Jeremiah · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Jeremiah 30

1யெகோவாவால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை:

2இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னுடன் சொன்ன எல்லா வார்த்தைகளையும் ஒரு புத்தகத்தில் எழுதிக்கொள்.

3இதோ, நாட்கள் வருமென்று யெகோவா சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலும் யூதாவுமாகிய என் மக்களுடைய சிறையிருப்பிலிருந்து விடுவித்து, நான் அவர்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்திற்கு அவர்களைத் திரும்பிவரச்செய்வேன்; அதை அவர்கள் சொந்தமாக்கிக்கொள்ளுவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

4இவைகள் யெகோவா இஸ்ரவேலையும் யூதாவையும் குறித்துச் சொன்னவார்த்தைகளே.

5யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: தத்தளிப்பின் சத்தத்தைக் கேட்கிறோம்; திகிலுண்டு, சமாதானமில்லை.

6ஆணாய்ப் பிறந்தவன் பிரசவிக்கிறதுண்டோ என்று கேட்டுப்பாருங்கள்; பிரசவிக்கிற பெண்ணைப்போல் ஆண்கள் அனைவரும் தங்கள் இடுப்புகளின்மேல் தங்கள் கைகளை வைத்திருக்கிறதையும், முகங்களெல்லாம் மாறி வெளுத்திருக்கிறதையும் நான் காண்கிறதென்ன?

7ஐயோ, அந்த நாள் பெரியது; அதற்கு இணையான நாளில்லை; அது யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்; ஆனாலும் அவன் அதற்கு நீங்கலாகி காப்பாற்றப்படுவான்.

8அந்நாளில் நான் அவன் நுகத்தை உன் கழுத்தின்மேல் இல்லாமல் உடைத்து, உன் கட்டுகளை அறுப்பேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; அந்நியர் இனி அவனை அடிமை படுத்துவதில்லை.

9தங்கள் தேவனாகிய யெகோவாவையும், நான் தங்களுக்கு எழுப்பப்போகிற தங்கள் ராஜாவாகிய தாவீதையுமே சேவிப்பார்கள்.

10ஆகையால் என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே, கலங்காதே என்று யெகோவா சொல்லுகிறார்; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியைத் தங்கள் சிறையிருப்பின் தேசத்திலும் இல்லாமல் காப்பாற்றுவேன்; யாக்கோபு திரும்பி வந்து அமர்ந்து சமாதானமாக இருப்பான்; அவனைத் தத்தளிக்கச்செய்கிறவனில்லை.

11உன்னைக் காப்பாற்றுவதற்காக நான் உன்னுடன் இருக்கிறேன் என்று யெகோவா சொல்லுகிறார்; உன்னைச் சிதறடித்த எல்லா தேசங்களையும் நான் அழிப்பேன்; உன்னையோ நான் அழிக்காமலும், முற்றிலும் தண்டிக்காமல், மட்டாகத் தண்டிப்பேன்.

12யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்; உன் புண் ஆறாததாயும் உன் காயம் கொடியதாகவும் இருக்கிறது.

13உன் காயங்களைக் கட்டும்படி உனக்காக ஏற்படுவாரில்லை; உன்னைச் சுகப்படுத்தும் மருந்துகளுமில்லை.

14உன் நேசர் அனைவரும் உன்னை மறந்தார்கள்; அவர்கள் உன்னைத் தேடார்கள்; திரளான உன் அக்கிரமத்தினாலும் உன் பாவங்கள் பெருகினதினாலும், எதிரி வெட்டுவதுபோலவும், கொடியவன் தண்டிக்கிறதுபோலவும் நான் உன்னைத் தண்டித்தேன்.

15உன் நொறுங்குதலினாலும் உன் வேதனையின் மிகுதியினாலும் நீ கூக்குரலிடுவானேன்? மிகுதியான உன் அக்கிரமத்தினாலும் பெருகிப்போன உன் பாவங்களினாலும் இப்படி உனக்குச் செய்தேன்.

16ஆதலால் உன்னை அழிக்கிறவர்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள்; உன் எதிரிகளெல்லோரும் சிறைப்பட்டுப்போவார்கள்; உன்னைச் சூறையாடுகிறவர்கள் சூறையாடப்படுவார்கள்; உன்னைக் கொள்ளையிடுகிற அனைவரையும் கொள்ளைக்கு ஒப்புக்கொடுப்பேன்.

17அவர்கள்: உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவள் என்று பெயரிட்டதினால், நான் உனக்கு ஆரோக்கியம்வரச்செய்து, உன் காயங்களை ஆற்றுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

18யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் யாக்கோபின் கூடாரங்களின் சிறையிருப்பைத் திருப்பி, அவன் குடியிருக்கும் இடங்களுக்கு இரக்கம்செய்வேன்; நகரம் தன் மண்மேட்டின்மேல் கட்டப்பட்டு, அரண்மனை முன்போல நிலைப்படும்.

19அவைகளிலிருந்து நன்றியும் ஆடல்பாடலின் சத்தமும் புறப்படும்; அவர்களை வர்த்திக்கச்செய்வேன், அவர்கள் குறுகிப்போவதில்லை; அவர்களை மகிமைப்படுத்துவேன், அவர்கள் சிறுமைப்படுவதில்லை.

20அவர்கள் பிள்ளைகள் முன்போலிருப்பார்கள்; அவர்கள் சபை எனக்கு முன்பாகத் திடப்படும்; அவர்களை ஒடுக்கின அனைவரையும் தண்டிப்பேன்.

21அவர்களுடைய பிரபு அவர்களில் ஒருவனாயிருக்க, அவர்களுடைய அதிபதி அவர்கள் நடுவிலிருந்து தோன்றுவார்; அவரை அருகில் வரச்செய்வேன், அவர் அருகில் வருவார், என்னிடத்தில் சேரும்படி தன் இருதயத்தை இணைக்கிற இவர் யார்? என்று யெகோவா சொல்லுகிறார்.

22நீங்கள் என் மக்களாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்.

23இதோ, கோராவாரிக் காற்றாகிய யெகோவாவுடைய பெருங்காற்று கடுமையாக எழும்பி, அடித்து, துன்மார்க்கருடைய தலையின்மேல் மோதும்.

24யெகோவா நம்முடைய இருதயத்தின் நினைவுகளை நடப்பித்து நிறைவேற்றுமளவும், அவருடைய கடுங்கோபம் தணியாது: கடைசி நாட்களில் அதை உணர்ந்துகொள்வீர்கள்.

← Jeremiah 29Read In The App, Free →Jeremiah 31 →

Study Jeremiah 30

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122232425262728293031323334353637383940414243444546474849505152