Numbers · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Numbers 32

1ரூபன், காத் சந்ததிக்கும் ஆடுமாடுகள் மிகவும் திரளாக இருந்தது; அவர்கள் யாசேர் தேசத்தையும் கீலேயாத் தேசத்தையும் பார்த்தபோது, அது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடமென்று கண்டார்கள்.

2ஆகையால் ரூபன் சந்ததியும் காத் சந்ததியும் வந்து, மோசேயையும் ஆசாரியனாகிய எலெயாசாரையும் சபையின் பிரபுக்களையும் நோக்கி:

3“யெகோவா இஸ்ரவேல் சபைக்கு முன்பாக முறியடித்த அதரோத், தீபோன், யாசேர், நிம்ரா, எஸ்போன், எலெயாலெ, சேபாம், நேபோ, பெயோன் என்னும் பட்டணங்களைச் சேர்ந்த நாடானது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடம்.

4உமது அடியார்களுக்கு ஆடுமாடுகள் உண்டு.

5“உம்முடைய கண்களில் எங்களுக்குத் தயவு கிடைத்ததானால், எங்களை யோர்தான் நதிக்கு அப்புறம் கடந்துபோகச்செய்வாராக; இந்த நாட்டை உமது அடியார்களுக்குக் சொந்த நிலமாக கொடுக்கவேண்டும்” என்றார்கள்.

6அப்பொழுது மோசே காத் சந்ததியையும் ரூபன் சந்ததியையும் நோக்கி: “உங்கள் சகோதரர்கள் யுத்தத்திற்குப் போகும்போது, நீங்கள் இங்கே இருப்பீர்களோ?

7யெகோவா இஸ்ரவேல் மக்களுக்கு கொடுத்த தேசத்திற்கு அவர்கள் போகாதபடி, நீங்கள் அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப்போகச்செய்கிறது ஏன்?

8அந்த தேசத்தைப் பார்ப்பதற்கு நான் உங்களுடைய தகப்பன்மார்களை காதேஸ்பர்னேயாவிலிருந்து அனுப்பினபோது அவர்களும் இப்படியே செய்தார்கள்.

9அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்கு வரை போய், அத்தேசத்தைப் பார்த்து வந்து, இஸ்ரவேல் மக்கள் யெகோவா தங்களுக்குக் கொடுத்த தேசத்திற்குப் போகாதபடி அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப்போகச்செய்தார்கள்.

10அதினால் யெகோவா அந்த நாளிலே கோபம் வந்தவராகி:

11உத்தமமாக என்னைப் பின்பற்றின கேனேசியனான எப்புன்னேயின் மகன் காலேபும், நூனின் மகன் யோசுவாவும் தவிர,

12எகிப்திலிருந்து வந்தவர்களில் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட மனிதர்களில் ஒருவரும் என்னை உத்தமமாகப் பின்பற்றாதபடியால், அவர்கள் நான் ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காண்பதில்லை என்று ஆணையிட்டிருக்கிறார்.

13அப்படியே யெகோவாவுடைய கோபம் இஸ்ரவேலின் மேல் வந்தது; யெகோவாவுடைய சமுகத்தில் தீங்குசெய்த அந்தச் சந்ததியெல்லாம் அழிந்துபோகும்வரை அவர்களை வனாந்திரத்திலே 40 வருடங்கள் அலையச்செய்தார்.

14இப்பொழுதும் இதோ இஸ்ரவேலர்களின் மேல் இருக்கும் யெகோவாவுடைய கோபத்தின் கடுமையை இன்னும் அதிகரிக்கச்செய்யும்படி, நீங்கள் உங்களுடைய தகப்பன்களின் இடத்திலே பாவமுள்ள பெருங்கூட்டமாக எழும்பியிருக்கிறீர்கள்.

15நீங்கள் அவரைவிட்டுப் பின்வாங்கினால், அவர் இன்னும் அவர்களை வனாந்திரத்தில் இருக்கச்செய்வார்; இப்படி நீங்கள் இந்த மக்களையெல்லாம் அழியச்செய்வீர்கள்” என்றான்.

