Jeremiah · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Jeremiah 48

1மோவாபைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், ஐயோ, நேபோ பாழாக்கப்பட்டது; கீரியாத்தாயீம் வெட்கப்பட்டு, பிடிக்கப்பட்டுப்போனது; மிஸ்காப் வெட்கப்பட்டு, கலங்கிப்போனது.

2எஸ்போனைக்குறித்து மோவாபுக்கு இருந்த பெருமை இனி இருக்காது; அது ஒரு தேசமாக இராமல் அதை அழிப்போம் வாருங்களென்று அதற்கு விரோதமாகப் பொல்லாப்பை நினைத்திருக்கிறார்கள்; மத்மேனே, நீயும் அழிக்கப்படுவாய்; பட்டயம் உன்னைத் தொடரும்.

3பாழ்க்கடிப்பினாலும் பெரிய நொறுக்குதலினாலும் உண்டாகிற கூப்பிடுதலின் சத்தம் ஒரொனாயிமிலிருந்து கேட்கப்படும்.

4மோவாப் நொறுங்குண்டது; அதிலுள்ள சிறுவர்கள் கூப்பிடும் சத்தம் கேட்கப்படுகிறது.

5லூகித்திற்கு ஏறிப்போகிற வழியில் அழுகையின்மேல் அழுகை எழும்பும்; ஒரொனாயிமுக்கு இறங்கிப்போகிற வழியில் நொறுக்குதல் செய்கிறதினால் ஏற்படுகிற கூக்குரலை எதிரிகள் கேட்கிறார்கள்.

6உங்கள் உயிர் தப்ப ஓடிப்போங்கள்; வனாந்திரத்திலுள்ள குறுகிப்போன செடியைப்போலிருப்பீர்கள்.

7நீ உன் சம்பத்தையும் உன் பொக்கிஷங்களையும் நம்புகிறதினால் நீயும் பிடிக்கப்படுவாய், அப்பொழுது கேமோஷ் சிறையாக்கப்பட்டுப்போகும்; அதின் ஆசாரியர்களும் பிரபுக்களும் எல்லோரும் சிறைப்பட்டுப்போவார்கள்.

8பாழாக்குகிறவன் எல்லாப் பட்டணங்களின்மேலும் வருவான்; ஒரு பட்டணமும் தப்பிப்போவதில்லை; பள்ளத்தாக்குகளும் கெட்டுப்போகும்; சமனான பூமியும் அழிக்கப்படும் என்று யெகோவா சொன்னார்.

9மோவாபுக்கு இறக்கைகளைக் கொடுங்கள்; அது பறந்துபோகட்டும்; அதின் பட்டணங்கள் குடிமக்களில்லாமல் பாழாய்ப்போகும்.

10யெகோவாவுடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்; இரத்தம் சிந்தாதபடிக்குத் தன் பட்டயத்தை அடக்கிக்கொள்ளுகிறவன் சபிக்கப்பட்டவன்.

11மோவாப் தன் சிறுவயதுமுதல் சுகமாக வாழ்ந்தது; அது ஒரு பாத்திரத்திலிருந்து மறு பாத்திரத்தில் ஊற்றப்படாமலும், அதின் வண்டல்களின்மேல் அசையாமலும் இருந்தது; அது சிறையிருப்புக்குப் போனதில்லை; ஆதலால் அதின் ருசி அதில் நிலைத்திருந்தது; அதின் வாசனை மாறவில்லை.

12ஆகையால், இதோ, நாட்கள் வருமென்று யெகோவா சொல்லுகிறார், அப்பொழுது கவிழ்த்துப்போடுகிறவர்களை அதற்கு அனுப்புவேன்; அவர்கள் அதைக் கவிழ்த்து, அதின் பாத்திரங்களை வெறுமையாக்கி, அதின் ஜாடிகளை உடைத்துப்போடுவார்கள்.

13அப்பொழுது இஸ்ரவேல் சந்ததி தங்கள் நம்பிக்கையான பெத்தேலாலே வெட்கப்பட்டதுபோல, மோவாப் கேமோஷாலே வெட்கப்படும்.

14நாங்கள் பராக்கிரசாலிகளென்றும், நாங்கள் போர்வீரர்களென்றும் நீங்கள் சொல்லுகிறதென்ன?

15மோவாப் அழிந்தது, அதின் பட்டணங்கள் எரிந்துபோயின; அதின் திறமையுள்ள வாலிபர் கொலைக்களத்திற்கு இறங்குகிறார்கள் என்று சேனைகளின் யெகோவா என்னும் பெயருள்ள ராஜா சொல்லுகிறார்.

