Ezekiel · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Ezekiel 43

1பின்பு அவர் என்னை கிழக்கு திசைக்கு எதிர் வாசலாகிய வாசலுக்கு அழைத்துக்கொண்டுபோனார்.

2இதோ, இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கிழக்கு திசையிலிருந்து வந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்தின் இரைச்சலைப்போல இருந்தது; அவருடைய மகிமையினால் பூமி பிரகாசித்தது.

3நான் கண்ட இந்தத் தரிசனம் நகரத்தை அழிக்கவந்தபோது கண்ட தரிசனம்போல இருந்தது; இந்தத் தரிசனங்கள் கேபார் நதியின் அருகிலே நான் கண்டிருந்த தரிசனத்தைப்போலும் இருந்தது; நான் முகங்குப்புற விழுந்தேன்.

4யெகோவாவுடைய மகிமை கிழக்கு திசைக்கு எதிரான வாசல்வழியாக ஆலயத்திற்குள் நுழைந்தது.

5அப்பொழுது ஆவி என்னை எடுத்து, உள்முற்றத்திலே கொண்டுபோய்விட்டது; இதோ, யெகோவாவுடைய மகிமை ஆலயத்தை நிரப்பினது.

6அவர் ஆலயத்திலிருந்து என்னுடன் பேசுகிறதைக் கேட்டேன்; அந்த மனிதன் என்னுடைய அருகில் நின்றிருந்தார்.

7அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இது நான் இஸ்ரவேல் மக்களின் நடுவே என்றென்றைக்கும் வாழ்ந்திருக்கும் என்னுடைய சிங்காசனமும் என்னுடைய பாதபீடத்தின் இடமுமாக இருக்கிறது; இனி இஸ்ரவேல் வம்சத்தாரும் அவர்களுடைய ராஜாக்களும் என்னுடைய பரிசுத்தப் பெயரிலே தங்களுடைய மேடைகளில் தங்களுடைய வேசித்தனத்தினாலும் தங்களுடைய ராஜாக்களின் பிரேதங்களினாலும் தீட்டுப்படுத்துவதில்லை.

8அவர்கள் எனக்கும் தங்களுக்கும் நடுவே ஒரு சுவர் இருக்கும்படி, தங்களுடைய வாசற்படியை என்னுடைய வாசற்படி அருகிலும், தங்கவாசல் நிலைகளை என்னுடைய வாசல்நிலைகள் அருகிலும் சேர்த்து, என்னுடைய பரிசுத்தப் பெயரை தாங்கள் செய்த அருவருப்புகளினால் தீட்டுப்படுத்தினார்கள்; ஆகையால் என்னுடைய கோபத்திலே அவர்களை நாசமாக்கினேன்.

9இப்பொழுதும் அவர்கள் தங்களுடைய வேசித்தனத்தையும் தங்களுடைய ராஜாக்களின் பிரேதங்களையும் என்னுடைய சமுகத்திலிருந்து அகற்றினால் நான் என்றென்றைக்கும் அவர்கள் நடுவே வாழ்ந்திருப்பேன்.

10மனிதகுமாரனே, இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய அக்கிரமத்தினால் வெட்கப்படும்படி, நீ அவர்களுக்கு இந்த ஆலயத்தைக் காண்பி; அதின் அளவை அளக்கக்கடவர்கள்.

11அவர்கள் செய்த எல்லாவற்றிற்காக வெட்கப்பட்டால், அப்பொழுது இந்த ஆலயத்தின் ரூபத்தையும், அதின் அளவையும், முன்வாசல்களையும், பின் வாசல்களையும், எல்லா ஒழுங்குகளையும், எல்லாக் கட்டளைகளையும், எல்லா நியமங்களையும், எல்லாச் சட்டங்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி, அவர்கள் அதினுடைய எல்லா ஒழுங்குகளையும், எல்லா முறைமைகளையும் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய அதை அவர்கள் கண்களுக்கு முன்பாக எழுதிவை.

12ஆலயத்தினுடைய பிரமாணம் என்னவென்றால்: மலையின் உயரத்தின்மேல் சுற்றிலும் அதின் எல்லையெங்கும் மிகவும் பரிசுத்தமாக இருக்கும்; இதுவே ஆலயத்தினுடைய பிரமாணம். 1 பலிபீடம்

13முழங்களின்படி அளக்கும் பலிபீடத்தின் அளவுகளாவன: ஒரு கை முழமும் நான்கு விரற்கடையும் கொண்டது ஒரு முழமாகும்; அதின்படி சுற்றாதாரம், ஒரு முழ உயரமும், ஒரு முழ அகலமும், அதின் ஓரத்தைச் சுற்றிலுமுள்ள விளிம்பு ஒரு ஜாணுமாக இருக்கும்; இது பலிபீடத்தின் மேல்பக்கம்.

