Jeremiah · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Jeremiah 36

1யோசியாவின் மகனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் அரசாட்சியின் நாலாம் வருடத்தில் யெகோவாவால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை என்னவென்றால்:

2நீ ஒரு புத்தகச்சுருளை எடுத்து, யோசியாவின் நாட்களில் நான் உன்னுடனே பேசின நாள் முதற்கொண்டு இந்நாள்வரை இஸ்ரவேலைக்குறித்தும், யூதாவைக்குறித்தும், எல்லா மக்களைக்குறித்தும் உன்னுடன் சொன்ன எல்லா வார்த்தைகளையும் அதில் எழுது.

3யூதாவின் மக்கள், அவரவர் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்புவதற்காகவும், தங்கள் அக்கிரமத்தையும் தங்கள் பாவத்தையும் நான் மன்னிப்பதற்காகவும், தங்களுக்கு நான் செய்ய நினைத்திருக்கிற தீங்குகளைக்குறித்து ஒருவேளை அவர்கள் கேட்பார்கள் என்றார்.

4அப்பொழுது எரேமியா நேரியாவின் மகனாகிய பாருக்கை அழைத்தான்; பாருக்கு என்பவன் யெகோவா எரேமியாவுடனே சொல்லிவந்த எல்லா வார்த்தைகளையும் அவன் வாய் சொல்ல ஒரு புத்தகச்சுருளில் எழுதினான்.

5பின்பு எரேமியா பாருக்கை நோக்கி: நான் அடைக்கப்பட்டவன்; நான் யெகோவாவுடைய ஆலயத்திற்குள் நுழையக்கூடாது.

6நீ உள்ளே நுழைந்து, என் வாய் சொல்ல நீ எழுதின சுருளிலுள்ள யெகோவாவுடைய வார்த்தைகளைக் யெகோவாவுடைய ஆலயத்தில் உபவாச நாளில் மக்களுடைய காதுகள் கேட்க வாசிப்பதுமின்றி, தங்கள் பட்டணங்களிலிருந்துவருகிற எல்லா யூதா கோத்திரத்தாரும் கேட்குமளவுக்கு அவைகளை வாசிப்பாயாக.

7ஒருவேளை அவர்கள் யெகோவாவுடைய முகத்திற்கு முன்பாகப் பணிந்து விண்ணப்பம்செய்து, அவரவர் தங்கள் பொல்லாத வழியை விட்டுத் திரும்புவார்கள்; யெகோவா இந்த மக்களுக்கு விரோதமாகச் சொல்லியிருக்கிற கோபமும் உக்கிரமும் பெரியது என்று சொன்னான்.

8அப்படியே நேரியாவின் மகனாகிய பாருக்கு அந்தப் புத்தகத்தில், யெகோவாவுடைய ஆலயத்தில் யெகோவாவுடைய வார்த்தைகளை வாசிப்பதற்கு எரேமியா தீர்க்கதரிசி தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்தான்.

9யோசியாவின் மகனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் அரசாட்சியின் ஐந்தாம் வருடத்து ஒன்பதாம் மாதத்தில், எருசலேமிலிருக்கிற எல்லா மக்களுக்கும், யூதாவின் பட்டணங்களிலிருந்து எருசலேமுக்கு வருகிற எல்லா மக்களுக்கும், யெகோவாவுக்கு முன்பாக உபவாசம் செய்யவேண்டுமென்று சொல்லப்பட்டது.

10அப்பொழுது பாருக்கு யெகோவாவுடைய ஆலயத்தின் மேல்முற்றத்தில், யெகோவாவுடைய ஆலயத்து வாசலின் நடைக்கு அருகிலுள்ள சாப்பானுடைய மகனாகிய கெமரியா என்னும் காரியதரிசியின் அறையில், அந்தப் புத்தகத்திலுள்ள எரேமியாவின் வார்த்தைகளை மக்கள் எல்லோரும் கேட்க வாசித்தான்.

