின் காவலைக் காக்கவேண்டும்; அந்நியன் ஒருவனும் உங்களிடத்தில் சேரக்கூடாது.

5இஸ்ரவேல் மக்கள்மேல் இனிக் கடுங்கோபம் வராதபடி, நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தின் காவலையும் பலிபீடத்தின் காவலையும் காக்கவேண்டும்.

6ஆசரிப்புக்கூடாரத்தின் வேலையைச் செய்ய, யெகோவாவுக்குக் கொடுக்கப்பட்ட உங்கள் சகோதரர்களாகிய லேவியர்களை நான் இஸ்ரவேல் சந்ததியாரிலிருந்து பிரித்து, உங்களுக்கு பரிசாகக் கொடுத்தேன்.

7ஆகையால் நீயும் உன்னோடேகூட உன்னுடைய மகன்களும் பலிபீடத்திற்கும் திரைக்கு உட்புறத்திற்கும் அடுத்த எல்லாவற்றையும் செய்வதற்காக, உங்கள் ஆசாரிய ஊழியத்தைக் காத்துச் சேவிக்கவேண்டும்; உங்களுடைய ஆசாரிய ஊழியத்தை உங்களுக்கு பரிசாக அருளினேன்; அதைச் செய்யும்படி சேருகிற அந்நியன் கொலை செய்யப்படவேண்டும்” என்றார். 1 ஆசாரியர்கள் மற்றும் லேவியர்களின் காணிக்கை

8பின்னும் யெகோவா ஆரோனை நோக்கி: “இஸ்ரவேல் மக்கள் பரிசுத்தப்படுத்துகிறவைகளிலெல்லாம் எனக்கு ஏறெடுத்துப் படைக்கப்படும் படைப்புகளைக் காத்துக் கொண்டிருக்கிறீர்களே, அவைகளை உனக்குக் கொடுத்தேன்; அபிஷேகத்தினால் அவைகளை உனக்கும் உன் மகன்களுக்கும் நிரந்தர கட்டளையாகக் கொடுத்தேன்.

9மகா பரிசுத்தமானவைகளிலே, அக்கினிக்கு உட்படுத்தப்படாமல் உன்னுடையதாக இருப்பது எவையெனில், அவர்கள் எனக்குப் படைக்கும் எல்லாப் படைப்பும், எல்லா உணவுபலியும், எல்லாப் பாவநிவாரணபலியும், எல்லாக் குற்றநிவாரணபலியும், உனக்கும் உன்னுடைய மகன்களுக்கும் பரிசுத்தமாக இருக்கும்.

10பரிசுத்த ஸ்தலத்திலே அவைகளைச் சாப்பிடவேண்டும்; ஆண்மக்கள் யாவரும் அவைகளைச் சாப்பிடலாம்; அவைகள் உனக்குப் பரிசுத்தமாக இருப்பதாக.

11இஸ்ரவேல் மக்கள் ஏறெடுத்துப்படைக்கிறதும் அசைவாட்டுகிறதுமான அவர்களுடைய எல்லாக் காணிக்கைகளின் படைப்பும் உன்னுடையவைகளாக இருக்கும்; அவைகளை உனக்கும் உன்னுடைய மகன்களுக்கும் உன்னுடைய மகள்களுக்கும் நிரந்தர பங்காகக் கொடுத்தேன்; உன்னுடைய வீட்டிலே சுத்தமானவர்கள் எல்லோரும் அவைகளைச் சாப்பிடலாம்.

12அவர்கள் யெகோவாவுக்குக் கொடுக்கும் அவர்களுடைய முதற்பலன்களாகிய சிறந்த எண்ணெயையும், சிறந்த திராட்சைரசத்தையும், தானியத்தையும் உனக்கு உரியதாகக் கொடுத்தேன்.

13தங்களுடைய தேசத்தில் முதற் பழுத்த பலனில் அவர்கள் யெகோவாவுக்குக் கொண்டு வருவதெல்லாம் உனக்கு உரியதாகும்; உன்னுடைய வீட்டிலே சுத்தமாக இருப்பவர்கள் யாவரும் அவைகளைச் சாப்பிடலாம்.

14இஸ்ரவேலிலே சாபத்தீடாக நேர்ந்துகொள்ளப்பட்டதெல்லாம் உனக்கு உரியதாக இருக்கும்.

15மனிதரிலும் மிருகங்களிலும் அவர்கள் யெகோவாவுக்குச் செலுத்தும் எல்லா மிருகங்களுக்குள்ளே கர்ப்பந்திறந்து பிறக்கும் யாவும் உனக்கு உரியதாக இருக்கும்; ஆனாலும் மனிதரின் முதற்பேற்றை கொல்லப்படாத நியமத்தின்படி மீட்கவேண்டும்; தீட்டான மிருகஜீவனின் தலையீற்றையும் மீட்கவேண்டும்.

16மீட்கவேண்டியவைகள் ஒரு மாதத்திற்கு மேற்பட்டதானால், உன்னுடைய மதிப்புக்கு இசைய பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி ஐந்து சேக்கல் பணத்தாலே அவைகளை மீட்கவேண்டும்; ஒரு சேக்கல் இருபது கேரா + 18:16 55 கிராம்ஸ்.