16மோவாபின் ஆபத்து வரச் சமீபமாயிருக்கிறது; அதின் தீங்கு மிகவும் வேகமாகவருகிறது.

17அதின் சுற்றுப்புறத்தாரும் அதின் புகழை அறிந்தவர்களுமாகிய நீங்கள் எல்லோரும் அதற்காக அங்கலாய்த்துக்கொள்ளுங்கள்; பெலனான தடியும் அலங்காரமான கோலும் எப்படி உடைந்ததென்று சொல்லுங்கள்.

18தீபோன் பட்டணவாசியான மகளே, நீ உன் மகிமையை விட்டிறங்கி, தாகத்துடன் உட்கார்ந்திரு; மோவாபைப் பாழாக்குகிறவன் உனக்கு விரோதமாய் வந்து, உன் மதில்களை அழித்துப்போடுவான்.

19ஆரோவேரில் குடியிருக்கிறவளே, நீ வழியில் நின்று பார்த்துக்கொண்டிரு; நடந்ததென்னவென்று ஓடிவருகிறவனையும் தப்பிவருகிறவனையும் கேள்.

20மோவாப் தோல்வியடைந்ததினால் கலங்கிப்போனது; அலறிக்கூப்பிடுங்கள்; மோவாப் பாழாக்கப்பட்டதென்று அர்னோனில் அறிவியுங்கள்.

21சமனான பூமியாகிய ஓலோனின்மேலும், யாத்சாவின்மேலும், மெபாகாத்தின் மேலும்,

22தீபோனின்மேலும், நேபோவின்மேலும், பெத்திப்லாத்தாயீமின்மேலும்,

23கீரியாத்தாயீமின்மேலும், பேத்கமூலின்மேலும், பெத்மெயோனின்மேலும்,

24கீரியோத்தின்மேலும், போஸ்றாவின்மேலும், மோவாப் தேசத்தில் தூரத்திலும் சமீபத்திலும் இருக்கிற எல்லாப் பட்டணங்களின்மேலும் நியாயத்தீர்ப்பு வரும்.

25மோவாபின் கொம்பு வெட்டப்பட்டது; அவன் கை முறிக்கப்பட்டது என்று யெகோவா சொல்லுகிறார்.

26அவனை வெறிகொள்ளச் செய்யுங்கள்; யெகோவாவுக்கு விரோதமாகப் பெருமைபாராட்டினான்; மோவாப் தான் வாந்தியெடுத்து அதில் புரளுவான்; அவன் பரியாசத்திற்கு இடமாவான்.

27இஸ்ரவேல் உனக்குப் பரியாசமாயிருந்தான் அல்லவோ? அவன் திருடருக்குள் கண்டுபிடிக்கப்பட்டானோ? நீ அவனைக்குறித்துப் பேசுகிறபோதெல்லாம், தலையை ஆட்டுகிறாயே.

28மோவாப் தேசத்தின் குடிகளே, நீங்கள் பட்டணங்களை விட்டுப்போய், கன்மலையில் தங்கி, குகையின் வாய் ஓரங்களில் கூடுகட்டுகிற புறாவுக்கு ஒப்பாயிருங்கள்.

29அவன் அதிக பெருமைக்காரன், மோவாபின் பெருமையையும், அவன் மேட்டிமையையும், அவன் அகந்தையையும், அவன் தற்பெருமையும், அவன் இருதயத்தின் மேட்டிமையையும் குறித்துக் கேட்டேன்.

30அவன் தற்பெருமையையும் நான் அறிவேன் என்று யெகோவா சொல்லுகிறார்; அப்படியாகாது, அவன் வீம்பு செல்லாது என்கிறார்.

31ஆகையால் மோவாபினிமித்தம் நான் அலறி, மோவாப் தேசம் அனைத்தினிமித்தமும் கூக்குரலிடுவேன்; கீராரேஸ் மனிதரினிமித்தம் பெருமூச்சுவிடப்படும்.

32சீப்மாவூரின் திராட்சைச்செடியே, யாசேருக்காக நான் அழுததுபோல உனக்காகவும் அழுவேன்; உன் கொடிகள் கடலைக் கடந்துபோனது; அவைகள் யாசேர் கடல்வரை போய் எட்டின; பாழாக்குகிறவன் உன் வசந்தகாலத்துப் பழங்களின்மேலும், உன் திராட்சைப்பழ அறுப்பின்மேலும் விழுந்தான்.

33பயிர்வெளியிலும் மோவாப் தேசத்திலுமிருந்து சந்தோஷமும் களிப்பும் நீங்கிப்போனது; திராட்சைரசம் ஆலைகளிலிருந்து பொழிகிறதை ஓயச்செய்தேன்; ஆலையை மிதிக்கிறவர்களின் பாடல் இல்லை; அது ஆரவாரமேயல்லாமல் ஆலை மிதிக்கும் பாடலல்ல.