11சாப்பானுடைய மகனாகிய கெமரியாவின் மகன் மிகாயா அந்தப் புத்தகத்திலுள்ள யெகோவாவுடைய வார்த்தைகளையெல்லாம் வாசிக்கக் கேட்டபோது,

12அவன் ராஜாவின் அரண்மனைக்குப்போய், காரியதரிசியின் அறையில் நுழைந்தான்; இதோ, அங்கே எல்லாப் பிரபுக்களும் காரியதரிசியாகிய எலிஷாமாவும் செமாயாவின் மகனாகிய தெலாயாவும், அக்போரின் மகனாகிய எல்நாத்தானும், சாப்பானின் மகனாகிய கெமரியாவும், அனனியாவின் மகனாகிய சிதேக்கியாவும், மற்ற எல்லாப் பிரபுக்களும் உட்கார்ந்திருந்தார்கள்.

13பாருக்கு மக்கள் கேட்கும் அளவுக்கு புத்தகத்திலுள்ளவைகளை வாசிக்கும்போது, தான் கேட்ட எல்லா வார்த்தைகளையும் மிகாயா அவர்களுக்குத் தெரிவித்தான்.

14அப்பொழுது எல்லாப் பிரபுக்களும் கூஷியின் மகனாகிய செலேமியாவின் மகனான நெத்தானியாவினுடைய மகனாயிருக்கிற யெகுதியைப் பாருக்கிடத்தில் அனுப்பி, மக்கள் கேட்க நீ வாசித்துக்கொண்டிந்த சுருளை உன் கையில் எடுத்துக்கொண்டுவா என்று சொல்லச் சொன்னார்கள்; ஆகையால், நேரியாவின் மகனாகிய பாருக்கு சுருளைத் தன் கையில் எடுத்துக்கொண்டு, அவர்களிடத்திற்கு வந்தான்.

15அவர்கள் அவனை நோக்கி: நீ உட்கார்ந்துகொண்டு, நாங்கள் கேட்க வாசியென்றார்கள்; அவர்கள் கேட்க வாசித்தான்.

16அப்பொழுது அவர்கள் எல்லா வார்த்தைகளையும் கேட்கும்போது பயப்பட்டவர்களாக ஒருவரையொருவர் பார்த்து, பாருக்கை நோக்கி: இந்த எல்லா வார்த்தைகளையும் ராஜாவுக்கு கண்டிப்பாக அறிவிப்போம் என்றார்கள்.

17அவன் வாய் சொல்ல, நீ இந்த வார்த்தைகளையெல்லாம் எவ்விதமாக எழுதினாய் அதை எங்களுக்குச் சொல் என்று பாருக்கைக் கேட்டார்கள்.

18அதற்குப் பாருக்கு: அவர் தமது வாயினால் இந்த எல்லா வார்த்தைகளையும் உச்சரித்து, என்னுடனே சொன்னார், நான் மையினால் புத்தகத்தில் எழுதினேன் என்றான்.

19அப்பொழுது பிரபுக்கள் பாருக்கை நோக்கி: நீயும் எரேமியாவும் போய் ஒளித்துக்கொள்ளுங்கள்; நீங்கள் இருக்கும் இடம் ஒருவருக்கும் தெரியக்கூடாது என்று சொல்லி,

20சுருளை காரியதரிசியாகிய எலிஷாமாவின் அறையில் வைத்து, ராஜாவினிடத்திற்கு அரண்மனையில் போய், ராஜாவின் காதுகளுக்கு இந்த வார்த்தைகளையெல்லாம் சொன்னார்கள்.

21அப்பொழுது ராஜா அந்தச் சுருளை எடுத்துக்கொண்டுவர யெகுதியை அனுப்பினான்; யெகுதி அதைக் காரியதரிசியாகிய எலிஷாமாவின் அறையிலிருந்து எடுத்துக்கொண்டுவந்து, ராஜா கேட்கவும், ராஜாவினிடத்தில் நின்ற எல்லாப் பிரபுக்களும் கேட்கவும் வாசித்தான்.

22ஒன்பதாம் மாதத்தில் ராஜா, குளிர்காலத்திற்குத் தங்கும் வீட்டில் உட்கார்ந்திருந்தான்; அவனுக்கு முன்பாக அடுப்பு மூட்டியிருந்தது.

