Jeremiah · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Jeremiah 31

1அக்காலத்தில் நான் இஸ்ரவேலின் வம்சங்களுக்கெல்லாம் தேவனாயிருப்பேன், அவர்கள் என் மக்களாயிருப்பார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

2பட்டயத்திற்குத் தப்பியிருந்த, மக்கள் வனாந்திரத்தில் இரக்கம்பெற்றார்கள்; இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிடப்போகிறேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

3பூர்வகாலமுதல் யெகோவா எனக்குக் காட்சியளித்தார் என்பாய்; ஆம் ஆதி அன்பினால் உன்னை நேசித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்கிறேன்.

4இஸ்ரவேல் என்னும் கன்னிகையே, மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன், நீ கட்டப்படுவாய்; மறுபடியும் நீ மேளவாத்தியத்தோடும் ஆடல்பாடல் செய்கிறவர்களின் களிப்புள்ள கூட்டத்தோடும் புறப்படுவாய்.

5மறுபடியும் சமாரியாவின் மலைகளில் திராட்சைத்தோட்டங்களை நாட்டுவாய்; நாட்டுகிறவர்கள் அவைகளை நாட்டி, அதின் பலனை அநுபவிப்பார்கள்.

6எழுந்திருங்கள், சீயோனில் நம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எப்பிராயீமின் மலைகளிலுள்ள காவற்காரர் சொல்லும் காலம் வரும்.

7யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: யாக்கோபுக்காக மகிழ்ச்சியாய் கெம்பீரித்து, தேசங்களுடைய தலைவருக்காக ஆர்ப்பரியுங்கள்; சத்தத்தைக் கேட்கச்செய்து, துதித்து: யெகோவாவே, இஸ்ரவேலில் மீதியான உமது மக்களைக் காப்பாற்றும் என்று சொல்லுங்கள்.

8இதோ, நான் அவர்களை வடதேசத்திலிருந்து வரவழைத்து, அவர்களைப் பூமியின் எல்லைகளிலிருந்து அழைத்துவருவேன்; குருடரும், சப்பாணிகளும், கர்ப்பவதிகளும், பிள்ளைத்தாய்ச்சிகளும் அவர்களில் இருப்பார்கள்; திரளான கூட்டமாக இவ்விடத்திற்குத் திரும்புவார்கள்.

9அழுகையுடனும் விண்ணப்பங்களுடனும் வருவார்கள்; அவர்களை வழிநடத்துவேன்; அவர்களைத் தண்ணீருள்ள நதியருகில் தவறாத செம்மையான வழியில் நடக்கச்செய்வேன்; இஸ்ரவேலுக்கு நான் தகப்பனாயிருக்கிறேன், எப்பிராயீம் என் மூத்தமகனாயிருக்கிறான்.

10தேசங்களே, நீங்கள் யெகோவாவுடைய வார்த்தையைக்கேட்டு, தூரத்திலுள்ள தீவுகளில் அறிவித்து, இஸ்ரவேலைச் சிதறடித்தவர் அதைச் சேர்த்துக்கொண்டு, ஒரு மேய்ப்பன் தன் மந்தையைக் காப்பதுபோல அதைக் காப்பார் என்று சொல்லுங்கள்.

11யெகோவா யாக்கோபை மீட்டு, அவனிலும் பலவானுடைய கைக்கு அவனை விலக்கி விடுவிக்கிறார்.

12அவர்கள் வந்து, சீயோனின் உச்சியில் கெம்பீரித்து, யெகோவா அருளும் கோதுமை, திராட்சைரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் என்பவைகளாகிய இந்த நன்மைகளுக்காக ஓடிவருவார்கள்; அவர்களுடைய ஆத்துமா நீர்ப்பாய்ச்சலான தோட்டம்போலிருக்கும்; அவர்கள் இனித் தொய்ந்துபோவதில்லை.

13அப்பொழுது கன்னிகைகளும், வாலிபரும், முதியோருடன் ஆனந்தக்களிப்பாய் மகிழுவார்கள்; நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன்.