16அப்பொழுது அவர்கள் அவன் அருகில் வந்து: “எங்களுடைய ஆடுமாடுகளுக்காகத் தொழுவங்களையும், எங்களுடைய பிள்ளைகளுக்காகப் பட்டணங்களையும் இங்கே கட்டுவோம்.

17நாங்களோ இஸ்ரவேலர்களுடைய ராணுவத்தை அவர்கள் இடத்திலே கொண்டுபோய்ச் சேர்க்கும்வரையும், யுத்தத்திற்கு ஆயத்தமாக தீவிரத்தோடு அவர்களுக்கு முன்பாக நடப்போம்; எங்களுடைய பிள்ளைகள் இத்தேசத்து மக்களின் பொருட்டு பாதுகாப்பான பட்டணங்களிலே குடியிருக்கக் கேட்டுக்கொள்ளுகிறோம்.

18இஸ்ரவேல் மக்கள் எல்லோரும் தங்கள்தங்கள் சுதந்தரத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும் வரைக்கும், நாங்கள் எங்களுடைய வீடுகளுக்குத் திரும்புவதில்லை.

19யோர்தானுக்கு இப்புறத்தில் கிழக்கே எங்களுக்குச் சுதந்தரம் உண்டானபடியினாலே, நாங்கள் அவர்களோடு யோர்தானுக்கு அக்கரையிலும், அதற்கு அப்புறத்திலும் சுதந்தரம் வாங்கமாட்டோம்” என்றார்கள்.

20அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: “நீங்கள் இந்த வார்த்தையின்படி செய்து, யெகோவாவுடைய சமுகத்தில் யுத்தத்திற்கு ஆயத்தமாகி,

21யெகோவா தம்முடைய எதிரிகளைத் தம்முடைய முகத்திற்கு முன்னின்று துரத்திவிடும்வரை, நீங்கள் எல்லோரும் அவருடைய சமுகத்தில் யுத்தத்திற்கு ஆயத்தமாக யோர்தானைக் கடந்து போவீர்களானால்,

22அந்த தேசம் யெகோவாவுக்கு முன்பாக கிடைத்தபின்பு, நீங்கள் திரும்பி வந்து, யெகோவாவுக்கு முன்பாகவும், இஸ்ரவேலர்களுக்கு முன்பாகவும், குற்றமில்லாமல் இருப்பீர்கள்; அதற்குப்பின்பு இந்த தேசம் யெகோவாவுக்கு முன்பாக உங்களுக்குச் சொந்தமாகும்.

23நீங்கள் இப்படிச் செய்யாமல்போனால், யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்தவர்களாக இருப்பீர்கள்; உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிக்கும் என்று நிச்சயமாக அறியுங்கள்.

24உங்களுடைய பிள்ளைகளுக்காகப் பட்டணங்களையும், உங்களுடைய ஆடுமாடுகளுக்காகத் தொழுவங்களையும் கட்டி, உங்களுடைய வாய்மொழியின்படியே செய்யுங்கள்” என்றான்.

25அப்பொழுது காத் சந்ததியும் ரூபன் சந்ததியும் மோசேயை நோக்கி: “எங்களுடைய ஆண்டவன் கட்டளையிட்டபடி உமது ஊழியக்காரராகிய நாங்கள் செய்வோம்.

26எங்களுடைய பிள்ளைகளும் எங்களுடைய மனைவிகளும், எங்களுடைய ஆடுமாடு முதலான எங்களுடைய எல்லா மிருகஜீவன்களோடும், இங்கே கீலேயாத்தின் பட்டணங்களில் இருப்பார்கள்.

27உமது ஊழியக்காரர்களாகிய நாங்களோ எங்களுடைய ஆண்டவன் சொன்னபடி, ஒவ்வொருவரும் யுத்தத்திற்கு ஆயத்தமாக, யெகோவாவுடைய சமுகத்தில் யுத்தத்திற்குப் போவோம்” என்றார்கள்.