23யெகுதி மூன்று நான்கு பத்திகளை வாசித்த பின்பு, ராஜா ஒரு சூரிக்கத்தியினால் அதை அறுத்து, சுருள் எல்லாவற்றையும் நெருப்பில் வெந்துபோக, அடுப்பிலிருந்த நெருப்பில் எறிந்துவிட்டான்.

24ராஜாவாயினும், அந்த வார்த்தைகளையெல்லாம் கேட்ட அவனுடைய எந்த ஊழியக்காரனும் பயப்படவுமில்லை, தங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ளவுமில்லை.

25எல்நாத்தானும், தெலாயாவும், கெமரியாவுமோ: அந்தச் சுருளைச் சுட்டெரிக்கவேண்டாம் என்று ராஜாவினிடத்தில் விண்ணப்பம் செய்தார்கள்; ஆனாலும், அவன் அவர்களுடைய சொல்லைக் கேட்காமல்,

26பாருக்கு என்னும் காரியதரிசியையும் எரேமியா தீர்க்கதரிசியையும் பிடிப்பதற்கு, ராஜா அம்மெலேகின் மகனாகிய யெரமெயேலுக்கும் + 36:26 பிரபு குலத்தில் ஒருவனாகிய, அஸ்ரியேலின் மகனாகிய செராயாவுக்கும், அப்தெயேலின் மகனாகிய செலேமியாவுக்கும் கட்டளை கொடுத்தான்; ஆனாலும் யெகோவா அவர்களை மறைத்தார்.

27ராஜா அந்தச் சுருளையும், அதில் எரேமியாவின் வாய் சொல்ல பாருக்கு எழுதியிருந்த வார்த்தைகளையும் சுட்டெரித்தபின்பு, எரேமியாவுக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டாகி, அவர்:

28நீ திரும்ப வேறொரு சுருளை எடுத்து, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் சுட்டெரித்த முதலாம் சுருளிலிருந்த வார்த்தைகளையெல்லாம் அதில் எழுது என்றார்.

29மேலும் நீ யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமை நோக்கி: பாபிலோன் ராஜா கண்டிப்பாக வருவான் என்பதையும், அவன் இந்த தேசத்தை அழித்து இதிலிருந்து மனிதரையும் மிருகங்களையும் அழிப்பான் என்பதையும், நீ அதில் எழுதியிருக்கிறதென்று சொல்லி, அந்தச் சுருளை நீ சுட்டெரித்தாயே என்று யெகோவா சொல்லுகிறார்.

30ஆகையால் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமைக் குறித்து: தாவீதின் சிங்காசனத்தின்மேல் உட்காருவதற்கு வம்சத்தில் ஒருவனும் இருக்கமாட்டான்; அவனுடைய சடலங்களோவென்றால், பகலின் வெப்பத்திற்கும் இரவின் குளிருக்கும் எறியப்பட்டுக்கிடக்கும்.

31நான் அவனிடத்திலும், அவன் சந்ததியினிடத்திலும், அவன் பிரபுக்களினிடத்திலும் அவர்கள் அக்கிரமத்தை விசாரித்து, அவன்மேலும் எருசலேமின் குடிமக்கள்மேலும், யூதா மனிதர்மேலும், நான் அவர்களுக்குச் சொன்னதும், அவர்கள் கேளாமற்போனதுமான தீங்குகளையெல்லாம் வரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

32அப்பொழுது எரேமியா வேறொரு சுருளை எடுத்து, அதை நேரியாவின் மகனாகிய பாருக்கு என்னும் காரியதரிசியினிடத்தில் கொடுத்தான்; அவன் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் நெருப்பால் சுட்டெரித்த புத்தகத்தின் வார்த்தைகளையெல்லாம், அதில் எரேமியாவின் வாய் சொல்ல எழுதினான்; இன்னும் அவைகளைப்போல அநேகம் வார்த்தைகளும் அவைகளுடன் சேர்க்கப்பட்டது.

← Jeremiah 35Read In The App, Free →Jeremiah 37 →

Study Jeremiah 36

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122232425262728293031323334353637383940414243444546474849505152