14ஆசாரியர்களின் ஆத்துமாவைக் கொழுமையானவைகளால் பூரிப்பாக்குவேன்; என் மக்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

15ராமாவில் புலம்பலும் கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, தன் பிள்ளைகள் இல்லாததினால் அவைகளுக்காக ஆறுதல் அடையாதிருக்கிறாள் என்று யெகோவா சொல்லுகிறார்.

16நீ அழாமல் உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர்விடாமல் உன் கண்களைக் காத்துக்கொள் என்று யெகோவா சொல்லுகிறார்; உன் செயல்களுக்குப் பலனுண்டென்று யெகோவா சொல்லுகிறார்; அவர்கள் எதிரியின் தேசத்திலிருந்து திரும்பிவருவார்கள்.

17உன் முடிவைப்பற்றி உனக்கு நம்பிக்கையுண்டு; உன் பிள்ளைகள் தங்கள் தேசத்திற்குத் திரும்பிவருவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

18நீர் என்னைத் தண்டித்தீர், நான் பணியாத மாடுபோல் அடிக்கப்பட்டேன்; என்னைத் திருப்பும், அப்பொழுது திருப்பப்படுவேன்; நீரே என் தேவனாகிய யெகோவா.

19நான் திரும்பினபின்பு மனவேதனைப்பட்டுக்கொண்டிருக்கிறேன், நான் என்னை அறிந்துகொண்டதற்குப் பின்பு மார்பில் + 31:19 விலாவில் அடித்துக்கொண்டிருக்கிறேன், வெட்கி தலைகுனிந்துகொண்டும் இருக்கிறேன், என் இளவயதின் நிந்தையைச் சுமந்துவருகிறேன் என்று எப்பிராயீம் துக்கித்துப் புலம்பிக்கொண்டிருக்கிறதை நிச்சயமாய்க் கேட்டேன்.

20எப்பிராயீம் எனக்கு அருமையான மகன் அல்லவோ? அவன் எனக்குப் பிரியமான பிள்ளையல்லவோ? அவனுக்கு விரோதமாய்ப் பேசினதுமுதல் அவனை நினைத்துக்கொண்டே இருக்கிறேன்; ஆகையால் என் உள்ளம் அவனுக்காகக் கொதிக்கிறது; அவனுக்கு உருக்கமாய் இரங்குவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

21உனக்கு ஞாபகக்குறிகளை வை; உனக்குத் தூண்களை நாட்டு; நீ நடந்த வழியாகிய பாதையின்மேல் உன் மனதை வை; இஸ்ரவேலாகிய மகளே, திரும்பு; இந்த உன்னுடைய பட்டணங்களுக்கே திரும்பு.

22முறைகெட்டுப்போன மகளே, எதுவரை விலகித் திரிவாய்? யெகோவா பூமியில் ஒரு புதுமையை உண்டாக்குவார், பெண்ணானவள் ஆணைச் சூழ்ந்துகொள்ளுவாள்.

23இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: நான் அவர்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, அவர்கள்: நீதியின் இருப்பிடமே, பரிசுத்த பர்வதமே, யெகோவா உன்னை ஆசீர்வதிக்கக்கடவரென்கிற வார்த்தையை யூதாவின் தேசத்திலும் அதின் பட்டணங்களிலும் சொல்லுவார்கள்.

24அதில் யூதாவும், அதனுடைய எல்லாப் பட்டணங்களின் மனிதரும் விவசாயிகளும், மந்தைகளை மேய்க்கிறவர்களும் ஒன்றாகக் குடியிருப்பார்கள்.

25நான் களைப்புற்ற ஆத்துமாவைச் சம்பூரணமடையச்செய்து, சோர்ந்துபோன எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன்.

26இதற்காக நான் விழித்துப்பார்த்துக்கொண்டிருக்கிறேன்; என் நித்திரை எனக்கு இன்பமாயிருந்தது.

27இதோ, நாட்கள் வருமென்று யெகோவா சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் மக்களையும், யூதா மக்களையும், மனிதவித்தினாலும் மிருகவித்தினாலும் விதைப்பேன்.

