Jeremiah · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Jeremiah 7

1யெகோவாவால் எரேமியாவுக்கு உண்டான வசனம்:

2நீ யெகோவாவுடைய ஆலயத்தின் வாசலில் நின்று, அங்கே அறிவித்துச் சொல்லவேண்டிய வசனம் என்னவென்றால், யெகோவாவைப் பணிந்துகொள்ள இந்த வாசல்களுக்குள்ளே நுழைகிற யூத மக்களாகிய நீங்களெல்லோரும் யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்.

3இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்: உங்கள் வழிகளையும் உங்கள் செயல்களையும் சீர்ப்படுத்துங்கள், அப்பொழுது உங்களை இந்த இடத்தில் குடியிருக்கச்செய்வேன்.

4யெகோவாவின் ஆலயம், யெகோவாவின் ஆலயம், யெகோவாவின் ஆலயம் இதுவே என்று சொல்லி, பொய்வார்த்தைகளை நம்பிக்கொள்ளாதிருங்கள்.

5நீங்கள் உங்கள் வழிகளையும் உங்கள் செயல்களையும் நன்றாக ஒழுங்குபடுத்தி, நீங்கள் மனிதனுக்கும் மனிதனுக்குமுள்ள வழக்கை நியாயமாய்த் தீர்த்து,

6அந்நியதேசத்தாரையும், அனாதையானவனையும், விதவையையும் ஒடுக்காமலும், குற்றமில்லாத இரத்தத்தை இந்த இடத்தில் சிந்தாமலும்; உங்களுக்குக் கேடுண்டாக அந்நிய தெய்வங்களைப் பின்பற்றாமலும் இருப்பீர்களேயாகில்,

7அப்பொழுது நான் உங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசமாகிய இந்த இடத்தில் உங்களைச் சதாகாலமும் குடியிருக்கவும்செய்வேன்.

8இதோ, ஒன்றுக்கும் உதவாத பொய்வார்த்தைகளை நீங்கள் நம்புகிறீர்கள்.

9நீங்கள் திருடி, கொலைசெய்து, விபசாரம்செய்து, பொய்சாட்சி சொல்லி, பாகாலுக்குத் தூபங்காட்டி, நீங்கள் அறியாத அந்நிய தெய்வங்களைப் பின்பற்றி,

10அதன்பின்பு வந்து, என் பெயர் சூட்டப்பட்ட இந்த ஆலயத்தில் எனக்கு முன்பாக நின்று: இந்த அருவருப்புகளையெல்லாம் செய்வதற்காக விடுதலை பெற்றிருக்கிறோமென்று சொல்வீர்களோ?

11என் பெயர் சூட்டப்பட்ட இந்த ஆலயம் உங்கள் பார்வைக்குக் கள்ளர் குகையானதோ? இதோ, நானும் இதைக் கண்டேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

12நான் முதலில் என் பெயர் விளங்கச்செய்ய சீலோவிலுள்ள என் இடத்திற்கு நீங்கள் போய், இஸ்ரவேல் மக்களுடைய பொல்லாப்புக்காக நான் அதற்குச் செய்ததைப் பாருங்கள்.

13நீங்கள் இந்தச் செயல்களையெல்லாம் செய்தீர்கள், நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லி வந்திருந்தும், நீங்கள் கேளாமலும், நான் உங்களைக் கூப்பிட்டும், நீங்கள் உத்திரவுகொடாமலும் போனதினால்,

14என் பெயர் சூட்டப்பட்டதும், நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறதுமான இந்த ஆலயத்திற்கும், உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த இடத்திற்கும், நான் சீலோவுக்குச் செய்ததுபோலச் செய்வேன்.

15நான் உங்களுடைய எல்லாச் சகோதரருமாகிய எப்பிராயீம் சந்ததி அனைத்தையும் தள்ளிப்போட்டதுபோல, உங்களையும் என் முகத்தைவிட்டுத் தள்ளிப்போடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

16நீ இந்த மக்களுக்காக விண்ணப்பம் செய்யவேண்டாம்; அவர்களுக்காக மன்றாடவும் கெஞ்சவும் வேண்டாம், என்னிடத்தில் அவர்களுக்காகப் பரிந்துபேசவும் வேண்டாம், நான் நீ சொல்வதைக் கேட்பதில்லை.

17யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் அவர்கள் செய்கிறதை நீ காணவில்லையா?

18எனக்கு மனவேதனையுண்டாக அந்நிய தெய்வங்களுக்குப் பானபலிகளை ஊற்றுகிறார்கள்; அவர்கள் வானராணிக்குப் பணியாரங்களைச் சுடுவதற்காகப் பிள்ளைகள் விறகு பொறுக்குகிறார்கள், பிதாக்கள் நெருப்பு மூட்டுகிறார்கள், பெண்கள் மாப்பிசைகிறார்கள்.

