Jeremiah · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Jeremiah 29

1எகொனியா என்னும் ராஜாவும், ராஜாவின் தாயாரும், பிரதானிகளும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள பிரபுக்களும், தச்சரும், கொல்லரும் எருசலேமைவிட்டுப் புறப்பட்டுப்போனபிறகு,

2எரேமியா தீர்க்கதரிசி சிறைப்பட்டுப்போன மூப்பர்களில் மீதியானவர்களுக்கும், ஆசாரியர்களுக்கும், தீர்க்கதரிசிகளுக்கும், நேபுகாத்நேச்சார் சிறைப்படுத்தி எருசலேமிலிருந்து பாபிலோனுக்குக் கொண்டுபோன எல்லா மக்களுக்கும் எழுதி,

3யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடத்தில் கொடுக்கும்படி சாப்பானின் மகனாகிய எலெயாசாரின் கையிலும், இல்க்கியாவின் மகனாகிய கெமரியாவின் கையிலும் கொடுத்து, எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு அனுப்பிய கடிதத்தின் விபரம்:

4இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா, தாம் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போகச்செய்த அனைவருக்கும் அறிவிக்கிறது என்னவென்றால்,

5நீங்கள் வீடுகளைக் கட்டி, குடியிருந்து, தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைச் சாப்பிடுங்கள்.

6நீங்கள் பெண்களை திருமணம்செய்து, மகன்களையும் மகள்களையும் பெற்று, உங்கள் மகன்களுக்குப் பெண்களைக்கொண்டு, உங்கள் மகள்களை ஆண்களுக்குக் கொடுங்கள்; இவர்களும் மகன்களையும் மகள்களையும் பெறட்டும்; நீங்கள் அங்கே குறுகாமல் பெருகி,

7நான் உங்களைச் சிறைப்பட்டுப்போகச்செய்த பட்டணத்தின் சமாதானத்தைத் தேடி, அதற்காகக் யெகோவாவிடம் விண்ணப்பம்செய்யுங்கள்; அதற்குச் சமாதானம் இருக்கும்போது உங்களுக்கும் சமாதானமிருக்கும்.

8மேலும், உங்கள் நடுவிலிருக்கிற உங்கள் தீர்க்கதரிசிகளும் உங்கள் குறிகாரரும் உங்களை ஏமாற்றாமல் பார்த்துக்கொள்ளுங்கள்; சொப்பனம் காணச்செய்கிற உங்கள் சொப்பனக்காரர் சொல்வதைக் கேட்காமலும் இருங்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

9அவர்கள் என் பெயரைச் சொல்லி உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள்; நான் அவர்களை அனுப்பவில்லை என்று யெகோவா சொல்லுகிறார்.

10பாபிலோனில் எழுபது வருடங்கள் முடிந்தபின்பு நான் உங்களைச் சந்தித்து, உங்களை இவ்விடத்திற்குத் திரும்பிவரச்செய்ய உங்கள்மேல் என் நல்வார்த்தையை நிறைவேறச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

11நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுப்பதற்காக நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று யெகோவா சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்திற்கு உகந்த நினைவுகளே.

12அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு, என்னை நோக்கி விண்ணப்பம்செய்வீர்கள்; நான் உங்கள் விண்ணப்பத்தை கேட்பேன்.

13உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடுவீர்கள் என்றால், என்னைத் தேடும்போது கண்டுபிடிப்பீர்கள்.

14நான் உங்களுக்குக் காணப்படுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்; நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பி, நான் உங்களைத் துரத்திவிட்ட எல்லா தேசங்களிலும் எல்லா இடங்களிலுமிருந்து உங்களைச் சேர்த்து, நான் உங்களை விலக்கியிருந்த இடத்துக்கே உங்களைத் திரும்பிவரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

15யெகோவா எங்களுக்குப் பாபிலோனிலும் தீர்க்கதரிசிகளை எழுப்பினார் என்று சொல்லுகிறீர்கள்.

16ஆனால், தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிற ராஜாவைக் குறித்தும், உங்களுடன் சிறையிருப்பில் புறப்பட்டுப்போகாமல் இந்த நகரத்தில் குடியிருக்கிற உங்கள் சகோதரராகிய எல்லா மக்களைக்குறித்தும்,

17இதோ, நான் பட்டயத்தையும், பஞ்சத்தையும், கொள்ளைநோயையும் அவர்களுக்குள் அனுப்புவேன் என்று யெகோவா சொல்லுகிறார்; சாப்பிடக்கூடாத கெட்டுப்போன அத்திப்பழங்களுக்கு அவர்களை ஒப்பாக்குவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

18அவர்கள் என் வார்த்தைகளைக் கேளாமற்போனபடியால், நான் அவர்களைப் பட்டயத்தாலும், பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் பின்தொடர்ந்து, அவர்களைப் பூமியிலுள்ள எல்லா தேசங்களிலும் அலைந்து திரிகிறவர்களாகவும், நான் அவர்களைத் துரத்துகிற எல்லா மக்களிடத்திலும் சாபமாகவும், பாழாகவும், சத்தமிடுதலுக்கு இடமாகவும், நிந்தையாகவும் வைப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

19நான் உங்களிடத்திற்குத் தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரை ஏற்கனவே அனுப்பிக்கொண்டேயிருந்தும், நீங்கள் செய்தியைக் கேட்காமற்போனீர்களே என்று யெகோவா சொல்லுகிறார்.

