Ezekiel · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Ezekiel 12

1யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

2மனிதகுமாரனே, நீ கலகவீட்டாரின் நடுவிலே தங்கி இருக்கிறாய்; பார்க்கும்படி அவர்களுக்குக் கண்கள் இருந்தாலும் காணாமற்போகிறார்கள்; கேட்கும்படி அவர்களுக்குக் காதுகள் இருந்தாலும் கேட்காமற்போகிறார்கள்; அவர்கள் கலகம்செய்கிற மக்கள்.

3இப்போதும் மனிதகுமாரனே, நீ வேறு தேசத்திற்கு போகும்படி பயண பொருட்களை ஆயத்தப்படுத்தி, பகற்காலத்திலே அவர்களுடைய கண்களுக்கு முன்பாகப் பயணப்படு; உன்னுடைய இடத்தைவிட்டு வேறே இடத்திற்கு அவர்களுடைய கண்களுக்கு முன்பாகப் புறப்பட்டுப்போ; அவர்கள் கலகவீட்டார்களாக இருந்தாலும் ஒருவேளை சிந்தித்து உணருவார்கள்.

4சிறையிருப்புக்குப் போகிறவனைப்போல் உன்னுடைய பொருட்களை நீ பகற்காலத்திலே அவர்கள் கண்களுக்கு முன்பாக வெளியே வைத்து, நீ மாலையிலே அவர்கள் கண்களுக்கு முன்பாகச் சிறையிருப்புக்குப் போகிறவனைப்போல் புறப்படுவாயாக.

5அவர்களுடைய கண்களுக்கு முன்பாக நீ சுவரிலே துவாரமிட்டு, அதின் வழியாக அவைகளை வெளியே கொண்டுபோகவேண்டும்.

6அவர்களுடைய கண்களுக்கு முன்பாக அவைகளை உன்னுடைய தோளின்மேல் எடுத்து, மாலை நேரத்தில் வெளியே கொண்டுபோகவேண்டும்; நீ தேசத்தைப் பார்க்காதபடி உன்னுடைய முகத்தை மூடிக்கொள்; இஸ்ரவேல் மக்களுக்கு உன்னை அடையாளமாக்கினேன் என்றார்.

7எனக்குக் கட்டளையிட்டபடியே நான் செய்தேன்; சிறைப்பட்டுப்போகும்போது சாமான்களைக் கொண்டுபோவதுபோல என்னுடைய சாமான்களைப் பகற்காலத்தில் வெளியே வைத்தேன்; மாலையிலோ கையினால் சுவரிலே துவாரமிட்டு, மாலை நேரத்தில் அவைகளை வெளியே கொண்டுபோய், அவர்கள் கண்களுக்கு முன்பாக அவைகளைத் தோளின்மேல் எடுத்துக்கொண்டுபோனேன்.

8விடியற்காலத்திலே யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

9மனிதகுமாரனே, கலகம்செய்கிற மக்களாகிய இஸ்ரவேல் மக்கள் உன்னைப் பார்த்து: நீ செய்கிறது என்னவென்று உன்னைக் கேட்டார்கள் அல்லவா?

10இது எருசலேமில் இருக்கிற அதிபதியின்மேலும் அதின் நடுவில் இருக்கிற இஸ்ரவேல் மக்கள் அனைவரின்மேலும் சுமரும் பாரம் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று அவர்களிடத்தில் சொல்லு.

11நீ அவர்களை நோக்கி: நான் உங்களுக்கு அடையாளமாக இருக்கிறேன்; நான் செய்வது எப்படியோ, அப்படியே அவர்களுக்கும் செய்யப்படும்; சிறைப்பட்டுப் வேறு தேசத்திற்கு போவார்கள்.

12அவர்கள் நடுவில் இருக்கிற அதிபதி மாலைமறையும்போது தோளின்மேல் சுமைசுமந்து புறப்படுவான்; வெளியே சுமைகொண்டுபோகச் சுவரிலே துவாரமிடுவார்கள்; கண்களாலே அவன் தன்னுடைய தேசத்தைக் காணாதபடி தன்னுடைய முகத்தை மூடிக்கொள்வான்.

