Jeremiah · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Jeremiah 15

1யெகோவா என்னை நோக்கி: மோசேயும் சாமுவேலும் என் முகத்திற்கு முன்பாக நின்றாலும், என் மனம் இந்த மக்கள் பட்சமாய்ச் சாராது; இவர்கள் என் முகத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்படி இவர்களைத் துரத்திவிடு.

2எங்கே புறப்பட்டுப்போவோம் என்று இவர்கள் உன்னைக் கேட்டால், நீ அவர்களை நோக்கி: மரணத்திற்கு ஏதுவானவர்கள் மரணத்திற்கும், பட்டயத்திற்கு ஏதுவானவர்கள் பட்டயத்திற்கும், பஞ்சத்திற்கு ஏதுவானவர்கள் பஞ்சத்திற்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவர்கள் சிறையிருப்புக்கும் நேராகப் போகவேண்டும் என்று யெகோவா சொல்கிறார் என்று சொல்லு.

3கொன்றுபோடப் பட்டயமும், பிடித்து இழுக்க நாய்களும், பட்சித்து அழிக்க ஆகாயத்துப் பறவைகளும், பூமியின் மிருகங்களும் ஆகிய நான்கு விதமான வாதைகளை நான் அவர்கள்மேல் வரக் கட்டளையிடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

4எசேக்கியாவின் மகனும், யூதாவின் ராஜாவுமாகிய மனாசே எருசலேமில் செய்தவைகளினிமித்தம் அவர்களைப் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் அலையச்செய்வேன்.

5எருசலேமே, யார் உன்மேல் இரங்குவார்கள்? யார் உன்மேல் பரிதாபப்படுவார்கள்? யார் உன்னிடத்திற்குத் திரும்பி, உன் சுகசெய்தியை விசாரிப்பார்கள்?

6நீ என்னைவிட்டுப் பின்வாங்கிப்போனாய்; ஆகையால், என் கையை உனக்கு விரோதமாய் நீட்டி, உன்னை அழிப்பேன்; நான் பொறுத்துப்பொறுத்து சோர்ந்துபோனேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

7தேசத்தின் வாசல்களில் அவர்களைத் தூற்றுக்கூடையால் தூற்றிப்போடுவேன்; என் மக்கள் தங்கள் வழிகளைவிட்டுத் திரும்பாததினால் நான் அவர்களைப் பிள்ளைகள் இல்லாதவர்களாக்கி அழிப்பேன்.

8கடற்கரை மணலைப்பார்க்கிலும் அதிக விதவைகள் அவர்களுக்குள் இருப்பார்கள்; பட்டப்பகலில் அழிக்கிறவனைத் தாயின்மேலும் பிள்ளைகளின்மேலும் வரச்செய்வேன்; அவர்கள்மேல் பட்டணத்தின் கலகத்தையும் பயங்கரங்களையும் விழச்செய்வேன்.

9ஏழு பிள்ளைகளைப் பெற்றவள் இளைத்துப்போகிறாள்; அவள் தன் உயிரை விட்டுவிட்டாள்; இன்னும் பகலாயிருக்கும்போது அவளுடைய சூரியன் மறைந்தது; வெட்கமும் அவமானமும் அடைந்தாள்; அவர்களில் மீதியாகிறவர்களையோ அவர்களுடைய எதிரிகளுக்கு முன்பாகப் பட்டயத்திற்கு ஒப்புக்கொடுப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

10என் தாயே, தேசத்துக்கெல்லாம் வழக்குக்கும் வாதிற்கும் உள்ளானவனாயிருக்க என்னை நீ பெற்றாயே; ஐயோ, நான் அவர்களுக்கு வட்டிக்குக் கொடுத்ததுமில்லை, அவர்கள் எனக்கு வட்டிக்குக் கொடுத்ததுமில்லை; ஆனாலும், எல்லோரும் என்னைச் சபிக்கிறார்கள்.

11உன்னில் மீதியாயிருப்பவர்கள் நன்மையடைவார்கள்; தீங்கின் காலத்திலும் நெருக்கத்தின் காலத்திலும் உனக்காக நான் பகைவனுக்கு எதிர்ப்பட்டு, உனக்குச் சகாயஞ்செய்வேன் என்று மெய்யாகவே சொல்லுகிறேன்.

12வடக்கேயிருந்து வரும் இரும்பையும் வெண்கலத்தையும் இரும்பு நொறுக்குமோ?

13உன்னுடைய எல்லாப் பாவங்களின் காரணமாக, உன்னுடைய எல்லா எல்லைகளிலும், நான் உன் சொத்துக்களையும், உன் பொக்கிஷங்களையும் கூலியில்லாமல் சூறையிடுவிப்பேன்.

14நீ அறியாத தேசத்தில் உன் எதிரிகள் வசமாக நான் உன்னைத் தாண்டிப்போகச்செய்வேன்; உங்கள்மேல் எரியப்போகிற நெருப்பை என் கோபத்தினால் ஏற்பட்டது என்று யெகோவா சொன்னார்.

15யெகோவாவே, நீர் அதை அறிவீர்; தேவரீர் என்னை நினைத்து, என்னை விசாரித்து, என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு எனக்காக நீதியைச் செய்யும்; உம்முடைய நீடிய பொறுமையினால் என்னை வாரிக்கொள்ளாதிரும்; நான் உம்முடைய காரணமாக நிந்தையைச் சகிக்கிறேன் என்று அறியும்.

16உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்திற்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, உம்முடைய பெயர் எனக்குச் சூட்டப்பட்டிருக்கிறது.

17நான் பரியாசக்காரருடைய கூட்டத்தில் உட்கார்ந்து மகிழ்ந்ததில்லை; உமது கைகளுக்காக தனித்து உட்கார்ந்தேன்; சோர்வினால் என்னை நிரப்பினீர்.

18என் வியாதி நீண்டகாலமாகவும், என் காயம் ஆறாத பெரிய புண்ணாகவும் இருப்பானேன்? நீர் எனக்கு நம்பப்படாத ஊற்றைப்போலவும், வற்றிப்போகிற தண்ணீரைப்போலவும் இருப்பீரோ?

19இதினால் நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்ப ஒழுங்குபடுத்துவேன்; என் முகத்திற்கு முன்பாக நிலைத்துமிருப்பாய்; நீ பயனற்றதிலிருந்து விலையேறப்பெற்றதைப் பிரித்தெடுத்தால், என் வாய் போலிருப்பாய்; நீ அவர்களிடத்தில் திரும்பாமல், அவர்கள் உன்னிடத்தில் திரும்புவார்களாக என்று யெகோவா சொல்லுகிறார்.

20உன்னை இந்த மக்களுக்கு முன்பாக பாதுகாப்பான வெண்கல மதிலாக்குவேன்; அவர்கள் உனக்கு விரோதமாகப் போர்செய்வார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னைப் பாதுகாப்பதற்காகவும், உன்னைக் காப்பாற்றுவதற்காகவும், நான் உன்னுடன் இருக்கிறேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

21நான் உன்னைப் பொல்லாதவர்களின் கையிலிருந்து காப்பாற்றி, உன்னைப் பலவான்களின் கைக்கு விலக்கி விடுவிப்பேன் என்கிறார்.

← Jeremiah 14Read In The App, Free →Jeremiah 16 →

Study Jeremiah 15

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122232425262728293031323334353637383940414243444546474849505152