Ezekiel · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Ezekiel 39

1இப்போதும் மனிதகுமாரனே, நீ கோகுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லிச் சொல்லவேண்டியது என்னவென்றால்: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார், மேசேக் தூபால் இனத்தார்களின் அதிபதியாகிய கோகே, இதோ, நான் உனக்கு விரோதமாக வருகிறேன்.

2நான் உன்னைத் திருப்பி உன்னை ஆறு துறடுகளால் இழுத்து, உன்னை வடபுறங்களிலிருந்து எழும்பவும் இஸ்ரவேல் மலைகளில் வரச்செய்து,

3உன்னுடைய வில்லை உன்னுடைய இடதுகையிலிருந்து தட்டிவிட்டு, உன்னுடைய அம்புகளை வலது கையிலிருந்து விழச்செய்வேன்.

4நீயும் உன்னுடைய எல்லா படைகளும் உன்னுடன் இருக்கிற மக்களும் இஸ்ரவேல் மலைகளில் விழுவீர்கள்; பிணந்தின்னுகிற எல்லாவித பறவைகளுக்கும் வெளியின் மிருகங்களுக்கும் உன்னை இரையாகக் கொடுப்பேன்.

5திறந்த வெளியில் விழுவாய்; நான் இதைச் சொன்னேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

6நான் மாகோகிடத்திலும் தீவுகளில் அலட்சியமாகக் குடியிருக்கிறவர்களிடத்திலும் நெருப்பை அனுப்புவேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.

7இந்தவிதமாக நான் என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலின் நடுவிலே என்னுடைய பரிசுத்த பெயரைத் தெரிவிப்பேன்; என்னுடைய பரிசுத்த பெயரை இனிப் பரிசுத்தக் குலைச்சலாக்கவிடமாட்டேன்; அதினால் நான் இஸ்ரவேலில் பரிசுத்தராகிய யெகோவா என்று அந்நியமக்கள் அறிந்துகொள்வார்கள்.

8இதோ, அது வந்து, அது நடந்தது என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நான் சொன்ன நாள் இதுவே.

9இஸ்ரவேல் பட்டணங்களின் குடிகள் வெளியேபோய், பெரிய கேடகங்களும், சிறியகேடகங்களும், வில்லுகளும், அம்புகளும், வளைதடிகளும், ஈட்டிகளுமாகிய ஆயதங்களை எடுத்து எரிப்பார்கள்; ஏழு வருடம் அவைகளை எடுத்து எரிப்பார்கள்.

10அவர்கள் வெளியிலிருந்து விறகு கொண்டுவராமலும் காடுகளில் வெட்டாமலும், ஆயுதங்களை எடுத்து எரிப்பார்கள்; அவர்கள் தங்களைக் கொள்ளையிட்டவர்களைக் கொள்ளையிட்டு, தங்களைச் சூறையாடினவர்களைச் சூறையாடுவார்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

11அந்த நாளில் இஸ்ரவேல் தேசத்திலே கடலுக்குக் கிழக்கே வழிபோக்கரர்களின் பள்ளத்தாக்கைப் புதைக்கிற இடமாக கோகுக்குக் கொடுப்பேன்; அது வழிப்போக்கர் மூக்கைப் பொத்திக்கொண்டுபோகச்செய்யும்; அங்கே கோகையும் அவனுடைய எல்லாச் படையையும் புதைத்து, அதை ஆமோன்கோகின் பள்ளத்தாக்கு என்பார்கள்.

12இஸ்ரவேல் மக்கள், தேசத்தைச் சுத்தம்செய்யும்படி அவர்களைப் புதைத்துமுடிக்க ஏழு மாதங்கள் ஆகும்.

13தேசத்தின் மக்களெல்லோரும் புதைத்துக்கொண்டிருப்பார்கள்; நான் மகிமைப்படும் அந்த நாளிலே அது அவர்களுக்குக் புகழ்ச்சியாக இருக்கும் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

14தேசத்தைச் சுத்தம்செய்வதற்காக அதில் கிடக்கும் மற்ற பிரேதங்களைப் புதைக்கும்படி எப்பொழுதும் தேசத்தில் சுற்றித்திரியும் மனிதர்களையும், சுற்றித்திரிகிறவர்களுடன் புதைக்கிறவர்களையும் தெரிந்து நியமிப்பார்கள்; ஏழு மாதங்கள் முடிந்தபின்பும் இவர்கள் தேடிக்கொண்டிருப்பார்கள்.

15தேசத்தில் சுற்றித்திரிகிறவர்கள் திரிந்துகொண்டிருப்பார்கள்; யாராவது ஒருவன் மனிதனின் எலும்பைக் காணும்போது புதைக்கிறவர்கள் அதை ஆமோன்கோகுடைய பள்ளத்தாக்கிலே புதைக்கும்வரை அதின் அருகிலே ஒரு அடையாளத்தை நாட்டுவான்.