20இப்போதும் சிறையிருக்கும்படி நான் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு அனுப்பிவிட்ட நீங்களெல்லோரும் யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்.

21என் பெயரைச் சொல்லி, உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம்சொல்லுகிற கொலாயாவின் மகனாகிய ஆகாபையும், மாசெயாவின் மகனாகிய சிதேக்கியாவையும் குறித்து: இதோ, நான் அவர்களைப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலே ஒப்புக்கொடுக்கிறேன்; அவன் அவர்களை உங்கள் கண்களுக்கு முன்பாகக் கொன்றுபோடுவான்.

22பாபிலோன் ராஜா நெருப்பினால் எரித்துப்போட்ட சிதேக்கியாவுக்கும் ஆகாபுக்கும் யெகோவா உன்னைச் சமமாக்குவாராக என்று, அவர்களைக்குறித்து ஒரு சாபவார்த்தை பாபிலோனில் சிறையிருக்கிற யூதா அனைவருக்குள்ளும் வழங்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

23அவர்கள் இஸ்ரவேலில் புத்தியில்லாத காரியத்தைச் செய்து, தங்கள் அயலாருடைய மனைவிகளுடன் விபசாரம்செய்து, நான் அவர்களுக்குச் சொல்லாத பொய்யான வார்த்தையை என் பெயரைச் சொல்லி சொன்னார்கள்; நான் அதை அறிவேன்; அதற்கு நானே சாட்சி என்று யெகோவா சொல்லுகிறார் என்று எழுதினான். 1 செமாயாவுக்குச் செய்தி

24பின்னும் யெகோவா என்னை நோக்கி: நீ நெகெலாமியனாகிய செமாயாவுக்கும் சொல்லியனுப்பவேண்டியது என்னவென்றால்:

25நீ எருசலேமிலிருக்கிற எல்லா மக்களுக்கும், மாசெயாவின் மகனாகிய செப்பனியா என்னும் ஆசாரியனுக்கும், மற்ற ஆசாரியர்களுக்கும் உன் பெயரில் கடிதத்தை எழுதியனுப்பினது என்னவென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

26இவனுக்கு அவன் எழுதியிருந்த கடிதமாவது: நீங்கள் யெகோவாவுடைய ஆலயத்தின் விசாரிப்புக்காரனாக இருப்பதற்கும், பைத்தியம் பிடித்தவனைப்போல் தன்னைத் தீர்க்கதரிசியாக்கிக்கொள்ளுகிறவனாகிய மனிதனையும் நீர் காவல் அறையிலும் தொழுவிலும் போடுவதற்கும், யெகோவா உம்மை ஆசாரியனாயிருந்த யொயதாவின் இடத்தில் ஆசாரியனாக வைத்தாரே.

27இப்போதும் உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லிவருகிற ஆனதோத் ஊரானாகிய எரேமியாவை நீர் கடிந்துகொள்ளாமற்போனதென்ன?

28இந்தச் சிறையிருப்பு நீண்டகாலமாக இருக்கும்; நீங்கள் வீடுகளைக்கட்டி, அவைகளில் குடியிருந்து, தோட்டங்களை நாட்டி, அவைகளின் பழங்களைச் சாப்பிடுங்களென்று பாபிலோனில் இருக்கிற எங்களுக்குச் சொல்லியனுப்பினானென்று எழுதியிருந்தான்.

29இந்தக் கடிதத்தைச் செப்பனியா என்கிற ஆசாரியன் எரேமியா தீர்க்கதரிசியின் காதுகள் கேட்க வாசித்தான்.

30ஆகவே, யெகோவாவுடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி அவர்:

31சிறையிருக்கிற அனைவருக்கும் நீ சொல்லியனுப்பவேண்டியது என்னவென்றால்: நெகெலாமியனாகிய செமயாவைக்குறித்து, யெகோவா: செமாயாவை நான் அனுப்பாதிருந்தும், அவன் உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லி, உங்களைப் பொய்யை நம்பச்செய்கிறதினால்,

32இதோ, நான் நெகெலாமியனாகிய செமாயாவையும், அவன் சந்ததியையும் தண்டிப்பேன்; இந்த மக்கள் நடுவில் குடியிருப்பவன் ஒருவனும் அவனுக்கு இல்லாதிருப்பான்; நான் என் மக்களுக்குச் செய்யும் நன்மையை அவன் காண்பதில்லை என்று யெகோவா சொல்லுகிறார்; யெகோவாவுக்கு விரோதமாக எதிர்த்துப் பேசினான் என்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

← Jeremiah 28Read In The App, Free →Jeremiah 30 →

Study Jeremiah 29

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122232425262728293031323334353637383940414243444546474849505152