17மாட்டின் தலையீற்றும், செம்மறியாட்டின் தலையீற்றும், வெள்ளாட்டின் தலையீற்றுமோ மீட்கப்படவேண்டாம்; அவைகள் பரிசுத்தமானவைகள்; அவைகளின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்து, அவைகளின் கொழுப்பைக் யெகோவாவுக்குச் சுகந்த வாசனையான தகனமாகத் தகனிக்கவேண்டும்.

18அசைவாட்டும் மார்புப்பகுதியைப்போலவும் வலது முன்னந்தொடையைப்போலவும் அவைகளின் இறைச்சியும் உன்னுடையதாகும்.

19இஸ்ரவேல் மக்கள் யெகோவாவுக்கு ஏறெடுத்துப் படைக்கிற பரிசுத்த படைப்புகளையெல்லாம் உனக்கும் உன்னுடைய மகன்களுக்கும் உன்னுடைய மகள்களுக்கும் நிரந்தர கட்டளையாகக் கொடுத்தேன்; யெகோவாவுடைய சந்நிதியில் இது உனக்கும் உன்னுடைய சந்ததிக்கும் என்றைக்கும் செல்லும் மாறாத உடன்படிக்கை” என்றார்.

20பின்னும் யெகோவா ஆரோனை நோக்கி: “அவர்களுடைய தேசத்தில் நீ ஒன்றையும் சுதந்தரித்துக்கொள்ளவேண்டாம், அவர்கள் நடுவே உனக்குப் பங்கு உண்டாயிருக்கவும் வேண்டாம்; இஸ்ரவேல் மக்கள் நடுவில் நானே உன்னுடைய பங்கும் உன்னுடைய சுதந்தரமுமாக இருக்கிறேன்.

21“இதோ, லேவியின் சந்ததி ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்கிற அவர்களுடைய வேலைக்காக, இஸ்ரவேலருக்குள்ளவை எல்லாவற்றிலும் தசமபாகத்தை அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்.

22இஸ்ரவேல் மக்கள் குற்றஞ்சுமந்து சாகாதபடி, இனி ஆசரிப்புக் கூடாரத்தைக் அருகில் வராமலிருக்க வேண்டும்.

23லேவியர்கள் மட்டும் ஆசரிப்புக் கூடாரத்தைச்சேர்ந்த வேலைகளைச் செய்யவேண்டும்; அவர்கள் தங்களுடைய அக்கிரமத்தைச் சுமப்பார்கள்; இஸ்ரவேல் மக்கள் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் இல்லை என்பது உங்களுடைய தலைமுறைதோறும் நிரந்தர கட்டளையாக இருக்கும்.

24இஸ்ரவேல் மக்கள் யெகோவாவுக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகிய தசமபாகத்தை லேவியர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்; ஆகையால் இஸ்ரவேல் மக்களின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரமில்லையென்று அவர்களுக்குச் சொன்னேன்” என்றார்.

25பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:

26“நீ லேவியரோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் மக்கள் கையில் வாங்கிக்கொள்ளும்படி நான் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தசமபாகத்தை நீங்கள் அவர்கள் கையில் வாங்கும்போது. தசமபாகத்தில் பத்தில் ஒரு பங்கைக் யெகோவாவுக்கு ஏறெடுத்துப்படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும்.

27நீங்கள் ஏறெடுத்துப் படைக்கும் இந்தப் படைப்பு களத்தின் தானியத்தைப்போலும், ஆலையின் இரசத்தைப்போலும் உங்களுக்கு எண்ணப்படும்.

28இப்படியே நீங்கள் இஸ்ரவேல் மக்கள் கையில் வாங்கும் தசமபாகமாகிய உங்களுடைய பங்குகளிலெல்லாம் நீங்களும் யெகோவாவுக்கு என்று ஒரு படைப்பை ஏறெடுத்துப் படைத்து, அந்தப் படைப்பை ஆசாரியனாகிய ஆரோனுக்குக் கொடுக்கவேண்டும்.

29உங்களுக்குக் கொடுக்கப்படுகிற ஒவ்வொரு காணிக்கையிலுமுள்ள சிறந்த பரிசுத்த பங்கையெல்லாம் யெகோவாவுக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும்.

30ஆதலால் நீ அவர்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: அதில் சிறந்ததை நீங்கள் ஏறெடுத்துப் படைக்கும்போது, அது களத்தின் வரத்திலும் ஆலையின் வரத்திலும் இருந்து எடுத்துச்செலுத்துகிறதுபோல லேவியர்களுக்கு எண்ணப்படும்.

31அதை நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எவ்விடத்திலும் சாப்பிடலாம்; அது நீங்கள் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு ஈடான உங்கள் சம்பளம்.

32இப்படி அதில் சிறந்ததை ஏறெடுத்துப் படைத்தீர்களானால், நீங்கள் அதற்காக பாவம் சுமக்கமாட்டீர்கள்; நீங்கள் சாகாதிருக்கும்படி, இஸ்ரவேல் மக்களின் பரிசுத்தமானவைகளைத் தீட்டுப்படுத்தக்கூடாது என்று சொல்” என்றார்.

← Numbers 17Read In The App, Free →Numbers 19 →

Study Numbers 18

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536