34எஸ்போன் துவங்கி எலெயாலெ, யாகாஸ்வரைக்கும் உண்டாகும் கூக்குரலினிமித்தம் அவர்கள் மூன்றுவயதுக் கடாரியைப்போல், சோவார்துவக்கி ஒரொனாயிம்வரை சத்தமிடுவார்கள்; நிம்ரீமின் தண்ணீர்களும் வற்றிப்போகும்.

35மோவாப் தேசத்து மேடைகளில் பலியிடுகிறவனையும் தன் தெய்வங்களுக்கு தூபங்காட்டுகிறவனையும் ஓயச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

36ஆகையால், மோவாபினிமித்தம் என் இருதயம் நாதசுரம்போல் துயரமாய் தொனிக்கும்; கீராரேஸ் மனிதருக்காகவும், என் இருதயம் நாதசுரம்போல் துயரமாய் தொனிக்கும்; அவர்கள் சம்பாதித்த ஐசுவரியம் அழிந்துபோகிறதினால் அப்படித் தொனிக்கும்.

37தலைகள் எல்லாம் மொட்டையிடப்பட்டும், தாடிகள் எல்லாம் கத்தரிக்கப்பட்டும் இருக்கும்; கைகளில் எல்லாம் கீறுதல்களும், இடுப்புகளில் சணலாடைகள் உண்டு.

38மோவாபின் எல்லா வீடுகளின்மேலும் அதின் தெருக்களிலேயும் புலம்பல் உண்டாகும்; ஒருவரும் விரும்பப்படாத பாத்திரம்போல மோவாபை உடைத்துப்போட்டேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

39மோவாப் எவ்வளவாக முறிந்துபோனதென்று அலறுகிறார்கள்; அது முதுகைக்காட்டி எவ்வளவாய் வெட்கப்படும்? இப்படி மோவாப் தன் சுற்றுப்புறத்தார் அனைவருக்கும் பரியாசமும் திகைப்புமாயிருக்கும்.

40இதோ, ஒருவன் கழுகைப்போல் பறந்துவந்து, மோவாபின்மேல் தன் இறக்கைகளை விரிப்பான்.

41கீரியோத் பிடிக்கப்படும், கோட்டைகள் கைவசமாகும்; அந்நாளில் மோவாபின் பராக்கிரமசாலிகளுடைய இருதயம் பிரசவவேதனைப்படுகிற பெண்ணின் இருதயம்போல இருக்கும்.

42மோவாப் யெகோவாவுக்கு விரோதமாகப் பெருமைபாராட்டினதினால், அது ஒரு மக்கள் கூட்டமாக இராமல் அழிக்கப்படும்.

43மோவாப் தேசத்தின் விவசாயியே, திகிலும், படுகுழியும், கண்ணியும் உன்மேல் வரும் என்று யெகோவா சொல்லுகிறார்.

44திகிலுக்கு விலக ஓடுகிறவன் படுகுழியில் விழுவான்; படுகுழியிலிருந்து ஏறுகிறவனோ கண்ணியில் பிடிபடுவான்; அவர்கள் விசாரிக்கப்படும் வருடத்தை அதின்மேல், அதாவது, மோவாபின்மேல் வரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

45கடுமையான அடிக்குத் தப்ப ஓடிப்போகிறவர்கள் எஸ்போனின் நிழலில் ஒதுங்கி நின்றார்கள், ஆனாலும் நெருப்பு எஸ்போனிலும், நெருப்பு ஜூவாலை சீகோன் நடுவிலுமிருந்து புறப்பட்டு, மோவாப்தேசத்தின் எல்லைகளையும், கலகம் செய்கிறவர்களின் உச்சந்தலையையும் எரிக்கும்

46மோவாபே, உனக்கு ஐயோ, கேமோஷ் சிலைக்கு அருகிலுள்ள மக்கள் அழிவார்கள், உன் மகன்களும் சிறைபிடிக்கப்படுகிறார்கள், உன் மகள்களும் சிறைபிடிக்கப்பட்டுப்போகிறார்கள்.

47ஆனாலும் வரும் நாட்களில் மோவாபின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று யெகோவா சொல்லுகிறார். மோவாபின்மேல் வரும் நியாயத்தீர்ப்பின் செய்தி இத்துடன் முடிந்தது.

← Jeremiah 47Read In The App, Free →Jeremiah 49 →

Study Jeremiah 48

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122232425262728293031323334353637383940414243444546474849505152