13நான் என்னுடைய வலையை அவன்மேல் வீசுவேன், அவன் என்னுடைய கண்ணியிலே பிடிபடுவான்; அவனைக் கல்தேயர்கள் தேசமாகிய பாபிலோனுக்குக் கொண்டுபோவேன்; அங்கே அவன் மரிப்பான்; ஆகிலும் அதைக் காணமாட்டான்.

14அவனுக்கு உதவியாக அவனைச் சுற்றிலும் இருக்கிற அனைவரையும் அவனுடைய எல்லா இராணுவங்களையும் நான் எல்லா திசைகளிலும் தூற்றி, அவர்கள் பின்னே வாளை உருவுவேன்.

15அப்படி நான் அவர்களை தேசங்களுக்குள்ளே தூற்றி, அவர்களை தேசங்களிலே சிதறடிக்கும்போது, நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.

16ஆனாலும் தாங்கள் போய்ச்சேரும் தேசங்களுக்குள்ளே தங்களுடைய அருவருப்புகளையெல்லாம் விவரிக்கும்படி, நான் அவர்களில் கொஞ்சம்பேரைப் பஞ்சத்திற்கும் பட்டயத்திற்கும் கொள்ளைநோய்க்கும் விலக்கி மீதியாக இருக்கச்செய்வேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள் என்று சொல் என்றார்.

17பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

18மனிதகுமாரனே, நீ உன்னுடைய அப்பத்தை நடுக்கத்துடன் சாப்பிட்டு, உன்னுடைய தண்ணீரைக் கலக்கத்தோடும் வருத்தத்தோடும் குடித்து,

19தேசத்திலுள்ள மக்ககளை நோக்கி: இஸ்ரவேல் தேசத்திலுள்ள எருசலேமின் மக்களைக் குறித்துக் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், தங்களுடைய அப்பத்தை வருத்தத்துடன் சாப்பிட்டு, தங்களுடைய தண்ணீரைப் பயத்துடன் குடிப்பார்கள்; அவர்களுடைய தேசத்துக் மக்களுடைய கொடுமையினால் அதிலுள்ளதெல்லாம் அழிய, அது பாழாகும்.

20குடியேறியிருக்கிற பட்டணங்கள் வனாந்திரங்களாகி, தேசம் பாழாய்ப்போகும்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.

21பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

22மனிதகுமாரனே, நாட்கள் நீடிக்கும், தரிசனம் எல்லாம் அவமாகும் என்று இஸ்ரவேல் தேசத்திலே வழங்கும் பழமொழி என்ன?

23ஆகையால் நீ அவர்களை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் இனி இஸ்ரவேலிலே இந்தப் பழமொழியைச் சொல்லி வராதபடி நான் அதை ஒழியச்செய்வேன்; நாட்களும் எல்லாத் தரிசனத்தின் பொருளும் அருகில் வந்தன என்று அவர்களுடன் சொல்லு.

24இஸ்ரவேல் மக்களின் நடுவில் இனிச் சகல கள்ளத்தரிசனமும் முகஸ்துதியான குறிசொல்லுதலும் இல்லாமற்போகும்.

25நான் யெகோவா, நான் சொல்லுவேன், நான் சொல்லும் வார்த்தை நிறைவேறும்; இனித் தாமதியாது; கலகமக்களே, உங்கள் நாட்களிலே நான் வார்த்தையைச் சொல்லுவேன், அதை நிறைவேறவும் செய்வேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

26பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

27மனிதகுமாரனே, இதோ, இஸ்ரவேல் மக்கள்: இவன் காண்கிற தரிசனம் நிறைவேற அநேக நாட்கள் ஆகும்; தூரமாக இருக்கிற காலங்களைக்குறித்து இவன் தீர்க்கதரிசனம் சொல்லுகிறான் என்கிறார்கள்.

28ஆகையால் என்னுடைய வார்த்தைகளில் ஒன்றுகூட இனித் தாமதிப்பதில்லையென்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நான் சொன்ன வார்த்தை நிறைவேறும் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று அவர்களுடன் சொல் என்றார்.

← Ezekiel 11Read In The App, Free →Ezekiel 13 →

Study Ezekiel 12

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748