14தரையில் இருக்கிற ஆதாரம் துவங்கிக் கீழ்நிலைவரை இரண்டு முழமும், அகலம் ஒருமுழமும், சின்ன நிலைதுவங்கிப் பெரிய நிலைவரை நான்குமுழமும், அகலம் ஒருமுழமுமாக இருக்கும்.

15பலிபீடத்தின் சிகரம் நான்குமுழ உயரமுமாக இருக்கும்; பலிபீடத்தின் உச்சிக்குமேலே நான்கு கொம்புகள் இருக்கும்.

16பலிபீடத்தின் சிகரம் பன்னிரண்டு முழ நீளமும், பன்னிரண்டு முழ அகலமும் தன்னுடைய நான்கு பக்கங்களிலும் நான்கும் சதுரமுமாக இருக்கும்.

17அதின் நான்கு பக்கங்களிலுள்ள சட்டத்தின் நீளம் பதினான்கு முழமும், அகலம் பதினான்கு முழமும், அதைச் சுற்றிலுமிருக்கிற விளிம்பு அரை முழமும், அதற்கு ஆதாரமானது சுற்றிலும் ஒரு முழமுமாக இருக்கும்; அதின் படிகள் கிழக்குக்கு எதிராக இருக்கும் என்றார்.

18பின்னும் அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்; பலிபீடத்தை உண்டாக்கும் நாளிலே அதின்மேல் தகனபலியிடுகிறதற்கும் அதின்மேல் இரத்தம் தெளிப்பதற்குமான கட்டளைகள்:

19எனக்கு ஆராதனை செய்கிறதற்கு என்னிடத்தில் சேருகிற சாதோக்கின் சந்ததியாரான லேவி கோத்திரத்தாராகிய ஆசாரியர்களுக்கு நீ பாவநிவாரண பலியாக ஒரு இளங்காளையைக் கொடுப்பாயாக என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

20அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, அதின் நான்கு கொம்புகளிலும், சட்டத்தின் நான்கு முனைகளிலும், சுற்றியிருக்கிற விளிம்பிலும் பூசி பாவநிவிர்த்திசெய்து, அதைச் சுத்திகரித்து,

21பின்பு பாவநிவாரணத்தின் காளையைக் கொண்டுபோய், அதை ஆலயத்திலே பரிசுத்த ஸ்தலத்திற்கு வெளியே குறிக்கப்பட்ட இடத்திலே சுட்டெரிக்கவேண்டும்.

22இரண்டாம் நாளிலே பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணத்துக்காகப் பலியிடுவாயாக; அவர்கள் இளங்காளையினாலே பலிபீடத்தைச் சுத்திகரிப்பு செய்ததுபோலப் பாவநிவாரணம் செய்யவேண்டும்.

23நீ பாவநிவாரணத்தை முடித்தபின்பு, பழுதற்ற ஒரு இளங்காளையையும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும் மந்தையிலிருந்து எடுத்துப் பலியிடுவாயாக.

24அவைகளைக் யெகோவாவுடைய சந்நிதியில் பலியிடுவாயாக; ஆசாரியர்கள் அவைகளின்மேல் உப்பு தூவி, அவைகளைக் யெகோவாவுக்கு தகனபலியாக இடவேண்டும்.

25ஏழுநாள்வரைக்கும் அனுதினமும் பாவநிவாரணத்துக்காக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் படைப்பாயாக; பழுதற்றவைகளான இளங்காளையையும் மந்தையிலிருந்து எடுத்த ஆட்டுக்கடாவையும் படைப்பார்களாக.

26ஏழுநாள்வரைக்கும் பலிபீடத்தைப் பாவநிவிர்த்திசெய்து, அதைச் சுத்திகரித்து, பிரதிஷ்டை செய்யவேண்டும்.

27அந்த நாட்கள் முடிந்தபின்பு, எட்டாம் நாள்முதல் ஆசாரியர்கள் பலிபீடத்தின்மேல் உங்களுடைய தகனபலிகளையும் உங்களுடைய நன்றிபலிகளையும் படைப்பார்களாக; அப்பொழுது உங்களை அங்கீகரிப்பேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

← Ezekiel 42Read In The App, Free →Ezekiel 44 →

Study Ezekiel 43

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748