Ezekiel · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Ezekiel 33

1யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

2மனிதகுமாரனே, நீ உன்னுடைய மக்களுடன் பேசி, அவர்களுடன் சொல்லவேண்டியதாவது: நான் தேசத்தின்மேல் வாளை வரச்செய்யும்போது தேசத்தின் மக்கள் தங்களுடைய எல்லைகளிலுள்ள ஒருவனை அழைத்து, அவனைத் தங்களுக்குக் காவற்காரனாக வைத்தபின்பு,

3இவன் தேசத்தின்மேல் வாள் வருவதைக்கண்டு, எக்காளம் ஊதி, மக்களை எச்சரிக்கும்போது,

4எக்காளத்தின் சத்தத்தைக் கேட்கிறவன் அதைக் கேட்டும், எச்சரிக்கையாக இல்லாமல், வாள் வந்து அவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவனுடைய இரத்தப்பழி அவனுடைய தலையின்மேல் சுமரும்.

5அவனுடைய எக்காளத்தின் சத்தத்தைக் கேட்டும், எச்சரிக்கையாக இருக்கவில்லை; அவனுடைய இரத்தப்பழி அவன் மேலே சுமரும்; எச்சரிக்கையாக இருக்கிறவனோ தன்னுடைய உயிரைத் தப்புவித்துக்கொள்ளுவான்.

6காவற்காரன் வாள் வருவதைக் கண்டும், அவன் எக்காளம் ஊதாமலும் மக்கள் எச்சரிக்கப்படாமலும், வாள் வந்து அவர்களில் யாராவது ஒருவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவன் தன்னுடைய அக்கிரமத்திலே வாரிக்கொள்ளப்பட்டான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியைக் காவற்காரன் கையிலே கேட்பேன்.

7மனிதகுமாரனே, நான் உன்னை இஸ்ரவேல் மக்களுக்குக் காவற்காரனாக வைத்தேன்; ஆகையால் நீ என்னுடைய வாயினாலே வார்த்தையைக் கேட்டு, என்னுடைய பெயரினாலே அவர்களை எச்சரிப்பாயாக.

8நான் துன்மார்க்கனை நோக்கி: துன்மார்க்கனே, நீ சாகவே சாவாய் என்று சொல்லும்போது, நீ துன்மார்க்கனைத் தன்னுடைய துன்மார்க்கத்தில் இல்லாமலிருக்கும்படி எச்சரிக்காமற்போனால், அந்தத் துன்மார்க்கன் தன்னுடைய அக்கிரமத்திலே மரணமடைவான்: ஆனாலும் அவனுடைய இரத்தப்பழியை உன்னுடைய கையிலே கேட்பேன்.

9துன்மார்க்கன் தன்னுடைய வழியைவிட்டுத் திரும்பும்படி நீ அவனை எச்சரித்தும், அவன் தன்னுடைய வழியைவிட்டுத் திரும்பாமற்போனால், அவன் தன்னுடைய அக்கிரமத்திலே மரிப்பான்; நீயோ உன்னுடைய ஆத்துமாவைத் தப்புவிப்பாய்.

10மனிதகுமாரனே, நீ இஸ்ரவேல் மக்களை நோக்கி: எங்களுடைய துரோகங்களும் எங்களுடைய பாவங்களும் எங்கள்மேல் இருக்கிறது, நாங்கள் சோர்ந்துபோகிறோம், நாங்கள் பிழைப்பது எப்படியென்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.

11யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன்னுடைய வழியை விட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இஸ்ரவேல் மக்களே, உங்களுடைய பொல்லாத வழிகளை விட்டுத் திரும்புங்கள், திரும்புங்கள்; நீங்கள் ஏன் இறக்கவேண்டும் என்கிறார் என்று அவர்களுடன் சொல்லு.

12மனிதகுமாரனே, நீ உன்னுடைய மக்களை நோக்கி: நீதிமான் துரோகம்செய்கிற நாளிலே அவனுடைய நீதி அவனைக் காப்பாற்றுவதில்லை; துன்மார்க்கன் தன்னுடைய துன்மார்க்கத்தைவிட்டுத் திரும்புகிற நாளிலே அவன் தன்னுடைய அக்கிரமத்தினால் விழுந்து போவதுமில்லை; நீதிமான் பாவம்செய்கிற நாளிலே தன்னுடைய நீதியினால் பிழைப்பதுமில்லை.

13பிழைக்கவே பிழைப்பாய் என்று நான் நீதிமானுக்குச் சொல்லும்போது, அவன் தன்னுடைய நீதியை நம்பி, அநியாயம்செய்தால், அவனுடைய நீதியில் ஒன்றும் நினைக்கப்படுவதில்லை, அவன் செய்த தன்னுடைய அநியாயத்திலே மரிப்பான்.

14பின்னும் சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லும்போது, அவன் தன்னுடைய பாவத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியும்செய்து,

15துன்மார்க்கன் தான் வாங்கின அடைமானத்தையும் தான் கொள்ளையிட்ட பொருளையும் திரும்பக் கொடுத்துவிட்டு, அநியாயம் செய்யாதபடி ஜீவப்பிரமாணங்களில் நடந்தால், அவன் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான்.

16அவன் செய்த அவனுடைய எல்லாப் பாவங்களும் அவனுக்கு விரோதமாக நினைக்கப்படுவதில்லை; அவன் நியாயமும் நீதியும் செய்தான், பிழைக்கவே பிழைப்பான் என்று சொல்லு.