28அப்பொழுது நான் பிடுங்கவும், இடிக்கவும், நிர்மூலமாக்கவும், அழிக்கவும், தீங்குசெய்யவும் அவர்கள் பேரில் எப்படி எச்சரிக்கையாயிருந்தேனோ, அப்படியே கட்டவும், நாட்டவும் அவர்கள்பேரில் எச்சரிக்கையாயிருப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

29பிதாக்கள் திராட்சைக்காய்களைச் சாப்பிட்டார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசியது என்று அந்நாட்களில் சொல்லமாட்டார்கள்.

30அவனவன் தன்தன் அக்கிரமத்தினாலே இறப்பான்; எந்த மனிதன் திராட்சைக்காய்களை சாப்பிட்டானோ அவனுடைய பற்களே கூசிப்போகும்.

31இதோ, நாட்கள் வருமென்று யெகோவா சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் மக்களுடனும் யூதா மக்களுடனும் புது உடன்படிக்கைசெய்வேன்.

32நான் அவர்கள் முற்பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவர கைப்பிடித்த நாளில் அவர்களுடன் செய்த உடன்படிக்கையைப்போல அல்ல; ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று யெகோவா சொல்லுகிறார்.

33அந்நாட்களுக்குப்பிறகு, நான் இஸ்ரவேல் மக்களுடன் செய்யப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்தில் வைத்து, அதை அவர்கள் இருதயத்தில் எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் மக்களாயிருப்பார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

34இனி ஒருவன் தன் அருகில் உள்ளவனையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி: யெகோவாவை அறிந்துகொள் என்று போதிப்பதில்லை; அவர்களில் சிறியவன்முதல் பெரியவன்வரை, எல்லோரும் என்னை அறிந்துகொள்வார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.

35சூரியனைப் பகல் வெளிச்சத்துக்காகவும் சந்திரன், நட்சத்திரங்களை இரவு வெளிச்சத்துக்காகவும் கட்டளையிட்டவரும், அலைகள் கொந்தளிக்கும் விதத்தில் சமுத்திரத்தைக் குலுக்குகிறவரும், சேனைகளின் யெகோவா என்னும் பெயருடைய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்:

36இந்த அமைப்புகள் எனக்கு முன்பாக இல்லாமல் ஒழிந்துபோனால், அப்பொழுது இஸ்ரவேல் சந்ததியும் எனக்கு முன்பாக என்றைக்கும் ஒரு தேசமாயிராமல் அகன்றுபோகும் என்று யெகோவா சொல்லுகிறார்.

37யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: மேலே இருக்கிற வானங்கள் அளக்கப்படவும், கீழே இருக்கிற பூமியின் அஸ்திபாரங்கள் ஆராயமுடியுமானால், நான் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரையும் அவர்கள் செய்த எல்லாவற்றிக்காகவும் வெறுத்துவிடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

38இதோ, நாட்கள் வருமென்று யெகோவா சொல்லுகிறார்; அப்பொழுது இந்த நகரம், அனானெயேலின் கோபுரமுதல் கடைசிவாசல்வரை கர்த்தருக்கென்று கட்டப்படும்.

39பிறகு அளவுநூல் அதற்கு எதிராய்க் காரேப் என்னும் மேட்டின்மேல் சென்று கோவாத் புறமாக சுற்றிப்போகும்.

40பிணங்களைப் புதைக்கிறதும், சாம்பலைக் கொட்டுகிறதுமான பள்ளத்தாக்குகள் அனைத்தும், கீதரோன் வாய்க்காலுக்கு இப்பக்கம் கிழக்கே இருக்கிற குதிரைவாசலின் கடைசிவரை இருக்கிற எல்லா நிலங்களும் யெகோவாவுக்குப் பரிசுத்தமாயிருக்கும்; பிறகு அது என்றென்றைக்கும் பிடுங்கப்படுவதுமில்லை இடிக்கப்படுவதுமில்லை என்கிறார்.

← Jeremiah 30Read In The App, Free →Jeremiah 32 →

Study Jeremiah 31

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122232425262728293031323334353637383940414243444546474849505152