28அப்பொழுது மோசே அவர்களுக்காக ஆசாரியனாகிய எலெயாசாருக்கும், நூனின் மகனாகிய யோசுவாவுக்கும், இஸ்ரவேல் மக்களுடைய கோத்திர பிதாக்களாகிய தலைவர்களுக்கும் கட்டளையிட்டு:

29“காத் சந்ததியும் ரூபன் சந்ததியும் அவரவர் யெகோவாவுடைய சமுகத்தில் யுத்தத்திற்கு ஆயத்தமாக உங்களோடுகூட யோர்தானைக் கடந்துபோனால், அந்த தேசம் உங்களுக்கு கிடைத்தபின்பு, அவர்களுக்குக் கீலேயாத் தேசத்தைச் சொந்தமாகக் கொடுக்கக்கடவீர்கள்.

30உங்களோடுகூட யுத்தவீரர்களாகக் கடந்துபோகாமல் இருந்தார்களேயானால், அவர்கள் உங்கள் நடுவே கானான் தேசத்திலே சுதந்தரம் அடையவேண்டும்” என்றான்.

31காத் சந்ததியும் ரூபன் சந்ததியும் மறுமொழியாக: “உம்முடைய ஊழியக்காரர்களாகிய நாங்கள் யெகோவா எங்களுக்குச் சொன்னபடியே செய்வோம்.

32யோர்தானுக்கு இக்கரையிலே எங்கள் சுதந்தரத்தின் சொந்தநிலம் எங்களுக்கு உரியதாகும்படி நாங்கள் யெகோவாவுடைய சமுகத்தில் யுத்தத்திற்கு ஆயத்தமாகி கானான் தேசத்திற்குப் போவோம்” என்றார்கள்.

33அப்பொழுது மோசே காத் சந்ததிக்கும், ரூபன் சந்ததிக்கும், யோசேப்பின் மகனாகிய மனாசேயின் பாதிக்கோத்திரத்தாருக்கும், எமோரியருடைய ராஜாவாகிய சீகோனின் ராஜ்ஜியத்தையும், பாசானுடைய ராஜாவாகிய ஓகின் ராஜ்ஜியத்தையும், அவைகளைச் சேர்ந்த தேசங்களையும் அவைகளின் எல்லையைச் சுற்றிலுமுள்ள பட்டணங்களையும் கொடுத்தான்.

34பின்பு காத் சந்ததியார் தீபோன், அதரோத் ஆரோவேர்,

35ஆத்ரோத், சோபான், யாசேர், யொகிபேயா,

36பெத்நிம்ரா, பெத்தாரன் என்னும் பாதுகாப்பான பட்டணங்களையும் ஆட்டுத்தொழுவங்களையும் கட்டினார்கள்.

37ரூபன் சந்ததியார் எஸ்போன், எலெயாலெ, கீரியத்தாயீம்,

38பெயர்கள் மாற்றப்பட்ட நேபோ, பாகால்மெயோன், சீப்மா என்பவைகளைக் கட்டி, தாங்கள் கட்டின பட்டணங்களுக்கு வேறு பெயர்களைக் கொடுத்தார்கள்.

39மனாசேயின் மகனாகிய மாகீரின் சந்ததி கீலேயாத்திற்குப் போய், அதைக் கட்டிக்கொண்டு, அதிலிருந்த எமோரியர்களைத் துரத்திவிட்டார்கள்.

40அப்பொழுது மோசே கீலேயாத்தை மனாசேயின் மகனாகிய மாகீருக்குக் கொடுத்தான்; அவர்கள் அதிலே குடியேறினார்கள்.

41மனாசேயின் மகனாகிய யாவீர் போய், அவர்களுடைய கிராமங்களைக் கட்டிக்கொண்டு, அவைகளுக்கு யாவீர் + 32:41 யாவீரின் கிராமங்கள். என்று பெயரிட்டான்.

42நோபாக் போய், கேனாத்தையும், அதின் கிராமங்களையும் கட்டிக்கொண்டு, அதற்குத் தன்னுடைய பெயரின்படி நோபாக் என்று பெயரிட்டான்.

← Numbers 31Read In The App, Free →Numbers 33 →

Study Numbers 32

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536