17உன்னுடைய மக்களோ, ஆண்டவருடைய வழி செம்மையானதல்ல என்கிறார்கள்; அவர்களுடைய வழியே செம்மையானதல்ல.

18நீதிமான் தன்னுடைய நீதியைவிட்டுத்திரும்பி, அநியாயம்செய்தால், அவன் அதினால் மரிப்பான்.

19துன்மார்க்கன் தன்னுடைய அக்கிரமத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியும் செய்தால், அவன் அவைகளினால் பிழைப்பான்.

20நீங்களோ, ஆண்டவருடைய வழி செம்மையானதல்ல என்கிறீர்கள், இஸ்ரவேல் மக்களே, நான் உங்களில் ஒவ்வொருவனையும் அவனவன் வழிகளின்படி நியாயம் தீர்ப்பேன் என்று சொல் என்றார். 1 எருசலேமின் வீழ்ச்சி விவரிக்கப்படுதல்

21எங்களுடைய சிறையிருப்பின் பன்னிரண்டாம் வருடம் பத்தாம் மாதம் ஐந்தாம் நாளிலே எருசலேமிலிருந்து தப்பின ஒருவன் என்னிடத்தில் வந்து: நகரம் அழிக்கப்பட்டது என்றான்.

22தப்பினவன் வருகிறதற்கு முந்தின மாலைவேளையிலே யெகோவாவுடைய கை என்மேல் அமர்ந்து, அவன் காலையில் என்னிடத்தில் வரும்வரை என்னுடைய வாயைத் திறந்திருக்கச்செய்தது; என்னுடைய வாய் திறக்கப்பட்டது, பின்பு நான் மவுனமாக இருக்கவில்லை.

23அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

24மனிதகுமாரனே, இஸ்ரவேல் தேசத்தின் பாழான இடங்களிலுள்ள குடிகள்: ஆபிரகாம் ஒருவனாக இருந்து, தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டான்; நாங்கள் அநேகராக இருக்கிறோம், எங்களுக்கு இந்த தேசம் சொந்தமாக கொடுக்கப்பட்டது என்று சொல்லுகிறார்கள்.

25ஆகையால், நீ அவர்களை நோக்கி: நீங்கள் இரத்தத்துடன் கூடியதைத் தின்று, உங்களுடைய அசுத்தமான சிலைகளுக்கு நேராக உங்களுடைய கண்களை ஏறெடுத்து, இரத்தத்தைச் சிந்தியிருக்கிறீர்கள், நீங்கள் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வீர்களோ?

26நீங்கள் உங்கள் வாளை நம்பிக்கொண்டு, அருவருப்பானதைச் செய்து, உங்களில் அவனவன் தன்தன் அயலான் மனைவியைத் தீட்டுப்படுத்துகிறீர்கள்; நீங்கள் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வீர்களோ என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல்லு.

27நீ அவர்களை நோக்கி: பாழான இடங்களில் இருக்கிறவர்கள் வாளால் விழுவார்கள்; வெளிகளில் இருக்கிறவனை மிருகங்களுக்கு இரையாக ஒப்புக்கொடுப்பேன்; கோட்டைகளிலும் குகைகளிலும் இருக்கிறவர்கள் கொள்ளைநோயால் மரிப்பார்கள்.

28நான் தேசத்தைப் பாழாக்குவேன்; அப்பொழுது அதினுடைய பெலத்தின் பெருமை ஒழிந்துபோகும்; அப்பொழுது இஸ்ரவேலின் மலைகள் கடந்துபோவாரில்லாமல் பாழாய்க்கிடக்கும்.

29அவர்கள் செய்த அவர்களுடைய எல்லா அருவருப்புகளுக்காக நான் தேசத்தைப் பாழாக்கும்போது, நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள், இதை என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல்லு.

30மேலும் மனிதகுமாரனே, உன்னுடைய மக்களின் சுவர் ஓரங்களிலும் வீட்டுவாசல்களிலும் உன்னைக்குறித்துப்பேசி, யெகோவாவிடத்திலிருந்து புறப்பட்ட வார்த்தை என்னவென்று கேட்போம் வாருங்கள் என்று ஒருவரோடொருவரும் சகோதரனுடன் சகோதரனும் சொல்லி,

31மக்கள் கூடிவருகிற வழக்கத்தின்படி உன்னிடத்தில் வந்து, உனக்கு முன்பாக என்னுடைய மக்களைப்போல் உட்கார்ந்து, உன்னுடைய வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவர்கள் அவைகளின்படி செய்கிறதில்லை; அவர்கள் தங்களுடைய வாயினாலே அன்பாய் இருக்கிறோம் என்று சொல்கிறார்கள், அவர்கள் இருதயமோ பொருளாசையைப் பின்பற்றிப்போகிறது.

32இதோ, நீ இனிய குரலும் கீதவாத்தியம் வாசிப்பதில் சாமர்த்தியமுமுடையவன் பாடும் இன்பமான பாட்டுக்குச் சமானமாக இருக்கிறாய்; அவர்கள் உன்னுடைய வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவைகளின்படி செய்யாமல்போகிறார்கள்.

33இதோ, அது வருகிறது, அது வரும்போது தங்கள் நடுவிலே ஒரு தீர்க்கதரிசி இருந்தான் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.

← Ezekiel 32Read In The App, Free →Ezekiel 34 →

Study Ezekiel 33

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748