16அந்த நகரத்திற்கு ஆமோனா என்று பெயரிடப்படும்; இந்தவிதமாக தேசத்தைச் சுத்தம் செய்வார்கள்.

17மனிதகுமாரனே, யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ எல்லாவித பறவைகளையும் வெளியில் இருக்கிற எல்லா மிருகங்களையும் நோக்கி: நீங்கள் ஏகமாகக் கூடிக்கொண்டு, இஸ்ரவேலின் மலைகளில் நான் உங்களுக்காகச் செய்யும் யாகமாகிய மகா யாகத்திற்குச் சுற்றிலுமிருந்து வந்து சேர்ந்து, இறைச்சியைச் சாப்பிட்டு இரத்தம் குடியுங்கள்.

18நீங்கள் பராக்கிரமசாலிகளின் இறைச்சியைச் சாப்பிட்டு பூமியினுடைய பிரபுக்களின் இரத்தத்தைக் குடிப்பீர்கள்; அவர்கள் எல்லோரும் பாசானிலே கொழுத்துப்போன ஆட்டுக்கடாக்களுக்கும், ஆட்டுக்குட்டிகளுக்கும் வெள்ளாட்டுக் கடாக்களுக்கும் காளைகளுக்கும் சமமானவர்கள்.

19நான் உங்களுக்காகச் செய்யும் யாகத்திலே நீங்கள் திருப்தியாகும்வரை கொழுப்பைச் சாப்பிட்டு, வெறியாகும்வரை இரத்தத்தைக் குடிப்பீர்கள்.

20இந்தவிதமாக என்னுடைய பந்தியிலே குதிரைகளையும், இரதவீரர்களையும், பலசாலிகளையும், எல்லா போர்வீரர்களையும் சாப்பிட்டு, திருப்தியாவீர்களென்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல்லு.

21இந்த விதமாக என்னுடைய மகிமையை நான் அந்நியதேசங்களுக்குள்ளே விளங்கச்செய்வேன்; நான் செய்த என்னுடைய நியாயத்தையும் அவர்கள்மேல் நான் வைத்த என்னுடைய கையையும் எல்லா தேசங்களும் காண்பார்கள்.

22அன்றுமுதல் என்றும் நான் தங்களுடைய தேவனாகிய யெகோவா என்று இஸ்ரவேல் மக்கள் அறிந்துகொள்வார்கள்.

23இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய அக்கிரமத்தினால் சிறைப்பட்டுப்போனார்கள் என்று அப்பொழுது அந்நியதேசத்தார் அறிந்துகொள்வார்கள்; அவர்கள் எனக்கு விரோதமாகத் துரோகம்செய்ததினால், என்னுடைய முகத்தை நான் அவர்களுக்கு மறைத்து, அவர்கள் சத்துருக்களின் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தேன்; அவர்கள் அனைவரும் வாளால் விழுந்தார்கள்.

24அவர்களுடைய அசுத்தத்திற்கு ஏற்றபடி, அவர்களுடைய மீறுதல்களுக்கு ஏற்றபடி, நான் அவர்களுக்குச் செய்து, என்னுடைய முகத்தை அவர்களுக்கு மறைத்தேன்.

25ஆதலால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்:

26அவர்கள் தங்களுடைய அவமானத்தையும், பயப்படுத்துவார் இல்லாமல், தாங்கள் சுகமாகத் தங்களுடைய தேசத்தில் குடியிருக்கும்போது எனக்கு விரோதமாகத் தாங்கள் செய்த எல்லாத் துரோகத்தையும் சுமந்து முடித்தபின்பு, நான் யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பி, இஸ்ரவேல் வம்சமனைத்திற்கும் இரங்கி, என்னுடைய பரிசுத்தப் பெயருக்காக வைராக்கியமாக இருப்பேன்.

27நான் அவர்களை மக்கள் கூட்டங்களிலிருந்து திரும்பிவரச்செய்து, அவர்களுடைய எதிரிகளின் தேசங்களிலிருந்து அவர்களைக் கூட்டிக்கொண்டு வந்து, திரளான தேசங்களுடைய கண்களுக்கு முன்பாக அவர்களுக்குள் நான் பரிசுத்தர் என்று விளங்கும்போது,

28தங்களை அந்நியதேசங்களிடத்தில் சிறைப்பட்டுப்போகச்செய்த நான் தங்களில் ஒருவரையும் அங்கே அப்புறம் வைக்காமல், தங்களைத் தங்களுடைய சொந்ததேசத்திலே திரும்பக் கூட்டிக்கொண்டு வந்தேன் என்பதினால், நான் தங்களுடைய தேவனாகிய யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.

29நான் இஸ்ரவேல் மக்கள்மேல் என்னுடைய ஆவியை ஊற்றினதினால் என்னுடைய முகத்தை இனி அவர்களுக்கு மறைக்கமாட்டேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்றார்.

← Ezekiel 38Read In The App, Free →Ezekiel 40 →

Study Ezekiel 39

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748