19அவர்கள் எனக்கா மனவேதனையுண்டாக்குகிறார்கள்? தங்கள் முகங்கள் வெட்கத்திற்குள்ளாக அவர்கள் தங்களுக்கே அல்லவோ மனவேதனையுண்டாக்குகிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

20ஆதலால் இதோ, என் கோபமும் என் உக்கிரமும் இந்த இடத்தின்மேலும், மனிதர்மேலும், மிருகங்கள்மேலும், வெளியின் மரங்கள்மேலும், பூமியின் பழங்கள்மேலும் ஊற்றப்படும்; அது அணையாமல் எரியும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

21இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறதென்னவென்றால்: உங்கள் தகனபலிகளை மற்ற பலிகளுடன், இறைச்சியைச் சாப்பிடுங்கள்.

22நான் உங்கள் முற்பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்து வந்த நாளில், தகனபலியைக்குறித்தும், மற்ற பலிகளைக்குறித்தும் நான் அவர்களுடன் பேசினதையும் கட்டளையிட்டதையும் பார்க்கிலும்,

23என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் மக்களாயிருப்பீர்கள்; நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லாவழிகளிலும், நீங்கள் உங்களுக்கு நன்மையுண்டாவதற்காக நடவுங்கள் என்கிற விசேஷத்தையே அவர்களுக்குச் சொல்லிக் கட்டளையிட்டேன்.

24அவர்களோ அதைக் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும்போய், தங்கள் பொல்லாத இருதயத்தின் யோசனைகளின்படியும் கடினத்தின்படியும் நடந்து, முன்நோக்கியல்ல பின்நோக்கியே போனார்கள்.

25உங்கள் முற்பிதாக்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாள்முதல் இந்நாள்வரை நான் தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரையெல்லாம் தினந்தினம் உங்களிடத்திற்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தேன்.

26ஆனாலும் அவர்கள் என் சொல்லைக்கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும் போய், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, தங்கள் முற்பிதாக்களைப்பார்க்கிலும் அதிக பொல்லாப்பு செய்தார்கள்.

27நீ இந்த வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்குச் சொன்னாலும், அவர்கள் உன் சொல்லைக் கேட்கமாட்டார்கள்; நீ அவர்களை நோக்கிக் கூப்பிட்டாலும், அவர்கள் உனக்கு மறுஉத்திரவு கொடுக்கமாட்டார்கள்.

28ஆகையால் தங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்தைக் கேளாமலும், புத்தியை ஏற்றுக்கொள்ளாமலும் இருக்கிற மக்கள் இதுதான் என்றும், சத்தியம் அழிந்து, அது அவர்கள் வாயிலிருந்து இல்லாமல் போனதென்றும் அவர்களுக்குச் சொல்.

29நீ உன் தலைமயிரைச் சிரைத்து, எறிந்துவிட்டு, உயர்ந்த இடங்களில் புலம்பிக்கொண்டிரு; யெகோவா தமது கோபத்திற்கு ஏதுவான சந்ததியை வெறுத்துத் தள்ளிவிட்டார். 1 சங்காரப் பள்ளத்தாக்கு

30யூதா மக்கள் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; என் பெயர் சூட்டப்பட்ட ஆலயத்தைத் தீட்டுப்படுத்தத் தங்கள் அருவருப்புகளை அதில் வைத்தார்கள்.

31தங்கள் மகன்களையும் தங்கள் மகள்களையும் நெருப்பால் எரிப்பதற்காக, அவர்கள் இன்னோம் மகனின் பள்ளத்தாக்கிலுள்ள தோப்பேத்தின் மேடைகளைக் கட்டினார்கள்; அதை நான் கட்டளையிடவுமில்லை, அது என் மனதில் தோன்றவுமில்லை.

32ஆதலால், இதோ, நாட்கள் வருமென்று யெகோவா சொல்லுகிறார்; அப்பொழுது அது அப்புறம் தோப்பேத் என்றும், இன்னோம் மகனின் பள்ளத்தாக்கென்றும் சொல்லப்படாமல், அழிவின் பள்ளத்தாக்கென்று சொல்லப்படும்; தோப்பேத்தில் இடம் கிடைக்காமற்போகும்வரை பிணங்களை அடக்கம் செய்வார்கள்.

33இந்த மக்களின் பிணங்கள் ஆகாயத்தின் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் உணவாகும்; அவைகளை விரட்டுவாரும் இல்லாதிருப்பார்கள்.

34நான் யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் சிரிப்பின் சத்தத்தையும், மகிழ்ச்சியின் சத்தத்தையும், மணமகனின் சத்தத்தையும், மணமகளின் சத்தத்தையும் ஓயச்செய்வேன்; தேசம் அழியும்.

← Jeremiah 6Read In The App, Free →Jeremiah 8 →

Study Jeremiah 7

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122232425262728293031323334353637383940414243444546474849505152